Reporting Sri Lanka News in Tamil
 

“மரணத்தை எதிர்பார்த்து மருந்துகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்”

Share
By Nirshan Ramanujam
2012-09-19 10:47:18

எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அங்கொடை பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார்கள்.

சொந்த வீடுகளில் இருந்து அனுப்பப்பட்டவர்களும், தங்களுக்கு இவ்வாறானதொரு நோய் இருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவர்களும் அந்த வீட்டில் இருக்கிறார்கள்.

ஐ.டி.எச் பகுதிக்கு அண்மித்ததாக அங்கொடையில் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிறது அந்த வீடு.

பெண்கள் சிலரும் ஆணொருவரும் அலி ஒருவரும் இருந்தார்கள். இவர்கள் சுமார் 25 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.

ஆரம்பத்தில் எம்மோடு பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. எதற்காக வந்திருக்கிறோம் என்றும் கேட்கவில்லை.

சற்றுநேர அமைதிக்குப் பின்னர்தான் பேசினார்கள்.

எம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

ஊடகங்களில் பெயரோ, படமோ வெளியிடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆதலால் எம்மோடு அவர்கள் பற்றிய விபரங்களைக் கூறுவதற்கும் தயங்கினார்கள்.

நீண்டநேர முயற்சிக்குப் பின்னர் இனோகா தன்னைப்பற்றிக் கூறுவதற்கு முன்வந்தார்.


“சொந்த இடம் பற்றிக் கேட்காதீர்கள். சொன்னால் அங்குள்ள எல்லாருக்கும் எயிட்ஸ் இருக்கிறது என்று எங்களுடைய மக்கள் நினைப்பார்கள்” - இது அவர் பேச ஆரம்பித்த முதல் வசனம்.

“எனக்கு மூன்று பிள்ளைகள். இருவர் பெண்கள். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

மகனுக்குத் திருமணமாகவில்லை.

“நான் செய்த தவறுக்காக காலம் முழுவதும் வேதனைப்பட வேண்டியதாயிற்று. அதை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.

எனக்கு இப்போது வயது 41 ஆகிறது. முப்பது வயதாக இருக்கும்போது குடும்ப வறுமையில் நாம் தவித்தோம். மூன்று பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டிய தேவை. நாளாந்த செலவுகள் என செலவுகள் மாதாந்தம் அதிகரிக்கத் தொடங்கின.

அப்போது, சிங்கப்பூரில் துணிக் கடையொன்றில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும் நல்ல சம்பளம் தருவதாகவும் தோழி ஒருத்தி எனக்குக் கூறினாள்.

குடும்பச் சுமையிலிருந்து மீள்வதற்கு நான் அங்கு செல்வதென தீர்மானித்தேன்.

சிங்கப்பூர் அழகிய நகரம். அதேபோல் என்னுடைய வாழ்க்கையும் அருமையாக அமையப்போகிறது என்ற நம்பிக்கை என்னுள் துளிர்த்தது.

ஆயினும் அன்று மாலையானதும் எதிர்பார்ப்புகள் அனைத்துமே சிதைந்துபோயின.

துணிக்கடையில் வேலை என்று சொல்லித்தான் இங்கிருந்து அனுப்பினார்கள். அங்கு விமான நிலையத்திலிருந்த குழுவினர் வேறு இடமொன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த இடம்பற்றி விரிவாகச் சொல்வதற்கு நான் விரும்பவில்லை.


அது பாலியல் தொழில் நடக்கும் இடம்.

ஒருகணம் எனக்கு வந்த அழுகையை அடக்க முடியாமல் போனது. என்னை இந்த இடத்துக்கு விற்றுவிட்டார்கள் பாவிகள்.

குடும்பச் சுமையை தீர்க்க இந்த வழியைப் பயன்படுத்தினால் தவறில்லை என அங்குள்ள பெண்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். நான் படித்தவள் அல்ல. அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

கடவுளை நினைத்துக்கொண்டு என் உடலை விற்கத் தீமானித்தேன்.

கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் வறுமை என் அறிவுக் கண்களை மறைத்தது.

மனம் இடம்கொடாமல் தொழில் செய்தேன். ஆயினும் ஒரு வருடத்துக்கு மேல் அதனைத் தொடர விரும்பவில்லை.

மீண்டும் சொந்த நாட்டுக்கே வந்துவிட்டேன். எனது கணவரை, பிள்ளைகளை மீண்டும் பார்த்தபோது கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன். அவர்களை நீண்டநாட்கள் பிரிந்திருந்ததால் அழுகிறேன் என நினைத்துக்கொண்டார்கள்.

மாதங்கள் சில கழிந்தன. அப்போதும் வறுமை ஒரு நோயாய் எம்மைப் பீடித்திருந்தது.

நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் அதே இடத்திலிருந்து (சிங்கப்பூர்) எனக்கு அழைப்பு. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

தூக்கம் விழித்துச் சிந்தித்து நான் மீண்டும் செல்வதற்குத் தீர்மானித்தேன்.

இருவாரங்களுக்குப் பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சென்றேன். அங்கே காத்திருந்தது அதிர்ச்சி.
ஆம்..! நான் எச்.ஐ.வி. க்கு ஆளாகியிருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இடிவிழுந்ததாய் அதிர்ந்துபோனேன். தலைகால் புரியவில்லை. என்ன செய்வது? கணவனுக்கு, பிள்ளைகளுக்கு, சமூகத்துக்கு எப்படி முகம்கொடுப்பது?

அந்த நிமிடங்களை என்னால் மறக்கவே முடியாது (கதறி அழுதார்). ஏன் நான் சிங்கப்பூருக்குப் போனேன்? ஏன் பாலியல் தொழில் செய்தேன்? ஐயோ கடவுளே…

அறிக்கையை வாசித்துக்காட்டிய வைத்தியர் எனது கணவரையும் அழைத்து வருமாறு கூறினார்.

கணவரை அழைத்துவந்தபோது அவருக்கும் தொற்றியிருந்தது இந்தக் கொடிய நோய்.

ஆனால் இந்த விடயம் பிள்ளைகளுக்குத் தெரியாது. மன வேதனையால் துடித்துப்போனார் அவர். நான் செய்த தவறு அவரை நீண்ட நாட்கள் வாழ விடவில்லை. குறுகிய காலத்தில் அவருடைய உயிர் பிரிந்தது.

நான் தனிமைபடுத்தப்பட்டேன்.

அதன்பிறகு வைத்தியர்களின் ஆலோசனையின்பேரில் இங்கு வந்து அதிக காலத்தைத் தனிமையில் கழிக்கிறேன். இது வீடு மட்டுமல்ல. எயிட்ஸ் நோயாளிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனமும் கூட.

இங்கு என்னைப்போன்ற சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கதைகளும் வித்தியாசமானவை.

மரணத்தை எதிர்பார்த்து மருந்துகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்”.

-இராமானுஜம் நிர்ஷன்

Share
Interesting
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23
  சிங்கங்கங்களுடன் சாவகாசமாக பொழுதைக் கழிக்கும் சிறுவன் 2013-03-29 11:25:32

 

Cinema
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
  என் வெற்றிக்கு இயக்குனர்களே காரணம்-விஜய் சேதுபதி 2013-05-11 10:28:22
  யுவனின் 100வது பட ஆடியோ விழாவில் இளையராஜா- ஏ.ஆர்.ரகுமான் 2013-05-10 09:59:29
Feature
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
  செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம் 2013-04-19 11:56:27
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online