(எம்.மனோசித்ரா)
மாகாணசபை முறைமையை தொடர்ந்தும் செயற்படுத்துவதா இல்லையா என்பது எம்மால் தன்னிச்சையாக எடுக்கப்படக் கூடிய தீர்மானம் அல்ல. இவ்விடயம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாக தீர்மானிக்கப்பட வேண்டியதொன்றாகும். அவ்வாறில்லை என்றால் சர்வதேச மட்டத்தில் எதிர்வரும் காலங்களில் மீண்டும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஆளுங்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இதனைக் கூறினார்.
கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் மாகாணசபைகளை மீண்டும் மேலும் வலுப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் எவ்வாறு துரிதமாக மாகாணசபைகளை வலுப்படுத்துவது என்பது குறித்து மீண்டும் ஆளுங்கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு அதில் ஆராயப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்படுவதாக பௌத்த மதத் தலைவர் தொடர்ந்தும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதே இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியமை குறித்து தயாசிறி ஜயசேகர கூறினார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
மாகாணசபைத் தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானதாகும். மாகாணசபை முறைமையை தொடர்ந்தும் செயற்படுத்துவதா இல்லையா என்பது எம்மால் தனித்து எடுக்கப்படக் கூடிய தீர்மானமல்ல. காரணம் இது இந்தியாவுடன் கலந்துரையாடப்பட வேண்டிய விடயமாகும். அவ்வாறில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் சர்வதே மட்டத்தில் மீண்டும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.
அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திர கட்சியின் அதிருப்தி நிலைமை குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டதா என்று வினவியதற்கு பதிலளித்த அவர் ,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சி தலைவர் சகலரதும் முன்னிலையில் நாம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தினோம். அதற்கமைய எதிர்வரும் வாரங்களில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இதேவேளை கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் ,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கூறுகையில்,
மதத் தலைவர்கள் மாகாண சபை முறைமை என்ற ஒன்று இல்லாததைப் போன்று எண்ணியே கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறில்லை. மாகாணசபை இன்றும் காணப்படுகிறது. அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் அவை மக்கள் பிரதிநிதிகள் ஊடாக முன்னெடுக்கப்படுவதில்லை. அதிகாரிகள் ஊடாகவே அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டில் காணப்படுகின்ற கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில் தேர்தலொன்றை நடத்தக் கூடிய சூழல் இல்லை. எனினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதில் கொவிட் நிலைமை பாரிய தாக்கத்தை செலுத்தாது என்பதால் தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு தோற்றத்திற்கான வாய்ப்பும் உருவாகக் கூடும் என்றார்.
அமைச்சர் காமினி லொக்குகே கூறுகையில்,
மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். எமது கொள்கையின் அடிப்படையில் அதனை நிச்சயமாக நடத்துவோம். எனினும் புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக புதிய தேர்தல் முறைமையினூடாக மாகாணசபைத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எனினும் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.
அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கூறுகையில்,
ஆளுங்கட்சி தலைவர் கூட்டத்தின் போது மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தையே பலரும் முன்வைத்தார்கள். எனினும் நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு பொறுத்தமானதொரு தீர்மானத்தை விரைவில் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில்,
மாகாணசபைத் தேர்தலை எந்த சந்தர்ப்பத்தில் நடத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பது தற்போது காணப்படும் கொவிட் நிலைவரமேயாகும். எவ்வாறிருப்பினும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM