(ஆர்.ராம்)
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாரும் விஷமத்தனமான பிரசாரங்களை முன்னெடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாக, ஐ.நா.விடயங்களை தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஐக்கியப்பட்டு கையாள்வதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கான பரிந்துரைகளை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கையாள்வதற்கான யோசனைகளை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கஜேந்திரகுமார் மற்றும் சி.வி.விக்னேஸ்வரனிடத்தில் கைளித்திருந்தார்.
சுமந்திரன் கையளித்த யோசனைகள், ஐ.நா.மனித உரிமைக் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசத்தினை வழங்குவதற்கான பரிந்துரைகளாக உள்ளன என்று குறிப்பட்டு இருவரும் அந்த யோசனையை நிராகரித்துள்ளனர்.
இதில் கஜேந்திரகுமார், வெறுமனே நிராகரித்ததோடு நிறுத்தியிருந்த போதும் விக்னேஸ்வரன் சுமந்திரனுக்கு காட்டமான பதில் கடிதமொன்றை அனுப்பியதோடு அதனை பகிரங்கப்படுத்தியும் உள்ளார்.
இப்பின்னணியிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. அதேநேரம் போர் நிறைவுக்கு வந்தன் பின்னரான கடந்த பத்து வருடங்களில் ஐ.நா.வில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான விடயங்கள் எதனையும் முழுமையாக செய்வதாக இல்லை.
பொறுப்புக்கூறல் விடயத்தில் மந்தமான நிலைமையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆகவே தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தொடர்தேச்சியாக பேணும் அதேநேரம் இந்த விடயத்தில் சர்வதேசத்தின் பிரசன்னத்தினையும் தக்கவைத்திருக்க வேண்டியுள்ளது. அல்லது ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் சென்று மியன்மாரிலும், சிரியாவிலும் நடைபெற்ற விடயங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதைப்போன்று முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.
மேலும் அடுத்த கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் புதிய பிரேரணையை கொண்டுவரப்படும் என்று கூறப்படுகின்றது. ஆகவே இந்த விடயங்களில் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே விக்னேஸ்வனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் யோசனையொன்றை வழங்கியிருந்தேன்.
மேலும், அந்த யோசனையில் உள்ள விடயங்களுக்கு மேலதிகமாக அவர்களுடைய யோசனைகள் அல்லது திருத்தங்களுடனான முன்மொழிவுகள் ஆகியவற்றை பகிருமாறும் கோரியிருந்தேன். இறுதியாக மூன்று தரப்பினரும் கலந்தாலோசித்து தீர்மானம் எவ்வாறானதாக அமையவேண்டும் என்ற விடயத்தினை இறுதி செய்வோம் என்றும் கூறியிருந்தேன். எனது யோசனைகள் இறுதியானவை அல்ல. மூன்று கட்சிகளையும் இணைத்து ஜெனிவா விடயங்களை கையாள்வதற்கான முன்முயற்சியாகவே அந்த யோசனைகள் அடங்கிய ஆவணம் காணப்படுகின்றன.
அந்த யோசனைகளை நிராகரிப்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் நான் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு காலகெடு வழங்குவதற்கான யோசனையைச் செய்துள்ளேன் என்பது விஷமத்தனமான பிரசாரமாகும். அவருடைய உண்மைக்கு புறம்பான விடயங்களை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்றார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்புக்கான வரைவினை இறுதிசெய்வதற்காக நேற்று முன்தினம் சனிக்கிழமை கூடியபோது, ஜெனிவா விடயம் தொடர்பில் அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அரசாங்கத்தினைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கான வலுவானதொரு நடவடிக்கையை தமிழ்த் தரப்புக்கள் ஐக்கியப் பட்டு முன்னெடுக்க வேண்டும். இயலுமான அனைத்து தரப்பினரையும் பொதுநிலைப்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அதன்மூலம் தமிழ்த் தரப்பு ஓரணியில் நின்று தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஒருமித்த குரலில் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்திற்கு அமைவாக கூட்டமைப்பும் பங்காளிக்கட்சிகளும் ஏனைய தரப்புக்களை இந்த விடயத்திலாவது ஒன்றுபடச் செய்வதற்கு முயற்சிகள் தொடரப்படும் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM