VIRAKESARI ONLINE

--- -Reporting Sri Lanka News in Tamil

 
   You are in :   Home »  News »  : Full Story  ---------------------------------------------------------------------------------------  Contact us | Add to favourites | Fonthelp
வட.- கிழ. புது முகங்களுடன் சேவையாற்றக் காத்திருக்கின்றேன் : நிருபமாவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு _    
வீரகேசரி இணையம் 3/8/2010 9:48:57 AM Share
_Follow Virakesari on Twitter
  "நாட்டில் சமாதானம் நிலை நாட்டப்பட்டதன் பின்னர் மக்கள் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்வதற்கு நாடளாவிய ரீதியில் முதல் தடவையாக தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அந்த தேர்தலில் பங்கு பற்றுவதற்கென அவர்கள் மிகுந்த உற்சாகத்தைக் காண்பித்து வருகிறார்கள்.

குறிப்பாக வடக்கு, கிழக்கிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவிருக்கும் பல புதிய முகங்களுடனும் தலைவர்களுடனும் சேவையாற்ற நான் காத்திருக்கின்றேன்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேராதனையில் நிறுவப்பட்டுள்ள இலங்கை-இந்திய ஆங்கில மொழிப் பயிற்சி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியமை குறித்த தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்ட நிருபமா ராவ், "ஜனாதிபதியின் வெற்றி இந்திய-இலங்கை உறவை மேலும் விருத்தி செய்ய உதவும். நான் இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராகக் கடமையாற்றிவிட்டுச் சென்ற பின்னர் இலங்கையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஜனாதிபதியின் வெற்றி இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பரஸ்பர உறவுகளை எதிர்காலத்தில் மேலும் விருத்திசெய்ய உதவும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது என்பதுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய வேண்டுமென பிரதம மந்திரி மன்மோகன் சிங் விரும்புகின்றார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 1,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் முன்வந்துள்ளமை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக நடைமுறையில் மக்கள் காட்டுகின்ற ஆர்வம் மற்றும் உற்சாகம், சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னரான மாற்றங்களை எடுத்துக்காட்டுகின்றது. நான் சென்றவிடமெல்லாம் மக்கள் மனங்களில் நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியன நிலவுவதை அவதானிக்க முடிந்தது.

இலங்கை சிறார்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நோக்கம் பாராட்டுக்குரியது. இந்த முயற்சியில் இந்தியா தனக்கு முடிந்த உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தின் போது இந்தியாவிலிருந்து 3.000க்கும் அதிகமான யாத்திரிகர்கள் கலந்து கொண்டமை இரு நாட்டு மக்களினதும் பரஸ்பர புரிந்து கொள்ளும் தன்மைக்கும் ஒற்றுமைக்கும் மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவு வெற்றியடைந்துள்ளது. இன்னமும் சுமார் 70,000 பேர் வரையிலானோரே மீளக் குடியமர்த்தப்பட இருக்கும் நிலையில், சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் திருப்தியடைந்திருக்கும். இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் பணிகளில் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவ காத்திருக்கின்றது" என்று கூறினார்.

ஜனாதிபதி கருத்து

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

"நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நாடளாவிய ரீதியில் முதல் தடவையாகப் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது அதில் பங்குபற்ற மக்கள் மிகுந்த உற்சாகத்தை காண்பித்து வருகிறார்கள்.

குறிப்பாக நாடாளுமன்றத்திற்கு வடக்கு, கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்படவிருக்கும் பல புதிய முகங்களுடனும் தலைவர்களுடனும் சேவையாற்ற நான் காத்திருக்கின்றேன்.

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஆங்கிலத்தை ஒரு வாழ்க்கைத் திறன் பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற தமது கொள்கையை முன்னெடுப்பதற்கு இந்தியா அளித்துவரும் உதவிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்" என்றார்.

வடக்கில் ரயில் பாதைகளை முற்றாக புனரமைப்பதிலும் இந்தியா அக்கறை காண்பித்து வருகிறது. இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், திருகோணமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் அனல் மின் நிலையம், சுற்றாடலையும் உயிரியல் வாழ்க்கை முறைமையையும் பாதுகாப்பது தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய புரிந்துணர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றியும் ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார செயலாளரும் கலந்துரையாடினார்கள்.

சந்திப்புக்குப் பின்னர், ஜனாதிபதி ராஜபக்ஷ நிருபமா ராவுக்கு பகல் போசன விருந்து அளித்துக் கௌரவித்தார்.

இந்தச் சந்திப்பிலும் பகல் போசன விருந்திலும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் காந்தா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் றொமேஷ் ஜயசிங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ___ E-mail to a friend 


Print This Page E-Mail to a Friend BACK
Comments
 
இன்று ஈ-பேப்பர் முதல் பக்கம்
epaper.virakesari.lk
www.vidivelli.lk
;
www.virakesari.lk on Facebook
 
Site best viewed in IE ver 6.0 and above @ 1024 x 768 resolution | Technical Contact: webmaster@virakesari.lk| Online Editorial: onlinenews@virakesari.lk   
© 2010 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online