ஒரு சாதகத்திலுள்ள பன்னிரு ராசிகளிலும் எது முதன்மையானது எது இறுதியானது என்றெல்லாம் அறுதியிட்டுக் கூறமுடியாது. எது நல்லது எது நல்லவென்று தராதரம் பார்க்கவும் முடியாது. தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமே சித்திரை மாதப் பிறப்பு அன்று நவக்கிரகங்களிலும் முதன்மையான சூரியன் மீனத்திலிருந்து மேடராசிக்கு மாறுகிறார். இதனை வைத்தே மேடத்தை முதன்மையாகக் கொண்டு இராசி பலன் பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. இராசியென்பது வேறு. இலக்கினமென்பது வேறு. இலக்கினம் உயிரென்றால் ராசி உடலாகும். இலக்கினம் அத்திவாரமென்றால் அதன் மீது எழுந்துள்ள கட்டடமே ராசி அதாவது உயிராகிய இலக்கினம் குடிகொண்டுள்ள உடலாகிய சந்திரன் இருக்குமிடம். மேடத்திற்கு அதிபதி செவ்வாய். இலக்கினம் என்பது ராசிகளில் முதலாம் வீடு. இங்கே சந்திரன் அமரும்போது இலக்கினமும் ராசியும் ஒன்றாகிறது.
மேட லக்கினத்திற்கு முக்கியமானதே செவ்வாயும் சந்திரனும் இணைந்திருப்பதுதான். இந்த இலக்கினத்திற்கு நாலாம் வீடான கடகம் சுகத்தைக் குறிக்கும் ஸ்தானமாகும். இது சந்திரனின் சொந்த வீடு; ஆட்சி வீடு. அது பெற்ற தாயைக் குறிக்கும் வீடுமாகும். அத்துடன் வீடு, வாகனம், முத்து, பவளம், தங்கம் வெள்ளியென்று நகை நட்டுகளுக்கும் காரகனாக கடகச் சந்திரனே விளங்குகின்றான். பிருகத் சாதகம், ஜாதக அலங்காரம் போன்ற சோதிடக் கிரந்தங்கள் எல்லாம் சந்திரனும் செவ்வாயும் இணைந்திருப்பதை மாபெரும் ராஜயோகமாக வர்ணிக்கின்றன. பெண்களின் சாதகங்களில் இதனை 'சந்திர மங்கள யோகம்' என்பர்.
இலக்கினமெனப்படும் முதலாம் வீடு மற்றும் 4 ஆம் 7 ஆம் 10 ஆம் வீடுகளில் இவ்விரு கிரகங்களும் இணைந்திருந்தால் யோகமாகும். வீரியமான செவ்வாயோடு சுகாதிபதியான சந்திரன் சேரும்போது வீரியம் காரியமாகும். ஆக்கபூர்வமான காரியங்களை ஆற்றுவார்கள். இது வீரமும் விவேகமும் சேர்ந்த அம்சமாகும். எங்கு எழுச்சி கொள்ள வேண்டும்; எங்கு அடக்கி வாசிக்க வேண்டும் என்ற சூட்சுமம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இந்த யோகமுள்ளவர்களுக்கு நாற்புறமும் மரங்கள் அடர்ந்து குளிர்மை கோலோச்சும் ஆற்றங்கரையோர வீடுகளே வாசஸ்தலங்களாக வந்தமையும் எந்த மொழியாக இருப்பினும் குறுகிய கால அவகாசத்தில் அந்த மொழியைக் கற்றுக் கொள்வார்கள். எங்கு வாழ்ந்தாலும் அந்தச் சூழலுக்கேற்ற விதத்தில் தங்களை மாற்றியும் கொள்வார்கள்.
மேட லக்கினத்தில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்திருந்து பாவக் கிரகங்களின் பார்வை படாமலிருந்தால் அத்தகையவர் பரம்பரைப் புகழ்பெற்ற ஒரு பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவராயிருப்பார். வீடு, தோட்டம், துரவு, வாகனமென்று சௌகரியங்களோடும் இருப்பார். நான்கு வயதிலேயே பத்து வயதுக்குரிய முதிர்ச்சி அவரிடம் தெரியும். எவ்வளவு கடினமான சூழல் ஏற்பட்டாலும் அதிலெல்லாம் பாதிக்கப்படாத சமநிலையான மனதோடு விளங்குவார். Real Estate கட்டட நிர்மாணம் போன்ற துறைகளில் கொடி கட்டிப் பறப்பார். நகரங்களிலோ புறநகர்களிலோ கடலோர அல்லது நதியோர இரம்மிமான சூழல்களில் வாசஸ்தலங்களை எழுப்பி விற்பனை செய்யும் வர்த்தகர்களின் சாதகங்களை ஆராய்ந்தால் இவ்விதம் அமைப்பு இருக்கக்காணலாம். இன்னொரு புறம் புற்றுநோய் மருத்துவத்துறையில்புகழ்பெற்று விளங்கும் மருத்துவர்களின் சாதகங்களிலும் இந்த அமைப்பு இருக்கும்.
மேட லக்கினத்திற்கு இரண்டாமிடமான இடபராசியில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்திருந்தாலும் நன்மையே. ஏனெனில் மேடத்திற்கு சுகாதிபதியான சந்திரன் இங்கு உச்சமடைகிறார். செவ்வாய்க்கும் இது நட்பு வீடாகும். இவ்விதம் அமைந்தவருக்கு பெற்றதாய் மிகவும் அனுசரணையாக இருப்பதோடு நெடுநாள் உயிர் வாழவும் செய்வாள். இத்தகையவர் பரீட்சை எழுதப் போனால் புத்தகத்தில் படித்ததை அப்படியே கொண்டு போய் ஒப்புவிக்கமாட்டார். படித்ததோடு அது தொடர்பாக நடைமுறையில் தாம் ஆராய்ந்து கண்டவற்றையும் தொடர்புபடுத்தி எழுதும் நுண்ணறிவு கொண்டவராயுமிருப்பார். அவரவர் கைக்கொண்ட துறைகளில் இத்தகையோர் மற்றவர்களை விட பிரகாசிப்பதற்கு இதுவுமொரு காரணமாயிருக்கும். இவரிடம் பணப் புழக்கம் அதிகமிருப்பதால் கணக்கு வழக்கில்லாமல் செலவழிப்பவர்களாகவும் கொடுத்து ஏமாறுகிறவர்களாயுமிருப்பர். அனாவசியமாக மற்றவர் விடயத்தில் தலையிட்டுக் கொண்டேயிருப்பார். மற்றவர்களால் இவரைப் புரிந்து கொள்ள முடியாது. தன்னை ஒரு புரியாத புதிராக வெளிப்படுத்திக் கொள்வதைத்தான் இவரும் விரும்புவார். சண்டைக்காரராகவும் சமாதான விரும்பியாகவும் மாறி மாறி இயங்குவார். திறமையான கண் மருத்துவர்களின் சாதகங்களில் இந்த அமைப்பு இருக்கும். தந்தையின் தொழிலையே தனயனும் செய்து முன்னேறுவார். அவதியான நகர வாழ்க்கைக்குள் சீவித்தாலும் அமைதிக்காகச் சென்று ஓய்வெடுக்க கிராமப் புறங்களில் வீடுகள், தோட்டங்கள் இவருக்குண்டு.
மிதுனமாகிய மூன்றாமிடத்தில் செவ்வாய், சந்திரன் கூடியிருந்தால் படித்த படிப்பொன்று பார்க்கும் வேலையொன்று என்றிருக்கும். சட்டத்தாரணிக்கென்று படித்துவிட்டு பள்ளியில் சென்று ஆசிரியராகப் பணி செய்வார். இவரது குடும்பம் பக்திப்பரம்பரையானால் இவர் அதற்கு நேர்மாறாக நாத்தழும்பேற நாத்திகம் பேசித்திரிவார். மிதுனத்திலுள்ள புனர்பூச நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்திருந்தால் கவிஞர் நாவலாசிரியர் எனப் பேரெடுப்பார். உடன் பிறப்புகளோடு சதா சண்டையும் சச்சரவுமாக இருப்பார். காம உணர்ச்சி மிகுந்திருக்கும். தவறான நட்புகள், தொடர்புகளால் தமது கௌரவத்தை இழப்பார். ஆனாலும் இரவு முழுவதும் நண்பர்களுடன் கூடிக் களித்துவிட்டு காலையில் சென்று பரீட்சை எழுதி சித்தி பெறும் மாணவர் இவர் மட்டுந்தான். தாயார் எப்போதும் நோயாளியாயிருக்கவும் பலனுண்டு.
கடகராசி சந்திரனின் ஆட்சி வீடு. ஆனால் செவ்வாய் இங்கே நீசமாகிறார். நீசமென்றால் தனது சுயம், வலிமை யாவையும் இழத்தல். ஆகவே இவ்வித கிரக அமைப்பைக் கொண்டவருக்கு எதிலும் சுயமாக முடிவெடுக்கும் குணமிராது. எதிலுமே ஓர் அவசரம், படபடப்பு இருக்கும். அமைதியாக இருந்து யாரிடமாவது கேட்டு முடிவெடுப்பது இவருக்கு நல்லது. சந்திரன் இங்கு வலிமையாக இருப்பதால் இவர் தன் தாயின் சாடையிலேயே விளங்குவார். சந்திரனுடன் கூடி கேந்திரம் பெறுவதால் செவ்வாய்க்கு நீசபங்கமும் இருக்கிறது. அதனால் இருவரும் இணைந்து அரசியல் செல்வாக்கு தொலைநோக்கு சிந்தனைகள் என்றெல்லாம் உயர்த்திக் கொண்டேயிருப்பார்கள். தலைமைப் பண்புகள் நிறைந்திருக்கும். நாட்டியம், நாடகம், சமையற்கலை, ஆடைவடிவமைப்பு போன்றவற்றில் ஈடுபட்டும் புகழ்பெறுவர். கடற்றொழில் கப்பல் போக்குவரத்துத் துறைகளிலும் பணியாற்றி வளம்பெறுவர்.
சிம்மம் சூரியனின் ராசி. இதில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து மகம் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் பெரும் யோகமுள்ளதாகும். (உதாரணம் மறைந்த செல்வி ஜெயலலிதா) வசதி வாய்ப்புகள் எல்லாம் கூடுதலாகவே கிடைக்கும். அத்தை, புத்தி, வித்தை, தாய்மாமன், குல தெய்வம் போன்றவைகளைக் கூறுமிடமாக இது இருக்கிறது. எனவேதான் தாய்வழிக் குலதெய்வத்தை இவர்களும் வழிபடுகிறார்கள். எப்போதும் தாய்வழிச் சொந்தங்களுக்கே முக்கியத்துவமும் அளிப்பர். குழந்தைப் பாக்கியம் தாமதமடையும். எப்போதும் பெண் குழந்தைகளே இவர்களுக்கு அதிர்ஷ்டமானவைகளாக இருக்கும். சொந்த ஊரைவிட்டு தென் மேற்கு அல்லது வடமேற்கு திசைநோக்கி இடம்பெயர்ந்தால்தான் பெரிதாக எதனையும் சாதிப்பார்கள். மிகுந்த பிடிவாத குணமுள்ளவர்கள். இவர்களது கனவுகளில் எதிர்காலம் குறித்த விடயங்கள் தெளிவாகத் தெரியும்.
அடுத்து கன்னிராசியில் நாலாம் வீட்டுக்குரிய சந்திரனும் இலக்கினாதிபதியான செவ்வாயும் கூடியுள்ளனர். இரு கிரகங்களுக்குமே இதுவொரு மறைவுத் தானம். இத்தகையவர் ஒரு பரபரப்பான பேர்வழி. ஆனாலும் எதிலும் நீடித்த புத்தியுடனோ கொள்கையுடனோ செயற்படமாட்டார். அடிக்கடி தமது முடிவுகளை மாற்றிக் கொண்டேயிருப்பார். எவ்வளவு சம்பாதித்தாலும் கையிலே காசு தங்காது. வெளிநாட்டு வாழ்க்கை தான் இவர்களுக்கு விதி .பெரும்பாலும் கப்பல் துறைகளில பணியாற்றி நாட்டுக்கு நாடு அலைந்து கொண்டிருப்பர். சிறு வயது முதலே பெற்றதாயைப் பிரிந்த வாழ்க்கையிருக்கும் தாய்க்குள்ள நோயெல்லாம் இவருக்குமிருக்கும். சிலருக்கு திக்கு வாயும், சிலருக்கு வாய் நிறைய தெற்றுப் பற்களுமிருக்கும்.
செவ்வாயும் சந்திரனும் களத்திர வீடான துலாமில் ஒன்று கூடி மேட லக்கினத்தை நேர்ப்பார்வை பார்ப்பது அருமையான விடயம். இவ்விதம் அமைந்தோர் ஆண்களாயின் கவர்ச்சிகரமான தோற்றமிருக்கும். பெண்ணாயின் பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்திருப்பாள். மற்றவர்களுக்கு சாதனைக்குரிய விடயங்கள் இவர்களுக்கு சாதாரணமான விடயங்களாயிருக்கும். தாரம் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதுபோல இவர்களுக்கு நல்ல மனைவியோ கணவனோ வாய்ப்பது பிறவிப் பயனாயிருக்கும். தாய் வழி, அல்லது தாய்மாமன் வழி உறவிலேதான் திருமணம் நடக்கும். மனைவி வழிச் சீதனமும் ஏராளமாய்க் கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்கமில்லாமல் நெடுநாள் பிரகாசிப்பதும் இவர்கள்தான்.
அட்டமத்து வீடான விருச்சிகத்தில் செவ்வாயும் சந்திரனும் கூடியிருப்பது எவ்வகையிலும் நல்ல அமைப்பாகத் தெரியவில்லை. செவ்வாய்க்கு இது ஆட்சி வீடாயினும் சந்திரன் இங்கு நீசமடைகிறார். சிறு வயதிலேயே தாயை இழத்தல், தந்தை மறுமணம் புரிதல், மாற்றாந்தாய்க் கொடுமை என்றெல்லாம் இச் சேர்க்கையின் பலன்கள் சொல்லப்படுகின்றன. திறமையிருக்கும்; அதனை வெளிப்படுத்த முடியாத தாழ்வு மனப்பான்மையுமிருக்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாதல், ஏதோவொரு செயலுக்காக சமூகத்தால் தவறாகப் பார்க்கப்படுதல் என்றெல்லாம் நேரிடும். மூத்த சகோதரியின் தவறான அல்லது இழுக்கான திருமணத்தால் இவரும் பாதிக்கப்பட்டிருப்பார். இதனால் இவரது திருமணமும் நடைபெறாது தடைப்படும். இப்படியான சூழல்களால் மதுவென்றும் போதையென்றும் தவறான பழக்கங்களுக்கு உட்படுவார். இவர்களில் ஆண்களுக்கு மூல வியாதி பரம்பரை நோயாகவிருக்கும். பெண்களுக்கு கர்ப்பக் கோளாறுகள் உடன் பிறந்த வியாதிகளாயிருக்கும். பூமிக்கடியில் ஓடும் நீரோட்டத்தைக் கண்டுபிடித்து கிணறுகள் அமைத்தல், புதையல் தோண்டுதல் போன்ற நுட்பமான பணிகளில் இவர்கள் வல்லவர்களாயிருப்பர். விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெறுவதால் சொந்த வாழ்க்கையில் எப்படித்தான் கூனிக் குறுகியிருந்தாலும் பொது வாழ்க்கையில் இறங்கிவிட்டால் பெரிய ஆட்களாக ஆளுமையோடு திகழ்வார்கள்.
தனுசுராசியில் மேட லக்கினாதிபதி செவ்வாய் இருப்பது நல்லதே. இது தந்தையை விட அதிகமாக சம்பாதித்து உயர வைக்கும். தாய் ஸ்தானத்திற்குரிய சந்திரனுக்கு தனுசு ஆறாம் வீடாகி அங்கு மறைவதால் பெற்ற தாய் மீது வெறுப்புக் காட்ட வைக்கும். தாய் நாட்டைத் தாண்டி வெற்றி பெற வைக்கும் கிரக அமைப்பு இதுவாகும்.
உப்பு மற்றும் மருந்து வியாபாரம் (Pharmacy) செய்து முன்னேறலாம். ஆயுதங்களுடன் புழங்குவது ஆபத்தாக முடியும்.
பத்தாமிடமான மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். கூடியிருக்கும் சந்திரன் தன் வீட்டை (கடகம்) நேர்ப்பார்வையாய் பார்க்கிறார். அதிலும் மகரத்தில் வரும் திருவோண நட்சத்திரத்திலேயே சந்திரன் சஞ்சரித்தால் மிக்க விசேடமாகும். இதனால் முதல் தரமான இராஜயோக முண்டாகும். (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சாதகத்திலும் இதே அமைப்புத்தான்) நான்கைந்து தொழில்களைச் செய்து கொண்டிருப்பர். நவீன வசதிகளுடன் கூடிய வீடு அமையும். ஒரு வார்த்தை சொன்னால் நூறு வார்த்தைக்குச் சமமான பேச்சு. நுணுக்கமான புத்தி, நவீனத்துவம், முன்மாதிரி என்றெல்லாம் கலக்குவர். எடுப்பான தோற்றம், எதிர்த்தவர்களை மடக்கும் தந்திரம் என்று சவால்களை எளிதாகச் சமாளிப்பார்கள்.
கும்பமாகிய 11 ஆம் வீடு சரலக்கினமாகிய மேடத்திற்கு பாதக ஸ்தானமாகும்.
இங்கே இலக்கினாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பாகச் சொல்லப்படவில்லை. இத்தகையவரிடம் கஞ்சத்தனம் மிகுந்திருக்குமாமென சோதிட நூல்கள் கூறுகின்றன.
எவ்வளவு சொத்துச் சேர்த்தாலும் திருப்தியே இருக்காதாம். ஆனாலும் பெற்ற பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் ரகமாம் இது. அழகுப் பொருட்கள் தயாரித்தல், நவீன சிகையலங்காரம், ஆயுர்வேத சிகிச்சை (ஸ்பா) குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் தயாரித்தல் முதலான தொழில்களில் ஆர்வம் கொண்டு சம்பாதிப்பார்.
கழுத்துப் பிடிப்பு நிரந்தரமான வியாதி. பெற்ற தாயோடு பெரும்பகை பாராட்டுவார். முன்கோபம் அதிகம். அடுத்தவர் முன்னேற மூளையாயிருந்து செயற்படுவார்.
சுகாதிபதியான சந்திரன் 12 ஆம் வீடான மீனத்தில் (விரயஸ்தானம்) செவ்வாயோடு கூடியிருந்தால் அத்தகையவர் புகழ்ச்சிக்கு எளிதில் மயங்குபவராக இருப்பார். இந்த விடயத்தில் இவருக்கு நிதானம் வரவில்லையெனில் குறிக்கோளற்ற வாழ்க்கையே அமையக்கூடும். தாமாகவே முன்வந்து எவரையும் கைதூக்கிவிடமாட்டார். எதிர்பாராத திருப்புமுனைகள் வாழ்வில் வந்து கொண்டேயிருக்கும். விவாகரத்து ஆனவர்களை மறுமணம் செய்வது அவைகளிலொன்று. சோதிடத்தில் ஆர்வமதிகம். இக்கிரக அமைப்புக் கொண்டவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் நல்லயோகத்தோடு வாழ்வார்கள்.