அல் ஜெஸீரா நிறுவனத்தின் இணையத்தளமானது சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஷாத்தின் ஆதரவாளர்களால் நேற்று ஹெக் செய்யப்பட்டுள்ளது.
மத்தியகிழக்கு நாடுகள் மட்டுமன்றி உலகநாடுகள் பலவற்றிலும் பிரபலமான செய்திச்சேவையே அல் ஜெஸீரா ஆகும்.
ஜனாதிபதி பஷார் அல் அஷாத்தின் அரசாங்கத்துக்கு எதிராக சித்திரிக்கப்பட்ட போலியான தகவல்களை அல் ஜெஸீரா வழங்கிவருவதாக சிரியா குற்றஞ்சாட்டி வந்தது.
இந்நிலையில் நேற்று அல் ஜெஸீரா இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் தளத்தில் சிரிய நாட்டுத் தேசியக் கொடியும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அல் ஜெஸீரா செயற்படுவதாலேயே தளம் ஹெக் செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அத்தளம் வழமைக்கு திரும்பியுள்ளது.
' அல் ரசீடொன் ' என்ற ஹெக்கர்களின் குழுவே இத்தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ளது.
கட்டார் , சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதாக ஆரம்பம் முதலே தெரிவித்து வந்ததுடன் அந்நாட்டைச் சேர்ந்த அல் ஜெஸீரா சிரிய மோதல்கள் தொடர்பாக விரிவான செய்தித்தகவல்களை வழங்கி வருகின்றது.
இதுமட்டுமன்றி மத்தியகிழக்கில் நடைபெற்ற புரட்சிகள் தொடர்பாக அல் ஜெஸீரா பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் செய்திகளை வழங்கி வந்தது.
சவூதியின் அரம்கோ மற்றும் கட்டாரின் ரஸ்கேஸ் நிறுவனங்களின் கணனிகள் மற்றும் இணைய வலையமைப்பினை அண்மையில் வைரஸ் தாக்கியது.
அவ்வரிசையில் தற்போது அல் ஜெஸீராவும் சேர்ந்துள்ளது.