(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எமது பொருளாதரத்தை தேசிய ரீதியில், சவால்களை வெற்றிகொள்ளும் வரவு செலவு திட்டத்தையே அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நாம் முன்வைத்துள்ளோம், மக்களுக்கான எதுவுமே இல்லை என்ற விமர்சனத்தை தாண்டி தேசிய பொருளாதாரதத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் வரவு செலவு திட்டத்தை பார்க்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
எமது அரசாங்கம் பாரிய கடன் நெருக்கடியில் சிக்கும் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் செலுத்தப்படாதிருந்த கடன்களையும் சேர்த்து நாம் செலுத்தியுள்ளோம். இவற்றில் வெளிநாட்ட கடன்களுக்கு பதிலாக தேசிய கடன்கள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதம் இடம்பெற்றது நிலையில் வரவு செலவு திட்ட நன்றியுரையாற்றிய பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்தார், அவர் மேலும் கூறுகையில்,
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் பல யோசனைகளை முன்வைத்தீர்கள், அவற்றை எமது கவதிற்கு கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்பதை நினைவுபடுத்துகின்றேன். இன்று முழு உலகமும் இவ்வாறான பேரழிவுக்கு நாம் அனைவரும் முகங்கொடுப்போம் என 2019 ஆம் ஆண்டில் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனினும் இலங்கையில் இந்த நிலைமைகள் உருவாகியபோதும் அதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்த எமது சுகாதார அமைச்சிற்கு முடிந்தது. இப்போது கொவிட் 19 இரண்டாம் அலையை கட்டுபடுத்தவும் பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துக்கொண்டுள்ளோம். தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப்பொதியை வழங்கும் திட்டத்தை இன்னும் இரண்டு வாரகாலத்திற்கு நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட இன்றைய தினம் ( நேற்று) தீர்மானம் எடுத்துள்ளோம். தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தோம். எதிர்காலத்திலும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 70 பில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளோம். இப்போது வரையில் இந்த தொகை 82 பில்லியன் ரூபாய்களாக உயர்வடைந்துள்ளது. டிசம்பர் மாதம் முடியும் வேளையில் இது 90பில்லியன் ரூபாய்களாக இருக்கும் என நம்புகிறேன். எனவே இவ்வாறான பாரிய சவால்கலையே நாம் எதிர்கொண்டு வருகின்றோம். உலகத்தில் நடக்கும் செயற்பாடுகள் எவ்வாறு எமக்கும் பாதிக்கின்றது என்பதன் மூலமாக நாம் உலகத்துடன் எவ்வளவு நெருக்கமாக உள்ளோம் என்பது வெளிப்படுகின்றது. எமது பொருளாதரத்தை தேசிய ரீதியில் பலப்படுத்தியிருந்திருந்தால் இன்று எமக்கு இந்த நிலைமைகளை சிறப்பாக எதிர்கொள்ள முடிந்திருக்கும். கொவிட் -19 எமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம் இதுவே. இப்போது நாம் உருவாக்கிய வரவு செலவு திட்டமும் சௌபாக்கிய தூரநோக்காக இந்த வரவு செலவு திட்டத்தை நாம் உருவாக்கியுள்ளோம்.
ஏனைய வரவு செலவு திட்டங்களில் இருந்த நோக்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை, தேசிய ரீதியில் எமது விவசாயம், பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அதன் மூலமாக இவ்வாறான நெருக்கடிகளை கையாளவே நாம் இந்த வரவு செலவு திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
இந்த வரவு செலவு திட்டத்தில் பொதுமக்களுக்கு எதுவுமே வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் ஒன்றை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், நாம் எந்த நேரத்திலும் இலவசமாக பணம் பங்கிடும் வேலைத்திட்டங்களை உருவாக்கவில்லை. அடுத்த தேர்தல்களை இலக்குவைத்து எந்தவொரு திட்டமும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை,
இந்த வரவு செலவு திட்டத்தில் 350 பில்லியன் நெடுஞ்சாலைகளுக்கு ஒதுக்கியுள்ளோம். இந்த அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கே சென்றடையும். குடிநீர் திட்டத்திற்காக 135 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம். இதன் மூலமாக 2024 ஆம் ஆண்டில் சகல மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும். அதேபோல் மின்சார திட்டம், விமானநிலைய அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்திகளுக்கும் நிதி ஒதுக்கியுள்ளோம். இந்த அபிவிருத்தியின் மூலமான நன்மைகள் மக்களுக்கே முழுமையாக சென்றடையும். வரவு செலவு திட்டத்தின் மூலமாக ஒதுக்கும் நிதி மக்களுக்கே சென்றடையும், அதற்காகவே முதல் தடவையாக இராஜாங்க அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கி மக்களுக்கான நேரடியான பொறுப்புக்கூறும் நபர்களாக நியமித்துளோம்.
ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரணை செய்யாது நீதிமன்றங்களில் குவிந்துக்கிடப்பதாக நீதி அமைச்சர்கூறியிருந்தார். அதற்காக 20 நீதியரசர்கள் நியமித்து வழக்கு விசாரணைகளுக்கான சந்தர்ப்பத்தை அதிகரித்துள்ளோம். நீதியானது சரியான நேரத்தில் நிலைநாட்டப்படாவிட்டால் மக்களுக்கு அநீதியே ஏற்படும். அதனால் நீதிமன்றங்களின் நிர்வாகத்திற்கு புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி அவற்றின் செயற்றிறனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நீதிமன்ற கட்டங்களும் துரிதமாக மறுசீரமைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பொது மக்களுக்கு சொந்தமானதாகும்.
வரி குறைக்கப்படுவதால் அரச வருமானம் குறைவடையுமென கூறியிருந்தனர். அதிகமான வரி சுமைகள் சுமத்தப்படுவதால் தேசிய வியாபாரிகளும் உற்பத்தியாளர்கமே பாதிக்கப்பட்டிருந்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ‘ராஜபக் ஷர் வரி’ என்ற வரியையும் விதித்திருந்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின் வரி கொள்கையால் கைத்தொழிலாளர்களும் வியாரிகளும் நிர்க்கதியாகியிருந்தனர். அதிகளவான வர்த்தகங்கள் வீழ்ச்சிக்கண்டிருந்தன. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன.
அதனால் நாம் வரியை குறைத்திருந்தோம். அரசாங்கம் வரியை பெற்றுக்கொள்ள வர்த்தங்கள் வெற்றிகரமாக இயங்க வேண்டும். வரி குறைப்பால் அரச வருமானம் வீழ்ச்சியடைவில்லை.
2020ஆம் ஆண்டின் கணக்கிடப்பட்ட அரச வருமானத்தில் 75 சதவீதத்தை முதல் 10 மாதங்களில் பெற்றுக்கொள்ள முடிந்தது. கொவிட் தொற்றுக் காரணமான ஏற்றுமதிகள் குறைவடைந்திருந்த போதிலும் அரச வருமானம் 1200 பில்லியன்வரை பெறப்பட்டுள்ளது. சிக்கலான வரிக் கொள்கைகளுக்கு பதிலாக எளிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினோம். நாட்டை கட்டியெழுப்பும் வரி உட்பட பல வரிகளை நாம் முற்றாக நீக்கியிருந்தோம். சிகரட்,மதுபானம், சூதாட்டம், வாகனங்கள் என பலவிடயங்களுக்கு தனி தனியாக இருந்த வரி முறைகளுக்கு பதிலாக பொருட்கள் மற்றும் சேவைகள் என்ற தனியார வரி முறைமையை அறிமுகப்படுத்திருந்தோம். ஒன்லைன் மூலம் வரிகளை செலுத்த நடவடிக்கைகள எடுத்துள்ளோம்.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்த போது கடன் தவனைகளை செலுத்துவது தொடர்பில் பல கருத்துகளை வெளியிட்டிருந்தனர். கடன் தவணைகளை எம்மால் செலுத்த முடியாதென பெரும் எதிர்பார்ப்புடன் கூறியிருந்தனர். என்றாலும் ஒக்டோபர் 02ஆம் திகதி நாம் செலுத்த வேண்டியிருந்த டொலர் பில்லியன்களை செலுத்திருந்தோம். கடன் தவணைகள் செலுத்தப்பட்ட பின்னர் அதுதொடர்பில் எவரும் பேசவில்லை. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் செலுத்தப்படாதிருந்த பல கடன் அறிக்கைகளையும் நாம் செலுத்திருந்தோம். வெளிநாட்ட கடன்களுக்கு பதிலாக தேசிய கடன்கள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம்.
எமது சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாகதான் இக் கடன்களை எம்மால் செலுத்த முடிந்தது. கொவிட் தொற்றுக் காரணமாக தினமும் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக அரச செலவுகள் உள்ள போதிலும் கடன்களை செலுத்தியுள்ளோம். தேவையானவைக்கு பதிலாக தேவையற்ற அதிகமான பொருட்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. அவற்றை கட்டுப்பத்தினோம். அதனால் எமது பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் வரவேற்றனர். விவசாயிகளும் வர்த்தகர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எமது ஏற்றுமதி பொருளாதாரம் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமாகும் போது ஏற்றுமதி வருமானம் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. 2019ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம் வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது அது 4.3 சதவீதம் அதிகரிப்பாகும். கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் ரூபாயின் பெறுமதியை எம்மால் பேண முடிந்தது. எமது நோக்கில் உள்ள சாதகமான காரணிகளால் இது சாத்தியமானது. உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு சாதகமான காரணிகளே இதன்மூலம் எமக்கு தெளிவாகியுள்ளது. கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் ஏற்றுமதியை அதிகரிக்க முடிந்துள்ளது.
இறக்குமதியை கட்டுப்படுத்தி தேசிய செலுத்தல்களை அதிகரித்து அந்நிய கையிறுப்பை பேண முடிந்துள்ளது. இதுதான் நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டிய பாதை. கொவிட் தொற்று எமக்கு கற்றுக்கொடுத்த பாடம்தான் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்க வேண்டுமென்பது.
வரி கொள்கையின் ஸ்திரத்தன்மையால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் அறிமுக்கப்படுத்தியிருந்த வரிக்கொள்கை மிகவும் அவசியம் என்பதை கொவிட் தொற்று நெருக்கடி உணர்த்தியிருந்தது. 2025ஆம் ஆண்டாகும் போது வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறையை தேசிய வருமானத்தில் 4.0 சதவீதமாக குறைப்பதே சுபீட்சமான நோக்கு என்ற ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதுதான் எமது இலக்கும். வரவு – செலவுத் திட்ட விவாத்தில் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்ட ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவிப்பதுடன் அனைவரினதும் கருத்துகள்மீது அவதானம் செலுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM