(ஆர்.யசி)
நாட்டில் நிலவும் கொவிட் -19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகளையும், பாராளுமன்றத்தில் தற்போது பரவியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணிகளையும் கருத்தில் கொண்டு இந்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளை இன்றும் நாளையும் என இரு தினங்களுக்குள் மட்டுப்படுத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய தீர்மானங்களை எடுக்க கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடவிருந்த நிலையில் பாராளுமன்றத்தில் பணியாளர்கள் சிலருக்கும், சபாநாயகர் காரியாலய ஊழியர்கள் ஒரு சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பாராளுமன்ற அலுவல்கள் குழுவை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானம் எடுத்தார்.
அதற்கமைய இன்று திங்கட்கிழமை பாராளுமன்ற அலுவல்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது,
இக்கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்ஹ, அனுரகுமார திஸாநாயக்க, டிலான் பெரேரா, ரிஷாட் பதியுதீன், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சுகாதாரப் பாதுகாப்பான முறையில் அமர்வுகளை நடத்துவது தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் பாராளுமன்றத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்திய சுகாதார பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள் சிலர் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
முதலில் அவர்களுடன் நடந்திய கலந்துரையாடல்களின் போது பாராளுமன்றத்தில் எச்சரிக்கையான சூழ்நிலை எதுவும் இல்லையென்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி அமர்வுகளை நடத்த முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்றுநோய் நிலைமைகள் மற்றும் பாராளுமன்றத்தில் ஊழியர்கள் ஒரு சிலருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த வாரம் முழுவதும் பாராளுமன்றத்தை கூட்டாது இன்றும், நாளையும் மாத்திரம் பாராளுமன்றத்தை கூட்ட சகல கட்சிகளின் இணக்கத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கொவிட் 19 சுகாதார ஒழுங்குவிதிகளை முழுமையாகப் பேணும் வகையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
முற்பகல் 10.00 முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைக்கான கேள்விகளை எழுப்புவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வினாக்கள் பத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாவது தினமான நாளைய தினம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு யோசனை மீதான விவாதம் முன்னெடுக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். இவ்விவாதத்துக்காக முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 4.30 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் அமைச்சர்களால் முன்வைக்கப்படுகின்ற அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களால் வெளியிடப்படுகின்றன கட்டளைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலேயே இந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவின் பாராளுமன்ற அங்கீகாரம் குறித்தும் கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
ரஞ்சன் ராமநாயகவின் பாராளுமன்ற உறுப்புரிமை இன்னமும் நீக்கப்படவில்லை. ஆனால் அவர் சிறையில் இருக்கின்ற நிலையிலும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இன்றைய தினம் கூடும் பாராளுமன்ற கூட்டத்தின் போது பிரதான எதிர்க்கட்சியினர் இந்த காரணிகளை சபையில் முன்வைத்து சபாநாயகரின் அனுமதியை கேட்கவும் தீர்மானித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM