கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகெங்கும் பல இலட்சக்கணக்கான மக்கள் மடிந்து வரும் நிலையில் நாட்டில் அனைவரும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இருந்தும்கூட வடக்கில் ஒரு சில இளைஞர்களின் சட்ட விரோதமான செயல்கள் மிகவும் வெறுக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன.
குழுக்களிடையே மோதல், வாள் வெட்டுக்கள் அச்சுறுத்தல்கள் என அவை தொடர்ந்து கொண்டே செல்கின்றன. அதுவும் அண்மைக்காலமாக அடுத்தடுத்து பல சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மரக்கடத்தல்களை தட்டிக் கேட்க முற்பட்ட கிராம அலுவலகர் ஒருவர் அண்மையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அதேபோல் குடும்ப சண்டை காரணமாக இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு படுகொலைகள் குறைவின்றி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம் பகுதியில் நபர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மாமுனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தனபாலசிங்கம் குலசிங்கம் என்பவரே இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
கிளிநொச்சி, பளை பகுதியிலிருந்து தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டு வீதியினூடாக மாமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோதே குறித்த நபர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசத்தால் தாம் பெரும் துன்பத்திற்குள்ளாகியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வாளுடன் நடமாடிய வாள்வெட்டுக் குழுவினை சேர்ந்த ஒருவரைத் தேராவில் கிராம மக்கள் மடக்கிப் பிடித்து புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
வாள்வெட்டு குழுவின் தொல்லை தாங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் தனித்து வாழும் பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளும் வாள் வெட்டு குழு, தர மற்ற வார்த்தைகளால் பேசுவதாகவும் அத்துடன் பிள்ளைகளைக் கடத்துவதாக மிரட்டுவதாகவும் அப் பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு கதைப்பவர்களின் ஒலி வடிவங்கள் பதிவு செய்யப்பட்டு பொலிஸாருக்கு கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வாளுடன் வெட்ட வந்தவர்களில் ஒருவரை பிடித்த கிராம இளைஞர்கள் அவரை கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
தேராவில் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக வாள்களுடன் நடமாடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இத்தகைய சம்பவங்களை முழுமையாக ஒழித்துக் கட்ட பாதுகாப்பு முறைமைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM