தமிழகத்திலிருந்து எம்.காசிநாதன்
“ஆளுமை மிக்க தலைவர்கள்” மறையும் போது எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்று பம்பரப்பாக களத்தில் இறங்கி தேசியக் கட்சிகள் பிரசாரத்தில் குதிப்பது தமிழக அரசியலுக்கு புதிதல்ல.
எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் “ஜெ- அ.தி.மு.க.” “ஜா-அ.தி.மு.க.” என இரு அணிகளாக அ.தி.மு.க. பிரிந்து கிடந்த போது காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி இதே மாதிரியொரு முயற்சியில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டிற்கு 13 முறை பயணம் செய்து- குக்கிராமங்களுக்கு எல்லாம் சென்று- குடிசைகளுக்குள் எல்லாம் புகுந்து காங்கிரஸின் செல்வாக்கை நிலைநிறுத்த தீவிரப் பிரசாரம் செய்தார்.
அன்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையான - மக்கள் மனதில் ஒரு மரியாதைக்குரிய தலைவராக மூப்பனார் இருந்த போதும் கூட- அக்கட்சி 1989 சட்டமன்றத் தேர்தலில் 20 சதவீத வாக்குகள் என்ற எல்லைக் கோட்டைத் தாண்ட முடியவில்லை.
பிளவுபட்ட அ.தி.மு.க.- ஜெயலலிதா என்ற புதிய தலைமை இருந்த நேரத்தில் கூட தமிழகத்தில் 20 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்கட்சியாக வருவதற்கே போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஆனது.
அதே முயற்சியை தற்போது பா. ஜ. க. தமிழகத்தில் செய்கிறது. மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகள் போராட்டம் வட மாநிலங்களில் அதிவேகமெடுத்து- வருக்கிறது. இதனால் தேர்தல் நஷ்டங்கள் வருமோ என்று முன் கூட்டியே சிந்திக்கும் பா.ஜ.க. தலைமை- மேற்கு வங்க மாநிலத்தையும்- தமிழ்நாட்டையும் குறி வைத்து அரசியல் காய்களை நகர்த்துகிறது.
ஆனால் தமிழக நிலைமை சற்று வித்தியாசமானது. ஜல்லிக்கட்டு விழாவைப் பார்க்க ராகுல் காந்தி வந்தார் என்றதும்- போட்டியாக பொங்கல் விழாவிற்கு மதுரை வந்தார் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா. வேலூரில் பிரசாரம், தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் தொடர் ஆலோசனை, வேலூரில் சில முக்கிய பிரபலங்கள் இணைவு. குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பா.ஜ.க.விற்கு வருகை என்று நிலைமைகள் தொடர்கின்றன.
இந்த சுறுசுறுப்பின் பின்னணி என்ன? அ.தி.மு.க. என்ற இயக்கம் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு- “ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி” என்ற இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருகிறது.
இப்போது சசிகலாவின் வருகை அதில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆறு மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து வர வேண்டிய சசிகலா 23 மணி நேரம் எடுத்துக் கொண்டு- ஆங்காங்கு வரவேற்பை பெற்று வந்து சேர்ந்ததே- “அ.தி.மு.க.வை மீட்க நான் தயார்” என்ற சமிக்ஞையை கொடுத்துள்ளது.
அவரது பேட்டிகளும் அ.தி.மு.க.வுடன் மோதுவதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்கிறார் என்பதையே காட்டுகிறது.1989இல் “ஜெ-ஜா” என்று பிரிந்து நின்ற அ.தி.மு.க. இப்போது “ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்” “சசிகலா” என்று பிரிந்து நிற்கிறது. இந்தப் பிரிவினைப் பயன்படுத்தி- தி.மு.க.விற்கு எதிரான வாக்காளர் மனதில் நாம் இடம் பிடித்து விட வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை மளமளவென பிரசாரக் களத்திற்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் தயவில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி நடத்தவில்லை. தமிழகத்தில் அக்கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லை. எம்.பி.க்களும் இல்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு வெளிவந்த மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் “ஒரு இலட்சம் கோடி மதிப்பில் சாலை போடும் பணிகளை செய்யப் போகிறோம்” என்று அறிவித்துள்ளது.
“இது வெறும் அறிவிப்பு. நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படவில்லை” என்று தி.மு.க. தரப்பிலும்- வேறு எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டியிருந்தாலும், இப்படியொரு அறிவிப்பை பா.ஜ.க. வெளியிட்டதே தமிழகத்தில் அக்கட்சி தனிக்கவனம் செலுத்துகிறது என்பதை தெளிவாக்குகிறது.
பா.ஜ.க. வியூகத்தின் இன்னொரு வெளிப்பாடுதான் பிரதமர் நரேந்திரமோடியே நேரடியாக தமிழகம் வந்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப் போகிறார்.
இருப்பினும் தமிழகத்தில் பா.ஜ.க. எப்படி பலமாகப் போகிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. முதலில் ரஜினி வருவார் என்று நம்பியது பா.ஜ.க. அவர் வந்திருந்தால்- அ.தி.மு.க.- ரஜினி- பா.ஜ.க. என்ற ஒரு கூட்டணியே கூட உருவாகியிருக்கலாம். இப்போது ரஜினிக்கு பதில் சசிகலா வந்து விட்டார். ஆனால் சசிகலா உள்ளடக்கிய கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற இதுவரை விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் அ.தி.மு.க கூட்டில் எஞ்சியிருப்பது டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியும்இ நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு. திஇக. வுமும் தான்.
இந்த இரு கட்சிகளுமே தனித்தனியாக அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பேரம் பேசிக் கொண்டிருந்தாலும் இந்த கட்சிகள் பா.ஜ.க.வின் கட்டளையைத் தாண்டிச் சென்று விட முடியாத நிலையில் பா.ஜ.க.உள்ளது. இப்படியொரு நெருக்கடி இருப்பதால்தான்- அதிமுக தலைமை “முதலில் பா.ஜ.க.வுடனான தொகுதிப் பங்கீட்டை முடிப்போம். பிறகு பா.ம.க.இ தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் பேசுவோம்” என்று கருதி- பா.ம.க.இ தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளையும் “காத்திருப்பு பட்டியலில்”வைத்திருக்கிறது.
இந்த சூழலைத்தான் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது பா.ஜ.க. அ.தி.மு.க. ஆட்சியில் நீடிக்க மட்டுமல்ல- தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் அதிகாரம் போன்றவற்றிற்கும் பா.ஜ.க.வைத்தான் நம்பியிருக்கிறது அ.தி.மு.க. அதுமட்டுல்ல- சசிகலாவின் போர்க்கொடி “இரட்டை இலை”ச் சின்னம் வரை சென்றால்- அப்போது அ.தி.மு.க.விற்கு சாதகமான இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அ.தி.மு.க. இரட்டை தலைமையிடம் இருக்கிறது.
இந்த நிர்பந்தங்களைப் பயன்படுத்தித்தான் “60 சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் “என்ற கோரிக்கையை அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. தலைமை வைத்திருக்கிறது. “2011 சட்டமன்றத் தேர்தலில் 2-ஜி வழக்கு விசாரணையைக் காட்டி காங்கிரஸ் கட்சியே கருணாநிதி தலைமையிலான தி.மு.க.விடமிருந்து 63 சட்டமன்ற தொகுதிகளைப் பெற முடிந்தது என்றால்- நான்கு வருடங்கள் அ.தி.மு.க. ஆட்சியை நீடிக்க வைத்த- ஓ.பி.எஸ்இ இ.பி.எஸ் தலைமைக்கு இரட்டை இலையைக் கொடுத்த எங்களால் ஏன் 60 தொகுதிகளைப் பெற முடியாது” என்கிறார் தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஒருவர்.
ஆனால் அ.தி.மு.க. முன்னனித் தலைவர்களில் ஒருவரோ, “60 தொகுதிகள் கொடுத்தால் மீதிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளைக் கொடுப்பது? 2011ல் தி.மு.க. குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டது போல் நாங்களும் குறைந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டிய சூழல் வரும்” என்கிறார்.
பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வின் விருப்பத்தைப் பார்த்தால்- இரு கட்சிகளிலும் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதற்கு கால அவகாசம் இருக்கிறது என்றாலும் - அதற்குள் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பிரசாரத்தைப் பலப்படுத்துவோம் என்பதில் அக்கட்சி தலைமை மும்முரமாக இருக்கிறது. முனைப்புடன் செயல்படுகிறது. “ஆட்சிக்கு வர வேண்டும்” என்பது 2021 சட்டமன்றத் தேர்தலின் பா.ஜ.க. இலக்கு அல்ல! “2026இல் தமிழகம் நம் கைக்குள் இருக்க வேண்டும்” என்பதே தற்போது அக்கட்சி அமைத்துள்ள பாதை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM