வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் இணைந்து உடனடியாக முடிவெடுக்கு மாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தொடரில் நீண்டநேரம் ஆராயப்பட்டிருந்தது.
இச்சமயத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு பணித்துள்ளார். குறித்த கூட்டத்தின்போது வடக்கு மாகாணத்திற்கான பொருளதார மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதில் எவ்வாறான பிரச்சனைகள் உள்ளன என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பில் காணப்படும் நிலைமைகள் அமைச்சர்கள் சிலரால் சுட்டிக்காட்டப்பட்டன. அவற்றை அவதானித்த பின்னர் கருத்து வௌியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ வவுனியா மாட்டத்தின் நகர்ப்பகுதியிலோ அல்லது ஓமந்தையிலோ அல்லது மாங்குளத்திலோ இந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கவேண்டியுள்ளது.
ஒருவேளை இது தொடர்பாக பிரச்சினைகள் காணப்படுமாயின் வவுனியா மாவட்டத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் வெவ்வேறாக இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயாலாம்.
எவ்வாறாயினும் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் இணைந்து இறுதி முடிவொன்றை உடனடியாக எடுக்கவேண்டும். வடமாகாணத்திற்கான பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த விடயத்தினை தாமதமின்றி முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசன் மேற்கொள்ளவேண்டும் எனப் பணிப்புரை விடுத்துள்ளார். இதனையடுத்து அமைச்சர் ஹரிசன் குறித்த விடயம் சம்பந்தமாக தான் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாகவும் ஓரிரு நாட்களுக்குள் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
அதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் காணப்படும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ஹரிசன் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனிடம் பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அமைச்சர் மனோகணேசன் கூறுகையில், வடக்கு மாகாண பொருளாதார மத்திய நிலைய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியை வைப்பதற்காக தன்னிடத்தில் அமைச்சர் ஹரின் ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியதற்கு இணங்க தான் வடமாகாண முதலமைச்சரை தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லையென்றும் அதனையடுத்து கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஸாட் பதியூர்தீனுடன் இவ்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சர் ரிஸாட் பதியூர்தீன் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை கூறுபோட்டு மன்னாரிலும் வவுனியாவிலும் அமைத்து அதனை இனரீதியாக வேறாக்குவதற்கு தான் விரும்பவில்லையென்றும் இவ்விடயத்திற்கு உரிய தரப்புக்களுடன் ஆராய்ந்து முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டுமென்பதில் தானும் ஏககருத்தையே கொண்டிருப்பதாக தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டார்.
முன்னதாக வடமாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் உள்ள அரச வீட்டுத்திட்டம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் அமைப்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனநாயக ரீதியில் முடிவொன்றை எட்டுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண பாராளுமன்ற, மாகாண பிரநிதிகளிடையே கருத்தக்கணிப்பை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்திருந்தாலும் குறித்த தீர்மானத்திற்கு அமைவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஓமந்தை பகுதியிலேயே வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்டும் என பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM