(எம்.மனோசித்ரா)
துறைமுக நகர ஆணைக்குழு தேசிய சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு. எனவே உடனடியாக மகா சங்கத்தினரை தெளிவுபடுத்த வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் வலியுறுத்தினார்.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான சர்ச்சை குறித்து அரசாங்கம் மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் நாட்டின் இறையாண்மைக்கும் தேசிய சொத்துக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நிச்சயம் குரல் கொடுப்போம்.
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை நாம் எதிர்க்கவில்லை.
ஆனால் அந்த வேலைத்திட்டங்கள் எந்தவொரு வகையிலும் இலங்கையின் சட்ட கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டதாக அமைந்துவிடக் கூடாது. எனவே இது போன்ற விடயங்களில் வெளிப்படைத் தன்மை பேணப்பட வேண்டும்
கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது ஆரம்பிக்கப்பட்டது.
தமக்கான இலாபத்தை இலக்காகக் கொண்டு தான் இந்த வேலைத்திட்டத்தில் சீன முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
அதற்கமையவே இரு தரப்பு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் போதும் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இவ்வாறான நிலையிலேயே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சட்ட மூலத்தில் நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் காணப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அதன் உள்ளடங்கள் தொடர்பில் முறையாக மகா சங்கத்தினருக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்தப்படவில்லை.
ஒருபுறம் இதற்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்படுகின்ற நிலையில் மறுபுறம் அரசாங்கத்தின் சார்பில் அவ்வாறு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலம் தொடர்பில் இவ்வாறு பரவலாகப் விமர்சிக்கப்படுகின்றமையால் அரசாங்கத்தினால் இதன் உண்மை நிலைமை என்ன என்பது தொடர்பில் மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
எனவே ஆளுந்தரப்பினர் அல்லது இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் மகா சங்கத்தினரை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என்று கோருகின்றோம்.
அவ்வாறில்லை எனில் முழுமையான விபரங்களை அறியாமல் எம்மால் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது.
ஆனால் அரசாங்கம் எந்தவொரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தாலும் அதனை நாட்டின் சட்ட கட்டமைப்பிற்குட்பட்டதாக ஒழுக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும். மாறாக அவை நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தால் அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு நாம் பின்வாங்கப் போவதில்லை.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.
ஆனால் அந்த வேலைத்திட்டங்கள் நாட்டின் இறையாண்மைக்கும் தேசிய வளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இவ்வாறான சிக்கல்களே காணப்பட்டன. எனினும் நாட்டு மக்கள் , தொழிற்சங்கங்கள் , மகா சங்கத்தினர் உள்ளிட்டோரின் ஐக்கியத்தால் இதனை இந்தியாவிற்கு வழங்குவதை தடுக்க முடிந்தது.
எனவே இவ்வாறு நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்ட மூலம் காணப்பட்டால் அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.
எந்தவொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாயினும் அதில் வெளிப்படை தன்மை பேணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரண விடயமாகும். ஆனால் அரசாங்கத்திற்குள்ளேயே இதற்கு எதிர்ப்புக்கள் வெளியாகின்றன என்றால் அது தொடர்பில் நிச்சயம் அவதானம் செலுத்த வேண்டும். எனவே தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் , அதற்கான காரணி குறித்து அரசாங்கம் மகாசங்கத்தினருக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM