(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
தோட்டத்தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அவர்களின் அடிப்படைச்சம்பளத்திலேயே இடம்பெறவேண்டும். அத்துடன் அபிவிருத்தி திட்டத்தில் அரசாங்கம் மலையகத்தை ஏமாற்றியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
2021 ஜனவரி மாதம் தொடக்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க வரவு செலவு திட்டத்தில் முன்மொழிவதாக பிரதமர் அறிவித்துள்ளார். இதனை செலுத்த தவறும் கம்பனிகளின் உடன்படிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்படும் என வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் பிரதமர் தனது அறிவிப்பில் 1000 ரூபா அடிப்படை சம்பளம் என்று கூறவில்லை.
உண்மையில் தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய தேவை அடிப்படை சம்பளம் 1000 ரூபாவே தவிர, எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து வரும் 1000 ரூபா சம்பளம் அல்ல. தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று அடிப்படை சம்பளமாக 700 ரூபா வழங்கப்படுகிறது. எனவே 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் பெறுவதற்கு இன்னும் 300 ரூபா மாத்திரமே தேவை. இந்த 300 ரூபாவை வழங்குமாறுதான் நாம் வலியுறுத்தி வருகிறோம்.
குறித்த 300 ரூபாவும் அடிப்படை நாள் சம்பளமாகவே அதிகரிக்கப்பட வேண்டும். மாறாக வரவுக் கொடுப்பனவு, மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு, ஊழியர் சேமலாப நிதி போன்றவற்றை சேர்த்து ஆயிரம் ரூபா வழங்கி மக்களை ஏமாற்றக்கூடாது. காரணம் தொழிலாளர்கள் அனைவருக்கும் 75 சதவீத வேலை நாட்களை பூர்த்தி செய்ய முடியாது. அனைத்து தொழிலாளர்களுக்கும் மேலதிக கொழுந்து பறிக்க முடியாது. இதனை முக்கியமாக கருத்திற் கொள்ள வேண்டும்.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியாக சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இன்னும் ஒரு மாதத்தில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும். எனவே இந்த புதிய ஒப்பந்தத்தின் ஊடாகவே சம்பள உயர்வு பற்றி பேச முடியும் என பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 1000 ரூபா சம்பளம் வழங்குவது எப்படி என அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.
ஏனெனில் கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு சாத்தியமில்லை என்பதை கடந்த கால அனுபவங்களில் நாம் கற்றுக் கொண்டுள்ளோம். எனவே வழமை போன்று இந்த அறிவிப்பும் ஏமாற்று நாடகம் என்றே தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ஆயிரம் ரூபா கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு இறுதியில் பொங்கலும் தீபாவளியும் இல்லாமல் போனது. ஆனாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட இந்த அரசாங்கம் பெருந்தோட்ட கம்பனிகளை கட்டுப்படுத்தி, ஏதேனும் ஒரு வழியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு பூரண ஆதரவு தர நாம் தயாராக உள்ளோம்.
மேலும் பிரதமர் தனது வரவு செலவு திட்டத்தில் கிராமங்கள் அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கிராமப்புற வீதி அபிவிருத்தி குடிநீர் வசதிகள் மின்சாரம் என திட்டங்களை சமர்பித்துள்ளார். ஆனால் மலையக பெருந்தோட்டப் பகுதிகள் தொடர்பில் அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தோட்ட புறங்களில் புதிய கிராமங்கள், தனி வீட்டுத் திட்டம் வீதி அபிவிருத்தி போன்றவை எமது மக்களுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறன.
இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் எதனையும் கூறவில்லை. ஆகவே இந்த வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் அபிவிருத்தி திட்டங்கள் இன்றி புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM