தேசிய அரசாங்கம் அடுத்த வரவு – செலவுத் திட்டத்துடன் கவிழ்ந்துவிடும் என சிலர் கனவு காண்கின்றனர். இக் கனவு ஒரு போதும் பலிக்காது. இந்த அரசாங்கத்தின் ஆட்சி ஐந்து வருடங்கள் தொடரும் என நேற்று சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தியா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஆகிய நாடுகளு டனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் எதிர்காலத்தில் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.
சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தி விசேட உரை நிகழ்த்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 17, 18 ஆம் திகதிகளில் சிங்கப்பூர் பிரதமரின் உத்தியோ
கபூர்வ அழைப்பிற்கேற்ப அங்கு விஜயத்தை மேற்கொண் டேன். எனது விஜயத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர,
மலிக்சமரவிக்ரம,பிரதியமைச்சர் மித்ரபால ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது தெற்காசிய புலம்பெயர் நாட்டின் ஆரம்ப கூட்டத்தில் பிரதான சொற்பொழிவை நான் நிகழ்த்தினார்.
இலங்கையில் பொருளாதார அபிவிருத்திக்காக புதிய அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினேன்.
அத்தோடு இலங்கையை பண்டமாற்று, வர்த்தக மற்றும் நிதி மத்திய நிலையமாக மாற்றுவதற்காக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்தும் கடல், வான், நெடுஞ்சாலைகள், எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு தேவையான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான எமது பெளதீக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டன.
அத்தோடு எம்மால் ஆரம்பிக்கப்பட்ட புதிய அபிவிருத்தி வேலைத்திட்டம் போன்று பத்து இலட்சம் தொழில் வாய்ப்புத் திட்டம் மற்றும் பலமுள்ள மத்திய தர வர்க்கத்தினரை உருவாக்கும் திட்டங்கள் தொடர்பிலும் சிங்கப்பூரில் தெளிவு படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அது மட்டுமல்லாது கண்டி–கொழும்பு – அம்பாந்தோட்டை பொருளாதார வலயங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், கண்டி நகர அபிவிருத்தி திட்டம், வடமேல் வலய கைத்தொழில் மற்றும் உல்லாசப் பிரயாணத்துறை வேலைத்திட்ட பொலிஸ் மேல்மாகாண அபிவிருத்தித் திட்டம், காலியை மையப்படுத்திய தென் பகுதி உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்தி வேலைத்திட்டம் அம்பாந்தோட்டை புதிய பொருளாதார வலய வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேல்மாகாண அபிவிருத்தித்திட்டத்திற்கு மட்டும் 40 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது.
அம்பாந்தோட்டை பொருளாதார வலய அபிவிருத்திக்கு 10 பில்லியன் அமெரிக்கன் டொலர் தேவைப்படுகிறது.
இவை தொடர்பிலான முதலீடுகள் தொடர்பாக தெளிவுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வேலைத்திட்டம் எமது வலயத்தில் பாரிய பொருளாதார அபிவிருத்தித் திட்டமாகும். இது மும்பை டெல்லி பொருளாதார வலயத்திற்கு இணையானதாகும்.
இதன் மூலம் இந்து சமுத்திரத்தில் பாரிய பொருளாதார மத்திய நிலையமாக நாம் உயர்வதோடு தென் இந்திய பொருளாதாரத்திற்கும் எம்மால் அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலைய ஏற்படும்.
சிங்கப்பூர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் சந்தித்தேன்்.
சிங்கப்பூர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி தொடர்பாகவும் தேசிய அரசு அமைக்கப்பட்டது தொடர்பிலும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். இதன்போது சிங்கப்பூருடன் கையெழுத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் இந்தியா சீனாவுடன் கையெழுத்திடப்படவுள்ள இருதரப்பு உடன்படிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
13 ஆவது வயதில் கட்டிடக் கல்வியுடனான தொழிற் பயிற்சிக்கு சந்தர்ப்பம் வழங்கி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்தும் திட்டம் தொடர்பாகவும் என்னால் தெளிவுபடுத்தப்பட்டது.
இலங்கையின் அரச சேவையின் செயற்றிறனை உயர்த்துவதற்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பை இதன்போது கோரினேன். அதற்கு சிங்கப்பூர் பிரதமர் தனது ஆதரவை வழங்க உறுதியளித்தார்.
இவ் வருடம் நவம்பர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பலவித சமூகங்களின் மதம் சார்ந்த பொறுப்புக்கள் தொடர்பான சர்வதேச மாநாடு தொடர்பாகவும் நான் அறிவித்ததோடு அதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன். இதனை சிங்கப்பூர் பிரதமர் ஏற்றுக் கொண்டார். அத்தோடு சிங்கப்பூர் பிரதமருக்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தோம்.
அதனையும் அவர் ஏற்றுக் கொண்டார். இவ் விஜயத்தின் போது இலங்கை சிங்கப்பூருக்கு இடையேயான கலாசார பரிமாற்ற வேலைத் திட்டங்கள், மெகா பொலிஸ் திட்டம், சிங்கப்பூர் சிவில் சேவை, தொழிற் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட்டன.
சிங்கப்பூர் சிவில் சேவைகள் கல்லூரியை பார்வையிட்டோம். அத்தோடு சிங்கப்பூர் வர்த்தக சமூகத்தை சந்தித்து கலந்துரையாடினோம்.
சிங்கப்பூர் அமைச்சர் உயரதிகாரிகள் முதலீட்டாளர்கள் வர்த்தகர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியதோடு பல சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை ஆரம்பித்துள்ளனர்.
சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தும் விதத்தில் விசேட பிரிவையும் ஏற்படுத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சிங்கப்பூர் துறைமுகத்திற்கு விஜயம் செய்து அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன அபிவிருத்திகளையும் பார்வையிட்டோம்.
இலங்கையிலும் துறைமுக அபிவிருத்திக்கு உதவி வழங்க இதன் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக சீனாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளேன்.
அதேபோன்று ஜப்பானுடன் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக ஜப்பானுக்கும் விஜயம் செய்யவுள்ளேன்.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்து வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.
அக்டோபர் மாத ஆரம்பத்தில் புது டில்லியில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநட்டின் போது இந்தியப் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளித்துள்ளோம்.
எமது நாட்டின் எதிர்கால சந்ததியினர் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே நாம் அனைத்தையும் முன்னெடுக்கின்றோம். இதன் மூலம் மகிழ்ச்சியுடன் வாழும் சமூகத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்.
பத்து இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக நாம் உறுதி மொழி வழங்கினோம். அதனை நிறைவேற்றுவதற்காகவே அனைத்தையும் முன்னெடுக்கின்றோம்.
சீனா, சிங்கபூர் , ஜப்பான் , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.
எமது நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஆற்றுப்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே இவற்றை முன்னெடுக்கிறோம்.
அதைவிடுத்து வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் வேலைவாய்ப்புக்களை வழங்குதற்காக அல்ல அரசியல், வர்த்தக இரண்டு பிரிவுகளையும் இணைத்து தொழிற் சமிக்ஞையை ஏற்படுத்தி முதலீடுகளை அதிகரிக்கவே நாம் முயற்சிக்கின்றோம்.
தற்போது அம்பாந்தோட்டையில் சீன முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கையின் தேசிய அரசாங்கத்திற்கு உலகத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் கிடைத்துள்ளன. தேசிய அரசு சித்தாந்தத்தின் ஊடாக எதிர்வரும் 5 வருடத்திற்குள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் இந்தத் திட்ட முறைமையை மேலும் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வோம்.
இக்காலம் முழுவதும் எமது தேசிய அரசாங்கமே ஆட்சியிலிருக்கும்.
இது தொடர்பில் எந்தச் சந்தேகமும் கிடையாது. எந்த விதமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டாலும் ஜனாதிபதியினதும் எனதும் எதிர்பார்ப்பு நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும்.
2015 ஜனவரி 08 ஆம் திகதி நாட்டு மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை அதே போன்று எந்த விதமான மாற்றமும் இன்றி பாதுகாப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM