சதீஷ் கிருஷ்ணபிள்ளை
காலச் சக்கரத்தில் கழிந்து செல்லும் வருடத்தின் இறுதிவாரத்தில் நின்று கொண்டு, மலரப் போகும் புத்தாண்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். 2020 என்பது கருணை மிக்க ஆண்டாக இருக்கவில்லை. உயிர்களைப் பலிகொண்டு, நம்பிக்கையை கேள்விக் குறியாக்கிய வருடம்.
அதில் பிளவுகள் நிறைந்திருந்தன. சண்டைகள் நிரம்பி வழிந்தன. இருந்தபோதிலும், நம்பிக்கையும், கருணையும் கொண்டு சவால்களை வெல்ல முடியும் என்பதையும் போதித்தது. பெருந்தொற்று உலகைப் புரட்டிப் போட்டது. அரசியலையும், ஆட்சி நிர்வாகத்தையும் மாத்திரமல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அன்றாட வாழ்க்கையையும் தான். பெருந்தொற்றுக்கள் புதியவை அல்ல. அவை சக்கரமாக சுழன்று வருபவை. இன்றும் வரலாம். நாளையும் வரலாம். அவற்றைக் கடந்து செல்வது அல்ல, அவற்றில் இருந்து கற்றுக் கொள்வதே முக்கியமானது.
பேரவல சந்தர்ப்பங்களில் தன்னலம் மறந்து மற்றவர்களைக் கருணையுடன் அரவணைத்துக் கொள்வதை நாம் கற்றுக் கொள்கிறோம். மீண்டெழும் சக்தியுடையது எமது உலகம். எது முடியாதது என்று நாம் நினைக்கிறோமே, அது முடியும் என்ற நம்பிக்கையுடன் வழிநடத்தப்படும் உலகம். நிலவென்ன, நட்சத்திரங்கள் என்ன, புதிய கண்டுபிடிப்புகளாலும், தொழில்நுட்பத்தாலும் அடைய முடியாதது எதுவும் இல்லை என்பதையும் கற்றுத்தந்த உலகத்தில் ஒரு வருடத்தைக் கடந்து நிற்கிறோம்.
ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகத்தில் மக்கள் வீதிகளில் இறங்கி, வாக்குகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். வீரபுருஷர்கள் என்ற வரைவிலக்கணம் மாறியது. தடைகள் தகர்க்கப்பட்டன. ஐக்கியம் கோலோச்சும் எதிர்காலம் பற்றிய கற்பனை எமக்கு உண்டு.
நாளைய தினம் சமத்துவம் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறோம். எனினும், நாளைய தினத்திற்கான பெருஞ்சவால்கள் உறைந்து நிற்கின்றன. வழமை என்பது என்ன என்பது பற்றிய எமது புரிந்துணர்வையும், விழுமியங்களையும் கடந்து செல்லும் வருடம் தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. இது எதையுமே, யாருமே எதிர்வுகூற முடியாத, எதிர்பார்க்க முடியாத காலப்பகுதியாக கழிந்து செல்கிறது.
இருந்தாலுமென்ன? பேரவலங்கள் புதியவை அல்ல. மனிதகுலம் கஷ்டங்களைக் கடந்தே வந்திருக்கிறது. அவற்றை சமாளித்து வலுவாக மீண்டெழுந்திருக்கிறோம். கூடுதலான அறிவுடனும், வலுவுடனும் நிமிர்ந்து நின்று நடைபயின்றிருக்கிறோம். இவ்வாண்டும் அப்படியே தானிருக்கும்.
2020ஆம் ஆண்டு பற்றி பார்வை, சற்று விரிவாக, கழிந்து செல்லும் வருடம் கருணையில்லாத காலப்பகுதியாக இருந்ததென்றால், அதற்குரிய முதன்மைக் காரணம் கொரோனா. மனிதன் அண்டாத அன்டார்ட்டிக்கா கண்டம் வரை பரவிய நுண்ணுயிர். பிணிகளும், நெருக்கடிகளும் காவும் கொள்ளும் உயிர்களின் எண்ணிக்கையில், இவ்வாண்டு 20 இலட்சத்தை சேர்க்கப் போகும் பெருந்தொற்று.
இதன் பாதிப்புக்கள் புள்ளிவிபரங்களால் விபரிக்க முடியாதவை. உலகெங்கிலும் ஆகக்கூடுதலாக இரண்டரை கோடி பேர் வரை தொழிலை இழக்கலாம் என்று சர்வதேச தொழில் ஸ்தாபனம் கூறுகிறது. 11 கோடிக்கு மேற்பட்டவர்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்படலாம் என்கிறது. இன்னொரு புள்ளிவிபரம்.
இது தவிர, அரசியல், சமூக, கலாசார ரீதியிலான பாதிப்புக்கள். முன்னால் இருக்கும் மனிதரை நம்ப முடியாத சூழ்நிலை. மனித குலத்தின் அடிப்படைப் பண்பை உதறித் தள்ளி, அவநம்பிக்கையுடன் நோக்கத் தொடங்கினோம். மூன்றடி தள்ளி நின்றோம். அன்பான அரவணைப்பு தேவைப்படும் மனிதருக்கு எட்டி நின்றே உதவி செய்யும் அவலம்.
அரசியல் நியதிகள் மாறின. ஜனநாயகத்திற்குள் அராஜகம் புகுந்தது. ஈரான், ஜோர்தான், மொரோக்கோ முதலான நாடுகள் பத்திரிகையை அச்சிட்டு விநியோகிப்பதை நிறுத்தின. ஹங்கேரி பாராளுமன்றம் பெருந்தொற்று நிலைமையைப் பயன்படுத்தி, பிரதமரின் ஆட்சி அதிகாரத்தை நீடித்தது.
அதிகார மோகம் கொண்ட ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கால வரையறை இன்றி, ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்க வழிபிறந்தது. ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் உலகளாவிய போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பெருந்தொற்று நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியது. மியன்மாரில் இருந்து நாடற்றவர்களாக விரட்டி அடிக்கப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள், உலகின் மிகப்பெரிய அகதி முகாமில் நெருக்கமாக அடைத்து வைக்கப்பட்டார்கள். அவர்களில் சிலர் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மிதக்கும் தீவொன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையில், இந்தக் குழு நோய்க்காவியாக இருக்கலாம் என்ற கற்பிதங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் எல்லைகள் அடைக்கப்பட்டன. கதவுகள் மூடப்பட்டன. சிலர் வீதியில் மாண்ட சம்பவங்களும் உண்டு. தமது மத நம்பிக்கையின் பிரகாரம், இறந்தவர்களுக்கான இறுதிக் கிரியைகளை நிறைவேற்றும் உரிமை மறுக்கப்பட்டது.
உலகெங்கிலும் 165 நாடுகளில் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக, 150 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் கல்விக்குப் பொறுப்பான அமைப்பாகத் திகழும் யுனெஸ்கொ கூறுகிறது. கற்றல் முறைகள் மாறின. புத்தகங்களை திறன்பேசிகளும், கணினிகளும் மாற்றீடு செய்தன. நல்லது தான். எனினும், இதுவும் ஏற்றத்தாழ்வை அதிகரித்தது. அந்த வசதிகளை வைத்திருந்தவர்கள் படித்தார்கள். இல்லாதவர்கள் வீட்டின் முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஏற்றத்தாழ்வு கல்வியில் மட்டுமல்ல. சுகாதாரத் துறையிலும் நீடித்தது. எங்கு கொவிட் தொற்றின் ஆபத்து அதிகமாக இருக்கிறதோ, அங்கு நலிந்தவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இங்கு வலியவர் யார், நலிந்தவர் யார் என்பது பெரும்பாலும் தோல் நிறத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. பேதம் பார்க்கும் ஆற்றல் கொரோனா வைரஸிற்கு இருக்கிறதோ தெரியவில்லை. இருந்தபோதிலும், வறிய சூழலில் வாழும் நலிந்த மக்களை கூடுதலாக தொற்றியது. தம்மைக் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மனிதர்களின் பலம். அந்த நம்பிக்கையை சில சமூகங்கள் வலுவாகப் பற்றிக் கொண்டன.
முகக்கவசம் அணிந்தால் மாத்திரமே வணக்கஸ்தலத்திற்குள் அனுமதி என்ற கட்டுப்பாடு, சில சமூகங்களில் நம்பிக்கையை அசைத்துப் பார்த்தது. உலக முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் கஃபாவை வலம் வரும் சில நாட்கள் இழந்தார்கள். ஐயப்ப தரிசனத்திற்காக சபரிமலை சென்ற இந்து அடியார்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டியிருந்தது.
கிறிஸ்தவ தேவாலயங்கள் நத்தார் திருப்பலிப் பூஜையை இணையத்தின் வாயிலாக அஞ்சல் செய்தன. மத நிறுவனங்கள் வழங்கிய சமூகப் பாதுகாப்பைத் தாண்டி, லொக்டவுன் என்ற முடங்கிய வாழ்க்கை உளவியல் தாக்கங்களை அதிகரித்தது. வளர்ச்சி பெற்ற சமூகத்தில் கூடுதலாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார்கள்.
ஓடியோடி ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்த ஜப்பானிய சமூகம். அங்கு ஒரேயிடத்தில் அடைந்து கிடக்கும் வாழ்க்கை காரணமாக, உளவியல் அழுத்தம் ஏற்பட்டு தமது உயிரைத் தாமே மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில், சாராயம் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டவர்களின் கதைகளையும் மறக்க முடியாது. முடக்கல், வாழ்க்கை, குடும்ப வன்முறைகளையும் அதிகரித்தது.
வருமானம் இல்லை, எதிர்காலம் பற்றிய அச்சம், என்ன நடக்குமோ என்ற பயம், ஆணாக இருந்தும் அடைந்து கிடக்கிறேனே என்ற வெறுப்பு மேலோங்க, வீடுகளில் முடங்கிக் கிடக்கும் ஆண்கள் மனைவிமாரை அடிப்பதும், பிள்ளைகளைத் துன்புறுத்துவதும் ஆணாதிக்க சமூகங்களில் அன்றாட நிகழ்வுகளாக மாறின.
குடும்ப வன்முறைகளுக்கு போர் நிறுத்தம் அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுக்கும் அளவிற்கு நிலைமை மாறியது. இருவர் இருக்கும் இடத்தில் ஒருவரைத் தான் காப்பாற்ற முடியுமென்றால், முதியவரையோ, அங்கவீனமுற்றவரையோ புறக்கணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை சில சமூகங்கள் எதிர்கொண்டன. இது பிழைத்திருத்தல் கோட்பாடு சார்ந்த தவிர்க்க முடியாத உண்மை என்றாலும், பெருந்தொற்று சூழலில் மனிதகுல மாண்புகளை கேள்விக்கு உட்படுத்தி, நியதிகளைத் திருத்தியெழுதும் தேவையை உருவாக்கியது.
பெருந்தொற்றின் சூறாவளிக்குள் நம்பிக்கையும் காளானாக மலர்ந்து உயிர்களுக்கு குடைபிடித்தன. தமது உயிரைத் துச்சமென மதித்து, முகக் கவசங்களை அணிவதன் வேதனையை மாறாத வடுக்களாக முகத்தில் வரைந்து கொண்ட மருத்துவ பணியாளர்கள், மூச்செடுக்க சிரமப்படும் உயிர்களைப் பராமரித்தார்கள்.
ஆட்சி அதிகாரம் என்பது என்ன, சமூகத்தை நெறிப்படுத்தி மனிதகுல மேம்படுத்த உதவும் கருவி தானே என்பதை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் போன்ற தலைவிகள் நிரூபித்துக் காட்டினார்கள். பெருந்தொற்றை சமாளிப்பதற்காக தாய்மை உணர்வு உந்த, சரியான தீர்மானங்களை மேற்கொண்டார்கள். சவாலில் வெற்றியும் பெற்றார்கள்.
பெருந்தொற்று அரசியலுக்குள் சிக்காமல் உலக மேம்பாட்டுக்காக பாடுபட்ட நிறுவனங்களையும் சொல்ல வேண்டும். தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் அது தமது பிரஜைகளுக்கே முதலில் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் காசு வழங்கி பைசர் நிறுவனத்தைக் கட்டிப்போட நினைத்தார், டொனால்ட் ட்ரம்ப்.
அந்நிறுவனம் அழுத்தத்தை நிராகரித்து, ஜேர்மனியைச் சேர்ந்த பயோ-என்-டெக் நிறுவனத்துடன் சேர்ந்து தடுப்பு மருந்தை உருவாக்கியது. பைசர் நிறுவனம் சுயாதீனமாக செயற்பட்டதால், துருக்கியில் பிறந்த இஸ்லாமிய விஞ்ஞானி தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இது தவிர, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மொடர்னா நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை இலாப நோக்கத்திற்கு அப்பால் சென்று வறிய நாடுகளிலும் விநியோகிக்கும் சில ஏற்பாடுகள் உள்ளன. இந்த ஏற்பாடுகளைத் தாண்டியும் சில அமைப்புக்கள் உதவி செய்கின்றன. மருந்தை யாருக்கு முதலில் வழங்குவது என்ற விதிமுறைகள் இல்லை. இவை இல்லாவிட்டாலும் பொருத்தமானவரைத் தெரிவு செய்து முன்னுரிமை அளிப்பதற்கான பாடங்களை கொவிட்-19 பெருந்தொற்று கற்றுக் கொடுத்துள்ளது.
மனிதகுல வரலாற்றையே புரட்டிப்போட்ட ஸ்பானிஷ் காய்ச்சல் முதலான கொள்ளை நோய்களை ஆராயலாம். இவை இரண்டாவது அலையாக பரவிய சந்தர்ப்பத்தில் கூடுதலான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன என்பது உண்மை தான். எனினும், கொவிட்-19 தொற்றை சமாளிக்கக்கூடிய ஆற்றல்களை கற்றுக் கொண்டு, கூட்டு முயற்சியாக அறிவியலைப் பயன்படுத்தி பல தடுப்பு மருந்துகளை உருவாக்கியிருக்கிறோம். அதன் அடிப்படையில் பெருந்தொற்றை வெல்லும் ஆற்றல் உலகிற்கு உண்டு.
கடந்து சென்ற ஆண்டு அனுபவங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. தமது அரசியல் அசட்டைத் தனத்தால் பெருந்தொற்றின் சவால்களை புறங்கையால் ஒதுக்க முனைந்த டொனால்ட் ட்ரம்ப், வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளார். காலத்திற்குக் காலம் தோன்றும் நச்சுயிரிகளை விடவும் ஒரு சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய இனவாதத்தை, டெனால்ட் ட்ரம்பின் ஆட்சி காலத்தில் விழித்தெழுந்த அமெரிக்கர்களின் மனசாட்சி சற்று ஆட்டம் காண வைத்துள்ளது. அந்நாட்டில் முதற்தடவையாக இந்திய வம்சாவளி பெண்ணொருவர் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார்.
இந்திய மண்ணில் இஸ்லாமியர்களை ஒடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட பிரஜாவுரிமைகள் சட்டம், மக்கள் ஆர்ப்பாட்டங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. புதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவின் சமஷ்டி ஏற்பாட்டுக்கு சவால் விடுக்கும் வகையில் நிறைவேற்றிய வேளாண்மை சட்டங்கள் பெரும் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கில் திரண்டுள்ள விவசாயிகள் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கிறார்கள். மனித சமூகங்கள் தாண்டியும் மாற்றங்கள் நிகழ்கின்றன. மேற்கில் அமேசன் காடுகள் தீக்கிரையான சந்தர்ப்பங்களில், சகல நாடுகளிலும் ஒருமித்து ஒலித்த குரல்களால் வனவிலங்குகள் காப்பாற்றப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தின் மூலையில் உயிர்களைத் தேடும் அறிவியல் முயற்சிக்காக நிலவுக்கும், செவ்வாய்க்கிரகத்திற்கும் விண்கலங்கள் அனுப்பபட்டுள்ளன. இந்நாடுகளின் வரிசையில் எமிரேட்ஸம் இணைந்தமை சிறப்பு.
பெருந்தொற்று உச்சத்தைத் தொட்டு, விமானங்கள் தரையிறக்கப்பட்டு, எல்லைகள் மூடப்பட்டு, சமூக, அரசியல், பொருளாதார, கலாசார ரீதியாக பெரும் சவால்களை எதிர்கொண்டு, கொண்டாட்ட மனநிலையில் அல்லாமல் பதகளிப்புச் சூழலில் 2021ஐ வரவேற்கிறோம்.
மீண்டும் சொல்வதாயின், பேரவலங்கள் புதியவை அல்ல. மனிதகுலம் கஷ்டங்களைக் கடந்தே வந்திருக்கிறது. அவற்றை சமாளித்து வலுவாக மீண்டெழுந்திருக்கிறோம். கூடுதலான அறிவுடனும், வலுவுடனும் நிமிர்ந்து நின்று நடைபயின்றிருக்கிறோம். 2021ஆம் ஆண்டும் அப்படியே தானிருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM