(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் இரண்டாம் அலையாக பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த செய்வதற்கு பாரிய முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், தொற்று நோயாளிகளை அடையாளம் காணல், தனிமைப்படுத்தல், பரிசோதனைகள் மற்றும் இவை சார்ந்த சேம நலன் நடவடிக்கைகளுக்காக இதுவரை அரசாங்கம் 70,000 மில்லியன் ரூபா அளவில் செலவிட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சமர்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறியதானது.
நிதி அமைச்சர் என்ற வகையில் நான் இந்த ஒதுக்கீட்டுச் சட்டத்தை சமர்ப்பிப்பது இது 11 ஆவது தடவையாக இருக்கின்ற போதிலும், இதுவரை இப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீடுச் சட்டங்களிலும் பார்க்க இது வேறுபட்டுக் காணப்படுகின்றது.
ஏனெனில், இது நான்கு இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்குகளை உள்ளடக்கிய ஒதுக்கீட்டுச் சட்டமாகவும், இதனுடன் தொடர்புபட்டதாக எமது அரசாங்கத்தின் அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான கணக்கு அறிக்கையொன்றாகவும் இவ்வொதுக்கீட்டுச் சட்டம் இருக்கின்றது.
ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவான போது, அப்போதிருந்த அரசாங்கம் 2020 ஆம் வருடத்திற்காக ஒதுக்கீட்டுச் சட்டமொன்றை சமர்ப்பித்திருக்கவில்லை.
தேர்தலின் பின்னர் அதனை சமர்ப்பிக்கும் எதிர்பார்ப்புடன் இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து அப்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்ததைத் அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினைக் கொண்டிராத நாம் பாராளுமன்ற தேர்தலொன்றை எதிர்பார்த்த வண்ணம் அரசாங்கமொன்றை அமைத்து, இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கிற்கு ஏற்ப வரவு செலவுகளை முகாமை செய்தோம்.
2020 மார்ச் மாதம் 02 ஆந் திகதி பாராளுமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியலமைப்பின் 150 உறுப்புரையின் பிரகாரம் ஜூன் – ஒகஸ்ட் காலப்பகுதிக்காக இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கொன்றை நிறைவேற்ற ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கினார்.
எனினும் நாட்டில் நிலவிய கொரோனா தொற்றுநோய் பரவலைக் கவனத்திற் கொண்டு தேர்தல் ஒகஸ்ட் மாதம் வரை பிற்போடப்பட்டது. இதனால் ஜனாதிபதியினால் ஜூலை –செப்டெம்பர் காலப்பகுதிக்காக மீண்டுமொரு தடவை இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கொன்று அங்கீகரிக்கப்பட்டது.
இடைக்கால வாக்குப்பதிவுக் கணக்குகளுக்குரிய காலப்பகுதியில் 2020 வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமொன்றை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு போதிய காலம் இல்லாதிருந்ததால், 2020 ஒகஸ்ட் மாதம் நிதி அமைச்சர் என்ற வகையில் செப்டம்பர் மாதம் தொடக்கம் நான்குமாத காலப்பகுதிக்காக என்னால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கிற்கு சபை அங்கீகாரம் வழங்கியது. அதற்கமைய, 2020 வருடத்தில் 04 இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்குகளின் மூலம் அரசாங்க நிதி முகாமை செய்யப்பட்டுள்ளது.
எமது நாட்டினதும் எமது அரசாங்கத்தினதும் விசேட அம்சம் யாதெனில், இலவச சுகாதார மற்றும் சமூக சேமநலனை அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ளமையாகும். அதேபோல் கடந்த ஆட்சியைபோல் அல்லாது நாட்டைக் கட்டியெழுப்பும் ”சுபீட்சத்தின் நோக்கு” என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தினுள் எமது அரசாங்கம் சந்தை வரையறைகளை இனங்கண்டு அரச துறையில் பரந்த அளவில் பணிகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணித்துள்ள அரசாங்கமொன்றாக செயற்பட்டு வருகின்றது.
எதிர்பாரா இரண்டாவது அலையின் பாதிப்புகளையும் தாங்கிய வண்ணம், உயிர் இழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும் எம்மைக் காட்டிலும் முன்னணியிலுள்ள பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடும் போது இறப்பு வீதம் 0.3% சதவீதம் என்ற ஆகக் குறைந்த மட்டத்தில் பேணி, நோய் ஒழிப்பிலும் தனிமைப்படுத்தல் தொழிற்பாட்டிலும் எமக்கு முன்னணியில் திகழ்வதற்கு முடிந்திருப்பது இதன் காரணமாகவே. இதற்குப் பிரதான காரணம், எமது நாட்டில் சகல பிரதேசங்களிலும் அமுல் செய்யப்படுகின்ற இலவச சுகாதார முறைமையும், சுகாதார சேவையும் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
மேலும் நோயாளிகளை அடையாளம் காணல், தனிமைப்படுத்தல், பரிசோதனைகள் மற்றும் இவை சார்ந்த சேம நலன் நடவடிக்கைகளுக்காக இதுவரை அரசாங்கம் செலவிட்டுள்ள தொகை சுமார் 70,000 மில்லியன் ரூபாவாகும். நோய் நிவாரண பணிகளுக்காக கொழும்பிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த வைத்தியசாலை கொள்ளளவை ஒரு வருடத்திற்கும் குறைந்த காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களும் உட்படுமாறு 17 வைத்தியசாலைகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய் பீடித்தவர்களுக்கு விசேட சிகிச்சைகளை அளிப்பதற்கான கட்டில்களின் எண்ணிக்கை சுமார் 600 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய் பரிசோதனைக்கான பி.சி.ஆர் கொள்ளளவை நாளொன்றுக்கு 7,500 – 10,000 வரை அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதுடன், இங்கு ஒரு பி.சி.ஆர் பரிசோதனைக்கான செலவு ரூபா 6,000 என்ற வகையில் ஒரு நாளுக்கான செலவு 50 மில்லியன் ரூபாவை தாண்டுகின்றது. 14 நாள் நோய் நிவாரணத்திற்கு உட்படுத்தப்படுகின்றவர்களின் உணவு மற்றும் சேமநலன் நடவடிக்கைகளுக்காகவும் அரசு பெருந் தொகைப் பணத்தை செலவு செய்கின்றது. இதனிடையே கொரோனா தொற்று நோய் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 5,000 கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. இச் செலவுகளுக்கு மேலதிகமாக, இச் சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளுக்காகவும், பிற செலவினங்களுக்காகவும் செலவு செய்வதற்கும் அரசுக்கு நேர்ந்துள்ளது. அதே போன்று, எமது நாட்டின் ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற துறைகளிலும் இந் நிலைமை மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, வெளிநாட்டு வருமானம், தொழில் வாய்ப்பு, வாழ்வாதாரங்கள், தனியார் தொழில் முயற்சிகள் மற்றும் அரசாங்க வருமானம் போன்றவற்றில் மட்டுமல்லாது மக்களின் சமய, சமூக வாழ்விலும் பாரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
எமது பொருளாதாரமும் நிதி நிலைமையும் மிக மோசமானதாகவே உள்ளது. 2014 இல் இருந்த எனது அரசாங்கம் தேசிய வருமானத்தில் 5.7சதவீதத்திற்கு குறைக்கப்பட்டிருந்த வரவு செலவு திட்டப் பற்றாக்குறைக்குப் பதிலாக, எமக்கு 2019 இல் 9.6 சதவீத வரவு செலவு திட்டப் பற்றாக்குறையுடனேயே எம்மீது சுமத்தப்பட்டது. இது 2005 ஆம் வருடத்தில் நான் அரசைப் பொறுப்பேற்கும் போது காணப்பட்ட 7 சதவீத பற்றாக்குறையினைக் காட்டிலும் அதிகமாகும். 2015 ஆம் வருடத்திற்காக நான் 2014 இல் முன்வைத்த வரவு செலவுத்திட்டத்தில் பிரதான நோக்கமாக இருந்தது யாதெனில், 2020 ஆம் வருடமாகும் போது வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை 4 சதவீதத்திற்கு குறைக்கும் அதேவேளை, எமது நாட்டை வறுமையற்ற உயர் வருமானம் பெறும் நாடாக மாற்றுவதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM