எமது உறவுகளைத் தொலைத்துவிட்டு நாம் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில்வாழ்ந்து வருகின்றோம். எமது உறவுகளுக்கு என்ன நடந்தது. அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை பகிரங்கமாக அறிவியுங்கள். எமக்கு மரணச் சான்றிதழோ இழப்பீட்டுத் தொகையோ அவசியமில்லையென காணாமல்போனோரின் உறவுகள் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் கண்ணீர் மல்க கோரி நின்றனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றது.இதன்போதே மேற்கண்டவாறு காணாமல் போனோ ரின் உறவுகள் தமது ஆதங்கத்தை வெளியிட்டனர்.
எமது உறவுகளை தொலைத்து இன்று நாம் அவர்களை சந்திப்பதற்காக பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துக் கொண்டு
இடைவிடாது எமது தேடல்களை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். எனினும் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து யாரும் பகிரங்கமாக கருத்துக்களை முன்வைப்பதற்கு தயாராகவில்லை என்றும் அவர்கள் கோரினர்.
இன்றும் நாம் எமது உறவுகளைத் தொடர்ந்தும் தேடிக் கொண்டே இருக்கின்றோம். ஆகவே எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை உறுதிபட தெரிவியுங்கள் என கண்ணீர்மல்க கதறி அழுது கோரிக்கை விடுத்தனர்.
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கண்ணீருடன் கதறி அழுதவர்கள் அளித்த சாட்சியங்கள் வருமாறு:
கோண்டாவில் கிழக்கைச்சேர்ந்த விக்னேஸ்வரனின் தந்தையான சண்முகநாதன் மற்றும் அவரது அண்ணரான ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஒரே குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் சாதாரணமான வாழ்வில் வலம் வந்து கொண்டிருந்தபோது 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி சண்முகநாதன் விக்னேஸ்வரனுக்கு விசேட பதவி உயர்வுகள் கிடைத்திருந்தன. அதுமட்டுமின்றி உள்நாட்டிலும் வெ ளிநாட்டிலும் பல்வேறு செயற்பாடுகளை அவர் முன்னெடுத்து வந்தார்.
இவ்வாறான நிலையில் அவரை நசுக்கவேண்டிய தேவை யாருக்கும் இருந்ததில்லை. எனினும் அவர் திடீரென காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார். அவருடைய காணாமல் போதல் சம்பவத்திற்கு தொடர்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகின்றது.
அரியாலையைச் சேர்ந்த மகாலிங்கம் சசிகலா என்பவர் சாட்சியமளிக்கையில்
எனது சகோதரரான ரவிகரன் 1996ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொழில் நிமிர்த்தம் சென்றபோது திடீரெனக் காணாமல்போயுள்ளார்.
இதனையடுத்து நாம் தேடுதல்களை மேற்கொண்டோம். அதன்போது எனது சகோதரர் காணாமல் போனதாக கூறப்பட்டது. எனினும் அவர் வழமையாக தனது பயணப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது இராணுவ வாகனம் ஒன்று அவரைதொடர்ந்து சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ முகாம்களுக்கு நாங்கள் சென்று எனது சகோதரர் தொடர்பாக தகவல்களை வழங்குங்கள் எனக்கோரினோம்.
அதன்போது அவ்வாறான எந்த ஒரு நபரையும்கைது செய்யவில்லை என்றே இராணுவத்தினர் கூறி வந்தனர். அதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆணைக்குழு பொலிஸ் நிலையம் உள்ளிட்ட பலதரப்பட்ட இடங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்தோம்.தற்போது வரை எமது உறவுகளைநோக்கி தோடல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்றார்.
நடராஜா சிவக்கொழுந்து என்பவர் சாட்சியமளிக்கையில்
எனது மகன் தொழிநுட்பக் கல்லூரியில் கல்வி பயின்றுகொண்டிருந்தபோது மீசாலைக்குச் சென்றிருந்தார். இதன்போது வேம்பிராயில் உள்ள தனது அண்ணாவின்வீட்டிற்குச் சென்றவர் அங்கு தேனீர் அருந்திக்கொண்டிருக்கும்போது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். கஜபாகு படைப்பிரிவைச் சேர்ந்த லெப்ரிணட் ஜீ.பி.ஜீ குலதிலக என்பவரே நேரடியாக எனதுமகனை கைது செய்துள்ளார்.
எனது மற்றொரு மகனின் மனைவியான கண்மணி இதனை நேரில் கண்டசாட்சியமாக உள்ளார் எனக் குறிப்பிட்டார்.
நாவலர் வீதி ஆனைப்ந்தியைச் சேர்ந்த தர்மலிங்கம் நடேஸ் என்பவர் சாட்சியமளிக்கையில்
எனது மகனான டினேஸ் பாபு என்பவரை தற்போதும் தேடிக்கொண்டிருக்கின்றேன். 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த குறித்த நபர் யாழ். பேருந்து நிலையத்தில் காணாமல்போனதாக எனக்கு அறியக்கிடைத்தது என்றார்.
மணியந்தோட்ட உதயபுரத்தைச்சேர்ந்த கருப்பன் நாகம்மா என்பவர் சாட்சியமளிக்கையில் 1996ஆம் ஆண்டு தனது இரு மகன்களான பாலகிருஸ்ணன் மற்றும் சுரேஸ் ஆகியோர் முறையே ஜூன் ஜூலை மாதங்களில் அடுத்தடுத்துக் காணாமல்போனதாக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். விசேடமாக ஜூலைமாதம் தனதுமகனான பாலகிருஸ்ணன் தேவாலயத்திற்குச் சென்றவேளை துண்டிப் பகுதியில்வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டதை அவருடைய சிறிய தந்தையார் நேரில் கண்டுள்ளார். அதேபோன்று சுரேஸ் கடற்றொழிலுக்குச் சென்று திரும்பும்போது ஜூலை மாதம் கொழும்புத்துறைச் சந்தியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றார்.
உடுவிலைச் சேர்ந்த கந்தையா யோகராசா என்பவர் சாட்சியமளிக்கையில்
எனது மகனான சத்திய ரூபன் 2002 ஆம் ஆண்டு முதல் காணாமல்போனார். எனது மகன் வேலை நிமித்தம் யாழ் நகருக்குச் சென்றிருந்த போது காணாமல்போயுள்ளார். யாழ்நகர் சத்திரசந்திப் பகுதியில் அவரை இராணுவம் பிடித்து வாகனத்தில் ஏற்றியதாக நேரில் கண்ட உறவினர்கள் என்னிடம் கூறினர்.
அதனையடுத்து யாழ்.மாவட்டத்தின் முக்கிய இராணுவ முகாம்களான ஆரியகுளம்-, சிங்கள மகாவித்தியாலம் ஆகியவற்றுக்குச் சென்று முறையிட்டிருந்தோம். எனினும் அங்கு எனது மகனைக் கண்டறிவதற்கான வாய்ப்புக்கள் கிட்டியிருக்கவில்லை. இன்றுவரை எனதுமகனைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என்றார்.
இவ்வாறு நேற்றைய தினம் சாட்சியமளித்தவர்களில் பலர் குறிப்பிட்டிருந்தனர். இதன்போது சாட்சியங்களின் பல்வேறு வழிகளில் குறுக்குவிசாணை செய்திருந்த அதிகாரிகள் ஈற்றில் ஜனாதிபதி ஆணைக்குழவின் விசாணைப்பிரிவினர் உங்களது இல்லத்திற்கு வருகை தந்து மேலதிக விசாணைகளை மேற்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM