பலவந்தமாக காணாமல்போவதை தடுக் கும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. அடுத்த ஆண்டுமுதல் இந்த சாசனத்தின் பிரகாரம் இலங்கை செயற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறு ஏதேனும் சம்பவங்கள் நடக்கும் பட்சத்தில் இந்த சாசனத்தின் சட்டதிட்டத்துக்கு அமைய அரசாங்கத்திற்கே முழுமையான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதேபோல் சர்வதேச மட்டத்திலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இந்த தினத்தில் சர்வதேச நாடுகளுடன் நாமும் கைகோர்த்து அனுஷ்டிக்கின்றோம். அதேபோல் இம்முறை எப்போதும் இல்லாத வகையில் வழமைக்கு மாறாக நிரந்தரமாக மனித உரிமைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றை செய்துள்ளோம். அதாவது நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகத்தில் செயற்படும் எமது நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இன்று(நேற்று) பலவந்தமாக காணாமல்போவதை தடுக்கும் அனைத்து நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளார். இந்த அரசாங்கத்தை மக்கள் பலப்படுத்திய வேலைத்திட்டத்தில் முக்கியமான விடயமாக அமைந்தது நாட்டில் சகல மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாத்து அவர்களின் செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்பதேயாகும்.
அமைச்சரவை கூட்டத்தின் போதும் இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆகவே மனித உரிமைகள் தொடர்பில் எமது அரசாங்கம் காட்டும் அக்கறை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று ஐக்கிய நாடுகளின் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இலங்கையில் மனித உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். ஆகவே இந்த சாசனம் தொடர்பில் விரைவில் நீதிபதிகள் சபையில் சமர்ப்பித்து அவர்களின் அனுமதியின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அடுத்த ஆண்டு முதல் இந்த சட்டத்தின் கீழ் அரசாங்கம் செயற்படும் வகையில் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
கடந்த காலத்தில் இலங்கையில் இன,மத அடிப்படையில் மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை எம் அனைவருக்கும் நினைவில் உள்ளது. முக்கியமாக கடந்த 10 ஆண்டுகளில் நாட்டினுள் நடந்த மோசமான நிலைமைகள், பிரச்சினைகள் இல்லாத சூழ்நிலையிலும் காணாமல் போவதை தடுக்கமுடியாத ஒரு சூழ்நிலை இருந்தமை அனைவரும் அறிந்ததேயாகும். ஆகவே இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் தமது பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும், கடத்தல் கலாசாரத்தை முழுமையாக இந்த நாட்டில் இருந்து ஒழிக்கும் வகையில் இந்த சாசனத்தில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம்.
கேள்வி :- கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் தொடர்பில் இந்த சாசனத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்?
உண்மையில் இந்த சாசனத்தில் நாம் கைச்சாத்திட்டுள்ளமையானது எதிர்காலத்தை கருத்தில் கொண்டேயாகும். எதிர்காலத்தில் யாரும் கடத்தப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே மேற்கொண்டுள்ளோம். ஆனாலும் கடந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பிலும், உண்மைகளை கண்டறிவது தொடர்பிலும், மக்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் தேவையான பொறிமுறையை உருவாக்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேபோல் ஜெனிவாவில் கூட இந்த விவகாரங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையில் தீர்வை பெற்றுத் தருவதாக நாம் வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். ஆகவே உள்ளக பொறிமுறைகளை பலப்படுத்தி எமது நடவடிக்கைகளை துரிதப்படுத்துவோம்.
கேள்வி:-எதிர்காலத்தில் மீண்டும் கடத்தல்கள் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றால் இந்த சாசனம் எவ்வாறு உதவப்போகின்றது?
இலங்கையில் எதிர்காலத்தில் இவ்வாறு காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெறும் என்று நான் நம்பவில்லை. எனினும் அவ்வாறு ஏதேனும் நடக்கும் பட்சத்தில் இந்த சாசனத்தின் சட்டதிட்டத்துக்கு அமைய அப்போதிருக்கும் அரசாங்கத்திற்கே சம்பவங்கள் தொடர்பில் முழுமையான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தட்டிக்கழிக்க எந்த வகையிலும் வாய்ப்புகள் இல்லை. அதேபோல் தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM