ஆர்.ராம்
2020 ஒக்டோபர் 18ஆம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளை யார் ஆலயத்திலிருந்து வெளியே வந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன், கவலையு டன் சரஸ்வதி பூஜைக் காலமிது.
நான் சகல கலாவல்லிமாலை பாட ஆசையோட கோயிலுக்கு வந்தன். இங்க சகலகலாவல்லிமாலையோ தேவாரமோ பாட வேண்டாம் எண்டு சொல்லி என்னை கோயிலில் இருந்து கலைச்சு விட்டார்கள் என்கிறார்.
இதற்கு என்ன காரணம் என அவரிடமே வினாவியபோது,
இப்பிடி கன தடவைகள் சொல்லியிருக்கினம். எங்கள் சாதி தான் காரணம் எண்டு எல்லாரும் சொல்லினம். நானும், எங்கட குடும்பமும் இந்தக் கோயிலில் பல தடவைகள் இவ்வாறு அவமதிக்கப்பட்டிருக்கின்றோம். ஒரே ஊரில் வசிப்பவர்கள் என்பதால இந்த விடயங்களை பெரிது படுத்துறது இல்ல. ஆனா இதுபற்றி கேள்வி கேக்க இங்கு யாரும் இல்லை. இந்த நிலைமை தொடருது. நாங்களும் எத்தனை நாளைக்கு பொறுத்துப்போறது' என்று கூறுகின்றார்.
இந்த சம்பவத்தை பிரதேச ஊடகவியலாளரான மு.தமிழ்ச்செல்வன் சமூக ஊடகங்களில் ஒன்றான முகநூலில் பதிவு செய்தார். அப்பதிவானது, முகநூலில் வெளியானதும், அச்சம்பவம் பற்றிய பொதுவெளிக் கருத்தாடல்கள் ஆரம்பமாகியிருந்தன. அதில் பரிமாற்றப்பட்ட கருத்துக்களை ஒட்டுமொத்தமாக அவதானித்த போது, மாணவனின் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியிருந்த ஆலய நிருவாகத்தினர் சார்பாக ஒருசில கருத்துக்களே இருந்தன. ஆனால் கோயிலிருந்து
வெளியேற்றப்பட்டதாக கூறிய மாணவனு க்கு ஆதரவளிக்கும், மற்றும் உள ரீதியான ஆற்றுப்படுத்தும் கருத்துக்கள் பல காணப்பட்டன.
அவ்வாறு காணப்பட்ட கருத்துகளில், நிருவாகத்தினரின் தவறை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருந்த கருத்துக்களில், இத்தகை காலம் கடந்தும் சாதியக் கட்டமை ப்பை பின்பற்றுவதை விமர்சிக்கிக்கும் வகையிலான கருத்துக்கள் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 'இப்படியானவர்கள் இன்னும் உயிர்வாழ்கின்றார்களா?, அவரை செருப்பால் அடியுங்கள், போரில் உயிரிழக்காது போய்விட்டாரே?' என்பதுள்ளிட்ட வார்த்தைப் பிரயோகங்கள் தாராளமாக பயன்படுத்தப்பட்டிருந்தன.
இங்கு மாணவன் தன்னை வெளியேற்றியபோது நிருவாகத்தினர் பயன்படுத்தியதாக கூறிய வார்த்தைகள் எவ்வாறு வெறுப்பினை தூண்டியதோ அதையொத்தாகவே மாணவனுக்கு சார்பாக அல்லது ஆதரவாக நிருவாகத்தினரை நோக்கி வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களும் காணப்பட்டன.
சமூகமொன்றில் உயர் சாதியினர், கீழ் சாதியினர் என்ற இருவகையினர் உள்ளதாக பொதுவான வகைப்படுத்தல் உள்ளது. அவ்விதமான வகைப்படுத்தலுக்குள் உயர் சாதியினரின் பிரதிபலிப்புக்கள் மற்றும் கருத்துக்கள் வெவ்வேறு தருணங்களில் வெறுப்பு பேச்சை தூண்டிவிடுகின்றன. அதேசமயம், உயர் சாதியினராக கருதப்படுபவர்களுக்கு எதிரான வெறுப்புப்பேச்சுகளும் பதிலுக்கு காணப்படுகின்றன.
இதற்கான தளமாக கருத்துச்சுதந்திரம் அதிகளவில் காணப்படும் சமூக ஊடகங்களே பயன்படுத்தப்படுகின்றன. அண்மைய காலங்களில் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு இந்த விடயத்தில் உடனுக்குடன் பிரதிபலிப்புக்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அதாவது, சாதியப்பாகுபாட்டால் பாதிக்கப்படுபவர்களும் அதற்காக குரல் கொடுப்பவர்களும், சாதியப்பாகுபாட்டை ஏற்றுக்கொள்கின்றவர்களும் அதுபற்றி கருத்து வெளியிடுபர்களும் சமூக ஊடகங்களில் வெறுப்பு பேச்சுக்கள் தூண்டப்படுவதற்கான காரண கர்த்தாக்களாகின்றனர்.
முன்னைய காலத்தில் நபர்களுக்கு நபர்கள் நேரடியாக வார்த்தைப் பரிமாற்றங்களில் ஈடுபடும் போது மட்டுமே வெளிப்படுத்தப்பட்டு வந்த வெறுப்பு பேச்சுக்கள் வெகுஜன ஊடகங்களில் அவை வெளி வராத நிலைமையே நீடித்திருந்தன.
வெகுஜன ஊடகங்களில் வெளியிடப்படும் சிறுகதைகளில் கூட அவை பிரசுரிக்கப்படாத நிலையே இருந்தது. அவ்விதமாக காணப்பட்ட நிலைமையானது தற்போது முழுமையாக மாற்றமடைந்துவிட்டது. தற்காலத்தில் சமூக ஊடகங்கள் அனைத்து மக்களின் கைகளிலும் உள்ளன. அவர்கள் தாம் கொண்ட கொள்கைகளும் நம்பிக்கைகளும், சிந்தனைகளுமே மேலானவை என்றும் ஏனையவை தாழ்ந்தவை என்றும் வெளிப் படையாக பதிவிடுகின்றனர்.
இது கருத்துருவாக்கத்திற்கும், உடனடியான வெளிப்படுத்தல்களுக்கும், சமூகத்தின் மீதான பற்றுக்கும் அடிப்படையாக அமைந்தாலும் இவ்விதமான கருத்துப்பரிமாற்றங்கள் எதிர்மறையான நிலைமைகளையும் ஏற்படுத்துகின்றது.
சாதியப்பாகுபாட்டைப் பொறுத்தவரை வடமாகாணத்தில் 1966இலிருந்து தீண் டாமை ஒழிப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றபோதும், தற்போது வரையில் சாதியக் கட்டமைப்புக்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக கூறுவதா னால் பொதுவெளியில் அவை, வெளிப் படாதபோதும், திருமண பந்தங்களின் போது வெளிப்படும் நிலைமைகளே அதிகமாக காணப்படுகின்றன.
2018ஆம் ஆண்டு, தென்மராட்சிப்பகுதி யில் வரணி சிமிழ் அம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் போது தேர் இழுப்பதற்கு பிற சாதியினரை அனுமதித்துவிடக் கூடாது என்பதற்காக, ஜே.சி.பி. உழவு இயந்திரத்தினை பயன்படுத்தியிருந்தமை சாதியக் கட்டமைப்பு எவ்வளவு தூரம் வேரூன்றி இருக்கின்றது என்பதை அப்பட்டமாக காண்பிக்கும் சம்பவமாக இருக்கின்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வயோதிப பெண்ணொருவர், இச்சம்பவத்தினை பார்த்து துக்கமடைந்து பின்னர் மூன்று நாட்களில் மரணத்தினை எய்தினார் என்றும் அப்பகுதி பிரதேசவாசிகளினால் கூறப்பட்டது. ஆகவே நீடித்திருக்கும் சாதியக்கட்டமைப்பின் தாக்கம் மரணத்தை கூட ஏற்படுத்தவல்லது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
இத்தகைய பின்னணியில், மேற்படி விடயத்தினை நோக்குகின்றபோது, குறித்த மாணவன் வெளியேற்றப்பட்டதன் பின்னணியும் அதற்காக கூறப்படும் காரணங்களை யும் விலக்கிப்பார்க்க முடியாதுள்ளது.
நபர் ஒருவரினது மதம், இனம், தேசியம், குலம், நிறம், பரம்பரை, பால்நிலை அல்லது ஏனைய அடையாளக் காரணிகளின் அடிப்படையில் தாக்குதல் தொடுக்கும் வகையில் அமைந்த இழிவான அல்லது பாகுபாடுமிக்க மொழியாடலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பேச்சு, எழுத்து அல்லது நடத்தை வடிவில் அமைந்த எந்தவொரு தொடர்பாடலும் வெறுப்புப் பேச்சாகும் என்று வெறுப்பு பேச்சு மீதான ஐக்கிய நாடுகள் சபையின் மூலோபாயம் செயற்பாட்டு திட்டம் வரையறுத்துள்ளது.
அதனடிப்படையில் இந்த விடயம் சம்பந்தமாக, குறித்த ஆலயத்தின் பரிபாலன சபையின் தலைவராக இருக்கும் நா.அரசரத்தினத்திடம் (தற்போது பதவியில் இல்லை) வினவியபோது, 'நாங்கள் எந்த பாரபட்சத்தினையும் காண்பிக்கவில்லை.
அவ்விதமான எந்தவொரு விடயமும் இங்கு நடைபெறவில்லை. தேவாரம் பாடுவதற்கு நிருவாகத்தினால் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவர் தான் பாடவேண்டும். கோவிலின் விடயங்களை தீர்மானிப்பதற்கு நிர்வாகம் இருக்கின்றது. ஆகவே இந்த விடயத்தில் நிருவாகம் தீர்மானம் எடுத்துள்ளது.
அதனைப் பலர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். தேவாரம் பாடுவதற்கு ஒருவர் இருக்கும்போது பிறிதொருவர் இடையில் வந்து செயற்படுவது பொருத்தமற்றது. ஆலயத்தினை நிருவகிப்பதற்காகவே எம்மை நியமித்திருக்கின்றார்கள். அதனை முறையாக செய்கின்றபோது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்கள். எம்மைப் பொறுத்தவரையில் ஆலய நிருவாகத்தின் தீர்மானங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடுகின்றார்.
அதேநேரம், மாணவனின் தயார் குறிப்பிடுகையில்,
நாங்கள் கடவுளை பூக்களை வைத்து வணங்குவதற்கும், மணி அடிப்பதற்கும் இடமளிக்கிறார்கள் இல்லை. எனது மகனொருவர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு வைத்த நேர்த்திக் கடனை நிறைவேற்றச் சென்றோம். எங்களை கோவிலுக்குள்ளே யார் விட்டது என்று கேள்வி கேட்டார்கள். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். கோவில் மணியை ஒழித்து விட்டார்கள். நாங்கள் தேவாரம் பாடிவிடக்கூடாது என்பதற்காகவே தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். இப்படி பல சம்பவங்கள். ஆனாலும் எனது மகனை தேவாரம் பாடக் கூடாது என்று கூறி வெளியேற்றும் போது அவர்கள் பயன்படுத்தி வார்த்தைகள் என்றுமே என்னால் மறக்க முடியாதவை. அத்தனை பேருக்கும் முன்னால் தலைகுனிந்து நின்றதையும் எத்தனை நாள் போனாலும் மறக்கவே முடியாது.
நாங்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் கூட அவர்கள் சிந்தித்திருக்கவில்லை. அது தான் எங்களுக்குள்ள கவலை என்றார்.
இதேவேளை, இந்த சம்பவம், அப்பகுதியெங்கும் பேசுபொருளானதோடு, கரைச்சி பிரதேச சபை நிருவாகத்தினரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயாகரனின் கவனத்திற்கு சில சமூக செயற்பாட்டாளர்களால் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அதன்போது, இந்தவிடயம் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சுமூகமான நிலைமைகளை ஏற்படுத்துவதற்காக, கரைச்சி பிரதேச கலாசார உத்தியோகத்தரிடத்தில் விடயம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இந்த விடயம் சம்பந்தமாக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதேச செயலாளர் பா.ஜெயாகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கரைச்சி பிரதேச கலாசார உத்தியோகத்தர் தி.கார்த்திகேயன் இந்தவிட யம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தரப்புக்களி னை நேரடியாக சந்தித்திருந்தார். அவர்களின் கருத்துக்களையும் பெற்றிருந்தார். அத்துடன் இந்த முரண்பாடுகளுக்கான தீர்வினை அளி ப்பதற்கான பரிந்துரையொன்றையும் செய்வதற்கு தயாராகி வருகின்றார்.
தற்போது இடம் மாற்றம் பெற்றுள்ள தி.கார்த்திகேயன் 'நான் அந்த (பெரிய பரந்தன் பிள்ளையார் ஆலயம்) விடயம் சம்பந்தமாக பகுப்பாய்வு அறிக்கையொன்றை தயாரித்துள்ளேன். அதனைவிரைவில் பிரதேச செயலாளருக்கு கையளிக்கவுள்ளேன். அதனடிப்படையில் அவரால் அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்று நம்புகின்றேன். குறிப்பாக, அதில் இந்த விடயத்திற்கு நிரந்தர தீர்வுக்கான பரிந்துரைகளையும் செய்திருக்கின்றேன்' என்று குறிப்பிட்டார்.
விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கு கலாசார உத்தியோகத்தர் தயாராக இருக்கவில்லை. 'மனித உணர்ச்சிகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள்' என்பதாலும், இடமாற்றம் பெற்ற அரச ஊழியராக இருப்பதாலும் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அதிலுள்ள எந்தவித தகவல்களையும் பகிர்வதற்கு அவர் விரும்பியிருக்கவில்லை. ஆனால் இத்தகைய சமூகப்பிரச்சினைகள் நீடிக்கக்கூடாது என்ற இறுக்கமான நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், நீண்டகால இடதுசாரிச் செயற்பாட்டாளரும் இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான வெகுஜன போராட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருப்பவருமான, சி.க.செந்திவேல் தெற்காசியா பொதுவாக நிலப்பிரபுத்துவ கட்டமைப்பில் உருவாக்கப்பட்டதாக உள்ளது.
இதனடிப்படையிலேயே சமூக கட்டமைப்பும் காணப்படுகின்றது. இதற்கு இலங்கையும், உரிமைகளுக்காக போராடுகின்ற தமிழினம் வாழும் வடக்கு கிழக்கும் வேறுபட்டதாக இல்லை.
சேர,சோழ, பாண்டிய காலத்து வரலாறுகளை மையப்படுத்திய பழமைவாத சிந்தனைகள் பரம்பரை ரீதியாக கடத்தப்பட்டு இன்னமும் பழைமைவாதத்திற்குள்ளே சமூகங்கள் உட்பட்டிருக்கும் நிலையே நீடிக்கின்றது.
அதிலிருந்து வெளிவருவதற்கும் சமூகங்கள் தயாராக இல்லை. வரலாற்றுக்காலம் முதல் தற்போது கடல் கடந்தும் இந்த விடயம் நீடித்துக்கொண்டிருக்கிறது என்று சாதியக் கட்டமைப்பு பற்றி குறிப்பிட்டார்.
அத்துடன் விசேடமாக யாழ்ப்பாணத்தினைக் கருத்திற்கொண்டால் 1966களில் சண்முகதாசனின் தலைமையில் இதற்கு எதிரான போராட்டங்கள் வெகுவாக முன்னெடுக்கப்பட்டன. பின்னர், விடுதலை இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இக்காலப்பகுதியில், சாதியக் கட்டமைப்பு ஒழிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக கடுமையான நிலைமையிலிருந்த தீண்டாமை மேலெழாது பேணப்பட்டிருந்தது.
ஆகவே, போர் நிறைவுக்கு வந்தாலும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகத்தினுள் இவ்வாறான நிலைமைகள் அற்றுப்போகும் என்றும் கூறுவதிற்கு இல்லை. உலகக் கண்ணோட்டத்தில் பழைமைவாதத்தினை மையப்படுத்திய பன்மைத்துவத்திற்கு தயாராக இல்லாத சமூக கட்டமைப்பில் சிந்தனை மாற்றத்தினை காணமுடியாது என்றும் அவர் திடமாக கூறினார்.
இதேவேளை, சமூகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.ஜீவசுதன், சாதியப்பாகுபாடு தொடர்பாக பொதுவெளியில் பகிரங்கமான கலந்துரையாடல்கள் அவசியமாக இருக்கின்றன. ஏனென்றால், சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மாற்றத்தினை ஏற்படுத்துவதாக இருந்தால் உளப்பாங்கான மாற்றமொன்றையே செய்ய வேண்டியுள்ளது.
விடுதலைப்போராட்டங்கள் நடைபெற்ற காலத்திலும், விடுதலை இயக்கங்களின் நிர்வாக காலத்திலும், இந்த விடயம் மழுங்கி காணப்பட்டது உண்மைதான். ஏனென்றால் விடுதலை இயக்கங்களின் நிர்பந்தத்தினால் விரும்பியோ விரும்பாமலோ அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவெறுமனே காட்டாயத்தின் அடிப்படையில் நடைபெற்ற விடயமாகும். உள ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமல்ல.
தற்போது விடுதலை இயக்கங்கள் இல்லை. காட்டயப்படுத்தல்களோ, நிர்பந்தகளோ இல்லை. ஆகவே உளரீதியாக காணப்பட்ட விடயங்கள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அதுமட்டுமன்றி பல்லின, மதச் சூழலை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லாத நிலைமையும் உள்ளது.
அதனைவிடவும், இவ்விதமான விடயங்களை அடிமனங்களில் அமிழ்த்தி வைக்கின்ற அல்லது பிரச்சினைகள் எதற்கு என்று பின்வாக்குகின்ற, தொடர்தேச்சியாக குரல்கொடுப்பதற்கு தயங்குகின்ற, நிலைமைகளே நீடிக்கின்றன. அண்மையில் கிளிநொச்சியில் உள்ள பாடசாலையொன்றில்
மாணவன் ஒருவருக்கு சாதியை அடிப்படையாக கொண்ட பிரச்சினை எழுந்தபோது கோட்டக்கல்விப்பிரிவிடம் அதுபற்றி முறைப்பாடு செய்வதற்கு முனைந்தபோது, இந்தப் பிரச்சினையை பெரிது படுத்தாது இத்தோடு விட்டுவிடுங்கள். இதுபற்றி எங்கும் பேசாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்விதமான செயற்கை ரீதியான மட்டுப்படுத்தல்கள் நீடிப்பதும், அதில் பாதிக்கப்படுபவர்களும், அமைதியாகிவிடுவதும் தற்போது வரையில் சாதியக் கட்டமைப்பு நீடிப்பதற்கு வழிவகுப்பதாக உள்ளது என்கிறார்.
சிரேஷ்ட சட்டத்தரணியும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் பதில் நீதிபதியுமான சோ.தேவராஜா, அண்மைய நாடான இந்தியாவில் சாதிய ஒழிப்புக்காக செயற்பட்டவரும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை வரைந்தவருமான டாக்டர். அம்பேத்கார், ஆரம்பத்தில் சைவ சமயத்திலிருந்து வெளியேறி, பௌத்த சமயத்தில் இணைந்து கொண்டிருந்தார். அவருடன் சில நூற்றுக்கணக்கானவர்களும் சென்றிருந்தனர். சைவ சமயத்தை பின்பற்றுபவர்களின் இறுக்கமான சாதிய சட்டமைப்புக்களையும், அதனால் வெளிப்படுத்தப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களையும் சகிக்க முடியாது அவர் அவ்வாறு மதம் மாறியிருந்தார் என்று சாதியமும், அதன் பால் எழுந்த வெறுப்புப் பேச்சின் தாக்கத்தினையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், யாழ்ப்பாணத்தில், வைரமுத்து மாஸ்டர் என்பவர் 1960களில் கரவெட்டியிலும், புத்தூரிலும் பௌத்த பாடசாலைகளை நிறுவினார். இதற்கும் சைவ சமயத்தவர் களால் பின்பற்றப்பட்ட கடுமையான தன்மை களைக் கொண்ட சாதியக் கட்டமைப்பே காரணமாக இருந்தது.
இவ்வாறு வரலாறு இருக்கையில் அந்த வரலாறு முன்னோக்கிச் செல்வதற்கு பதிலாக தற்போது பின்னோக்கிச் செல்வதாய் இருக் கின்றது. குறிப்பாக தமிழ்த் தேசியத்தினை மையப்படுத்திய களத்தில் இந்த நிலைமை நீடிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சி.க.செந்திவேல், மற்றும் சோ.தேவராஜா ஆகியோரின் கருத்துக்களின் பிரகாரம், பழைமைவாத சிந்தனை மாற்றமும், சாதியக் கட்டமைப்பை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுக்கள் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான திறந்த கலந்துரையாடல்களும் அவசியம் என்பதை வலியுறுத்துவதாக உள்ளன.
அதேநேரம், சமூகவியல் சிரேஷ்ட விரி வுரையாளர் ஜீவசுதனினின் கருத்து, திறந்த கலந்துரை யாடல்கள் அவசியம் என்பதை சுட்டிக் காட்டினாலும், நிர்ப்பந்தங்களோ கட்டாயங்களோ இல்லாத தற்காலத்தில் உள ரீதியான மாற்றங்கள் அவசியமாகின்றன என்பதை அடிக்கோடிட்டு காண்பிப்பதாக உள்ளது.
ஆகவே திறந்த கலந்துரையாடல்கள், சிந்தனை மாற்றங்கள், சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உபாயங்கள் செயற்றிட்டங்களாக முன்னெடுக்கப் படாத வரையில் வெறுமனே திருமண பந்தத்திற் காக மட்டுமே கையிலெடுக்கப்படும் சாதியம் அதனைத் தாண்டி அனைத்து மட்டங்க ளிலும் வியாபிக்கும் நிலை அதிகரிக்கும்.
இந்நிலையானது கருத்து வெளிப்பாட்டு க்கான பூரண சுதந்திரத்தினை கொண்டுள்ள சமூக ஊடகங்களும் ஒவ்வொரு தனிநபர் களினது கைளில் இருப்பதால் அவற்றின் ஊடான தாமதமற்ற வெளிப்பாடுகள் சமூகத் தில் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்வதற்கு காரணமாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM