வாஷிங்டன், ( சின்ஹுவா) -சோமாலியாவில் இருந்து அமெரிக்க இராணுவப்படகுகளில் பெரும்பான்மையானவை 2021 முற்பகுதியளவில் விலக்கிக்கொள்ளப்படவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதாக பென்டகன் கடந்த வாரம் அறிவித்தது.
இந்த தீர்மானம் தற்போதைய அமெரிக்க நிருவாகத்தினால் படைவிலகல் குறித்து மேற்கொள்ளப்பட்டிருந்த தொடர்ச்சியான பல தீர்மானங்களில் பிந்தியதாகும். ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்களை 2021 ஜனவரி நடுப்பகுதியளவில் தனித்தனியாக 2500 ஆகக் குறைக்கப்போவதாக பென்டகன் கடந்த மாதம் அறிவித்தது.
அண்மைய மாதங்களில் மிகுந்த அவசரத்துடன் அறிவிக்கப்பட்டு வருகின்ற இத்தகைய உத்தரவுகள் தனது பதவிக்காலத்தின்போது துருப்புக்களை விலக்கிக்கொள்வதாக ட்ரம்ப் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுதை நோக்கமாகக்கொண்டிருப்பது மாத்திரமல்ல, " அமெரிக்கா முதலில்" என்ற கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகவும் இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இருந்தாலும் கூட , அமெரிக்க துருப்புகள் விலகலை துரிதப்படுத்துவது என்பது தொலைதூர நாடுகளில் இடம்பெறுகின்ற போர்களில் அமெரிக்கப் பங்கேற்பை குறைப்பதற்கு ட்ரம்ப் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை உணர்த்தி நிற்கின்ற அதேவேளை, தனது ஜனாதிபதிப் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக அவர் தனது அரசியல் மரபை வலுப்படுத்தும் நோக்கிலானதாகவும் இருக்கிறது. ஒருபுறத்தில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்பை கிளப்பும் என்பதுடன் மறபுறத்தில், அடுத்த நிருவாகத்துக்கு கவலைதரக்கூடிய அச்சுறுத்தல் ஒன்றை விட்டுச் செல்வதாகவும் அமைகிறது என்பது நிபுணர்களின் அபிப்பிராயமாகும்.
ட்ரம்பின் உறுதிமொழிகள்
ட்ரம்பின் துருப்புகள் விலக்கல் நோக்கத்தின் பின்னணியல் மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் முதலாவதாக, பெரும் செலவு பிடிக்கின்ற வெளிநாட்டு மோதல்களில் இருந்து "அமெரிக்காவை மீட்டெடுத்து " சுமைகள் கூடிய "வெளிநாட்டு கடப்பாடுகளை" புறந்தள்ளப்போவதாக ட்ரம்ப் அடிக்கடி உறுதியளித்து வந்திருக்கிறார் என்று " வெளியுறவு விவகாரங்கள் " என்ற சஞ்சிகையில் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இஸ்லாமிய அரசு தீவிரவாத இயக்கத்துக்கு எதிரான போரில் வெற்றியடைந்துவிட்டதாக உரிமை கோரிய ட்ரம்ப் நிருவாகம் சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை திருப்பியழைக்கத் தொடங்கியிருப்பதாக 2018 டிசம்பரில் அறிவித்தது.
இவ்வருடம் ஜூனில் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் ஜேர்மனியின் பாதுகாப்பு செலவினங்கள் போதாமை காரணமாக அந்நாட்டில் நிலைவைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். ஐந்து மாதங்கள் கழித்து ஆப்கானிஸ்தானில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் அமெரிக்கத் துருப்புக்கள் விலகலுக்கு அவர் உத்தரவிட்டார்.
ட்ரம்பின் படைவிலக்கல் உத்தரவுகளை அவரது " அமெரிக்கா முதலில் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மத்திய பாகம் " என்று வர்ணித்த நியூயோர்க் ரைமஸ் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட கட்டுரையொன்றில் " இந்த அழைப்புக்கள் குறிப்பாக, அவரது ஜனரஞ்சக வாக்காளர் தளத்தை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் நீண்டகாலப் போர்களில் தங்களது பங்கு தொடர்பில் சலிப்படைந்திருக்கும் ஓய்வுபெற்ற படையதிகாரிகளே " என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, பெரியளவிலான படை விலக்கல்கள் அமெரிக்கா சிக்குப்பட்டிருக்கும் " முடிவற்ற போர்களில் " இருந்து விடுபடுவதற்காகவும் வெளிநாடுகளுக்கு உதவி செய்வதற்காக செலவிடப்படுகின்ற நிதியைக் குறைப்பதற்காகவும் அமெரிக்க படைவீரர்களின் இழப்பை குறைப்பதற்காகவும் செய்யப்பட்டவையாகும். .
உதாரணமாக, சோமாலியாவில் இருந்து அமெரிக்கப்படை விலக்கலை அந்த ஆபிரிக்க நாட்டில் அமெரிக்க படையினருக்கு ஆபத்து அதிகரிப்பதன் காரணத்தால் செய்யப்பட்ட ஒரு தீர்மானமாக சொல்லமுடியும். சோமாலியாவின் நிலவரத்தை " மெதுவாக ஆனால் படிப்படியான சீரழிவு என்று புரூக்கிங்ஸ் நிறுவனம் நவம்பர் கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியது ." ட்ரம்ப் தனது பதவிகாலத்தின் கடைசிக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவரது உத்தரவுகள் அரசியல் தன்மையுடையவையாகவும் அமெரிக்கர்களின் கவலையை விடவும் கூடுலான அளவுக்கு ஜனாதிபதி ட்ரம்பின் மரபின் மீது அக்கறை கொண்டதாகவும் இருக்கலாம் என்று வாரச்சஞ்சிகையான ' த வீக் ' நவம்பரில் வெளியிட்ட சிறப்பு அம்ச கட்டுரையில் கூறியது.
ட்ரம்ப் நிருவாகத்தினால் உத்தரவிடப்பட்ட படை விலக்கல் உத்தரவுகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்புக்கள் கிளம்பின. குறிப்பாக மத்திய கிழக்கு, ஆப்பானிஸ்தான் மற்றும் ஆபிரிக்கா தொடர்பில் விடுக்கப்பட்ட உத்தரவுகள் சமஷ்டி அரசாங்கத்தால் மாத்திரமல்ல, குடியரசு கட்சி மற்றும் சிரேஷ்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகளினாலும் கூட கடுமையாக எதிர்க்ப்பட்டது
சிரியாவில் இருந்து படை விலகல் குறித்த ட்ரம்ப் நிருவாகத்தின் 2018 அறிவிப்பைத் தொடர்ந்து 2019 இல் படைவிலகலுக்கான நேர அடடவணை எதுவும் இருக்கவில்லை என்று அவரும் நிருவாகமும் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. நியூயோர்க் ரைம்ஸினால் நவம்பர் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட கட்டுரையொன்றின் பிரகாரம் " சிரியாவில் பல நூற்றுக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் தொடர்ந்தும் நிலைகொண்டிருக்கின்றன".
தவிரவும், ஜேர்மனியில் இருந்து விலக்கிக்கொள்ளப்படவிருக்கும் அமெரிக்கத் துருப்புக்களில் சுமார் அரைவாசி துருப்புக்கள் பெல்ஜியம் மற்றும் இத்தாலி போன்ற ஏனைய நேட்டோ நாடுகளில் மீண்டும் நிலைவைக்கப்படும் என்கிற அதேவேளை, எஞ்சிய துருப்புக்கள் அமெரிக்காவுக்கு திரும்பும். அவற்றில் சிலதுருப்புகள் சுழற்சி அடிப்படையில் ஐரோப்பாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கடந்த ஜூலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியிருந்தார்.
மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்து படைகளை விளக்கிக்கொள்ளும் விவகாரத்தில் நேட்டோ அணிகளின் ஆதரவை மாத்திரமல்ல, முப்படைகளின் பிரதானிகளின் தலைவர் மார்க் மில்லி போன்ற சிரேஷ்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகளின் ஆதரவையும் கூட ட்ரம்ப் நிருவாகத்தினால் பெறமுடியவில்லை.
அமெரிக்க ஊடக நிறுவனமான என்.பி.ஆருக்கு அக்டோபரில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் மில்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேர்ட் ஓ பிரையனால் முன்னதாக அறிவிக்கப்பட்ட படைவிலக்கல் நேர அடடவணையின் பிரகாரம் ஊகத்தனமாக தன்னால் செயற்படமுடியாது என்று கூறினார். நவம்பர் நடுப்பகுதியில் சி.என்.என்.செய்தி அறிக்கையொன்றின்படி ஆப்பகான் படைவிலக்கலுக்கு அவசியமான நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறும் அந்தரங்க குறிப்பொன்றை எஸ்தர் வெள்ளை மாளிகைக்கு அனுப்பியிருந்தார்.
" சோமாலியாவில் இருந்து பெரும்பாலான அமெரிக்க துருப்புக்களை விலக்கிக்கொள்வதற்கு ட்ரம்ப் உத்தரவிடுகிறார். உகந்த சிந்தனையின்றி செய்யப்படுகி்ன்ற இந்த படைவிலக்கல் உத்தரவுகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு பெரும் பாதகமான விளைவுகளைக் கொண்டுவரும்" என்று பாரி மக்கவ்றே என்ற ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
நவம்பர் 17 சி.என்.என்.வெளியிட்ட கட்டுரையொன்றில் " ஆப்பானிஸ்தானில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் படைகளை விலக்குவதற்கு ட்ரம்ப் விடுத்த உத்தரவுகள் வெள்ளைமாளிகையில் தனது இறுதிவாரங்களில் அவர் மேற்கொள்ளத்திட்டமிட்டிருக்கும் பெருவாரியான வெளியுறவு விவகார தீர்மானங்களில் ஒன்றாகும். அவை புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஜோ பைடன் ஜனவரியல் பதவியேற்பதற்கு முன்னதாக அவரின் தெரிவுகளை மட்டுப்படுத்தும் நோக்குடன் செய்யப்படுபவையாகும் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கட்டுரையில் மத்திய கிழக்கு நிறுவனத்தின் ஆய்வாளர்களில் ஒருவரான சார்ள்ஸ் லிஸ்டரை மேற்கோள்காட்டி" ஜனநாயகக் கட்சிக்காரர்களை சிக்கலான சூழ்நிலைக்குள் மாட்டிவிடுவதற்கே ட்ரம்ப் முயசிக்கிறார் ." என்று கூறப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், ட்ரம்ப் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் பென்டகன் அவசரம் காட்டுவதாக இல்லை என்றே ஊடகங்கள் பலவற்றினதும் செய்திகளில் இருந்து அறிய முடிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM