தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்பாதுகாவலராக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் லக் ஷ்மன் ஆகியோரை படுகொலை செய்த விவகாரம் தொடர்பில் மன்றை புறக்கணித்து வரும் மூன்று பிரதிவாதிகள் இல்லாமலேயே, அவர்களுக்கு எதிரான சாட்சி விசாரணைகளை நடாத்த கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணையறையின் நீதிபதி மணிலால் வைத்திய திலக நேற்று அறிவித்தார்.
ரவி ராஜ் படுகொலை விவகாரம் தொடர்பில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் கடந்த வாரம் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்.
பழனிச் சாமி சுரேஷ், ஹெட்டி ஆரச்சிகே பிரசாத் சந்தன குமார, காமினி செனவிரத்ன, பிரதீப் சமிந்த, சரன் எனப்படும் சிவகாந்தன் விவேகானந்தன், பெபியன் வொய்ஸ்டன் டூசைன் ஆகியோருக்கு எதிராகவே சட்ட மா அதிபரால் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் விதிவிதானங்களுக்கு அமைவாக இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய சார்பில் கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையின் நீதிபதி மணி லால் வைத்தியதிலக முன்னிலையில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இந்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார்.
இந் நிலையில் வழக்கின் 2 ஆம், 3 ஆம் மற்றும் நான்காம் பிரதிவாதிகளான ஹெட்டி ஆரச்சிகே பிரசாத் சந்தன குமார, காமினி செனவிரத்ன, பிரதீப் சமிந்த, ஆகியோர் மட்டுமே ஆஜரான நிலையில் அவர்களை வழக்கானது முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி மணிலால் வைத்தியதிலக, தலைமைறைவாகியிருக்கும் முதலாம் 5 ஆம் மற்றும் 6 ஆம் பிரதிவாதிகளான பழனிச் சாமி சுரேஷ், சரன் எனப்படும் சிவகாந்தன் விவேகானந்தன், பெபியன் வொய்ஸ்டன் டூசைன் ஆகியோரை மன்றில் ஆஜராக அறிவித்தல் (நோட்டிஸ்) விடுத்தும் உத்தரவிட்டார். இது குறித்த வழக்கு நேற்று மீளவும் மேல் நீதிமன்றின் நீதிபதி மணிலால் வைத்தியதிலக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ரம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவித்தலுக்கு அமைவாகவேனும் தலை மறைவாகியுள்ள சந்தேக நபர்கள் நேற்றும் மன்றில் ஆஜராகவில்லை. இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய ஆஜராகியிருந்ததுடன், மன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர் செய்யப்பட்ட கடற்படை வீரர்களான மூன்றாம், நான்காம் சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அனோஜ பிரேமரத்னவும் 2 ஆம் பிரதிவாதி தொடர்பில் யுவான் லியனகே உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவும் பிரசன்னமாகியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட தரப்பான நடராஜா ரவிராஜ் குடும்பத்தினர் சார்பில்இ சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் சட்டத்தரணிகளான ஆர்னோல்ட் பிரியந்தன், குகராஜ், துஷ்யந்தன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
மன்றில் ஆஜரான அரசின் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய,
இந்த வழக்கை பொறுத்தவரை குற்றப் பத்திரிகை தாக்கல்ச் எய்யப்ப்ட்டுள்ள அறுவரில் மூவர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக மேல் நீதிமன்றும் அறிவித்தல் விடுத்தும் அவர்கள் ஆஜராகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
இதனால் அவர்கள் இல்லாமலேயே குற்றவியல் சட்டத்தின் 241 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக அவர்களுக்கு எதிரான சாட்சியங்களை மன்ரில் விசாரணை செய்ய நீதிமன்ரம் தீர்மானிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மணி லால் வைத்திய திலக தலைமறைவாகியுள்ள பிரதிவாதிகள் இல்லாமலேயே ரவி ராஜ் படுகொலை வழக்கை விசாரணை செய்வது என தீர்மானித்தார். இந் நிலையில் இது குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக கடந்த வாரம் பிரதிவாதிகள் 6 பேருக்கும் எதிராக 5 குற்றச் சாட்டுக்களை முன்வைத்து குற்றப் பத்திரிகையானது சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது. 2006.11.9 ஆம் திகதிக்கும் 2006.11.10 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் விதி விதானங்களுக்கு அமைவாகவும் தண்டனை சட்டக் கோவையின் உறுப்புரைகளுக்கு அமைவாகவும் படு கொலை, சதித் திட்டம் தீட்டியமை, சட்ட விரோத கூட்டத்தில் அங்கத்தவராக இருந்தல் உள்ளிட்ட 5 குற்றச் சாட்டுக்கள் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளன.
இது தொடர்பில் 19 ஆவணங்களின் பட்டியலையும் 65 சாட்சியாளர்களின் பட்டியலையும் இதன்போது பிரதி சொலிசிற்றர் ஜெனரால் மன்றுக்கு கையளித்துள்ளார்.
மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் உள்ள சம்பரதாயங்களின் படி மன்றில் ஆஜராகாத மூவருக்கும் மீள அறிவித்தல் விடுக்க வேண்டும். இந் நிலையிலேயே கடந்த வாரம் மன்ரில் ஆஜராகாத மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக அறிவித்தலும் விடுக்கப்பட்டது. அதனை அவர்கள் கருத்தில் கொள்ளாத பட்சத்தில் குற்றவியல் நடை முறை சட்டக் கோவையின் 241 ஆம் அத்தியாயத்தின் கீழ் அவர்கள் இல்லாமலேயே அவர்களுக்கு எதிரான சாட்சியங்களை ஆராய நேற்று தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுட்டுக் கொல்லப்ப்ட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய் பாதுகாவலர் லக்ஷ்மன் ஆகியோரது கொலைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தியது. அதன்படி குறித்த இரட்டைக் கொலை தொடர்பில் கடற்படையின் நான்கு அதிகாரிகளையும் கருணா குழுவினரின் இரு அங்கத்தவர்களையும் பொலிஸ் உளவுப் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவரையும் மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரையும் பொலிஸார் சந்தேக நபர்களாக கருதி, நீதிவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற வழக்கு விசாரணைகளை நடத்தினர்.
அதன் முடிவில் 6 சந்தேக நபர்களை பிரதிவாதிகளாக பெயரிடுவது என தீர்மானித்துள்ள சட்ட மா அதிபர் நேற்று அதற்கான குற்றப் பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM