-சத்ரியன்
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான, உயர்நீதிமன்றத்தின் கருத்து, ஊடகங்களில் கசிந்ததை அடுத்து, அமரபுர மற்றும் ராமன்ன மகாகிரி மகா சங்க சபாவினால், ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை கடுமையாக விமர்ச்சிக்கிறது.
இலங்கையில் மூன்று பிரதான பௌத்த பீடங்கள் (நிக்காய) உள்ளன. முதலாவது சியாம், இரண்டாவது, அமரபுர, மூன்றாவது ராமன்ன.
இதில் சியாம் நிக்காயவே மிகவும் வலுவானது. அஸ்கிரி, மல்வத்த, பீடங்கள் இதனைச் சேர்ந்தது தான்.
இந்த இரண்டு பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் தான், அரசியலிலும் சரி, பௌத்தர்கள் மத்தியிலும் சரி, கூடுதல் செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்கள்.
அதற்கடுத்த நிலையிலேயே அமரபுர, ராமன்ன நிக்காயாக்களுக்கு செல்வாக்கு உள்ளது.
இந்த இரண்டு நிக்காயாக்களும் இணைந்து உருவாக்கப்பட்டிருப்பதே, அமரபுர மற்றும் ராமன்ன மகாகிரி மகா சங்க சபா. அண்மையில் தான் இந்த இரண்டு நிக்காயாக்களும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்து உடன்பாட்டிலும் கையெழுத்திட்டன.
இந்த இரண்டு பீடங்களும் இணைந்து தான், 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற அறிக்கையை முன்வைத்திருக்கின்றன.
இந்த விடயத்தில் அமரபுர பீடத்துக்குள் சில குழப்பங்கள் இருக்கின்ற போதும், அது தம்முடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பது பற்றியதாக உள்ளதே தவிர, 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு சாதகமானது அல்ல என்பது கவனிக்கத்தக்கது.
இரண்டு பீடங்களினதும் கூட்டு அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்பதங்கள் முக்கியமானவை.
ஜனநாயகம், அதிகாரத்துவம், சர்வாதிகாரம் போன்ற சொற்பதங்கள் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
“இந்த செயல்முறையின் முடிவு சர்வாதிகாரத்தின் பிறப்பைக் குறிக்கும்” என்றொரு வசனமும் அதில் இருக்கிறது.
20 ஆவது திருத்தம், நாட்டில் உள்ள ஜனநாயகத்தை அழித்து, சர்வாதிகாரத்தை ஊக்குவிக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
ஜனநாயகம் ஒரு சர்வாதிகாரமாக மாறுவதைத் தடுப்பது மதகுருமார்களாகிய தங்களின் பொறுப்பு என்றும், இதனால் இந்த பௌத்த பீடத்தின் மூன்று பிரிவுகளும் 20 வது திருத்தத்தை எதிர்க்கும் முடிவை எட்டியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
20 ஆவது திருத்த வரைவு முன்வைக்கப்பட்ட போது, பிரதான பௌத்த பீடங்கள் எதுவும் அதற்கு எதிர்ப்பு வெளியிடவில்லை.
கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 20 ஆவது திருத்தச் சட்டத்தினால், பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூட கூறிப் பார்த்தார்.
அப்போதும் கூட பிரதான பௌத்த பீடங்கள் அசையவில்லை. எனினும், கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய, கடும்போக்குவாத பௌத்த பிக்குகள் பலரும், அரசாங்கத்தின் போக்கை, 20 ஆவது திருத்தச் சட்டத்தை குறை கூறத் தொடங்கிய போதும் அவர்கள் அமைதியாகத் தான் இருந்தனர்.
உயர்நீதிமன்றத்தின் கருத்து அதிகாரபூர்வமற்ற வகையில், கசிந்த பின்னர் தான், அமரபுர- ராமன்ன நிக்காயாக்களிடம் இருந்து பகிரங்க எதிர்ப்பாக வெளியாகியிருக்கிறது.
ஒன்றிணைந்த இந்த இரண்டு பீடங்களும், 20 ஆவது திருத்தத்தை மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதற்கு, முக்கியமான காரணம் ஜனநாயகத்தை சாகடித்து விடும் என்பது தான்.
பேச்சு சுதந்திரத்தை அழித்து விடும், நீதித்துறை சுதந்திரம், மக்களின் இறையாண்மை போன்றவற்றை இல்லாமல் செய்து விடும், என்பதையே அமரபுர- ராமன்ன மகாநாயக்கர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இந்த இரண்டு பௌத்த பீடங்களும் அஸ்கிரி, மல்வத்த பீடங்களைப் போன்ற செல்வாக்குப்பெற்றயல்ல என்றாலும், இந்த எதிர்ப்பு, தீயாகப் பரவக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
ஜனநாயகம் அழிக்கப்பட்டு சர்வாதிகாரம் தலைதூக்குவதை பௌத்த மதகுருமார் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்க வேண்டிய விடயம்.
சிங்கள, பௌத்த அரசுகளை பௌத்த பிக்குகள் வழிநடத்தும் மரபு உள்ளது. சிங்கள மன்னர்கள் வழிதவறிய சந்தர்ப்பங்களில், பௌத்த பீடங்களே அவர்களை, வழிநடத்தியிருக்கின்றன.
அதிகபட்ச வரலாற்றுக்கு ஏன் செல்ல வேண்டும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைக் கூட, அவர்கள் தான் தீர்மானித்தார்கள்.
மாவிலாறில் தாங்களே முன்னின்று போரை ஆரம்பித்து வைத்தோம், என்று அத்துரலியே ரத்தன தேரர் அண்மையில் கூட கூறியிருந்தார்.
அப்போது ஹெல உறுமயவில் இருந்து பௌத்த பிக்குகள், அமைதியை குழப்பி, போரைத் தூண்டுவதில் கணிசமான பங்கை வகித்திருந்தார்கள்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்துவதற்கு தயங்கிக் கொண்டிருந்த போது, போரின் விளிம்புக்குள் அதனைத் தள்ளி விட்டது அப்போதைய பௌத்த பிக்குகள் தான்.
அதே பௌத்த பிக்குகள், கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்குத் துணையாக இருக்கவும் தவறவில்லை.
இப்போது, அவர்களில் பலர், 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக திரும்புகின்ற நிலையை பார்க்க முடிகிறது.
அமரபுர- ராமன்ன பீடங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை நிராகரிக்கப்படவில்லை.
நாட்டுக்குப் பொருத்தமான, ஜனநாயகத்தை மேலும் உறுதிப்படுத்தக் கூடிய அரசியலமைப்பு ஒன்றை அரசாங்கம் விரைவாக உருவாக்க வேண்டும் என்றே வலியுறுத்தியிருக்கிறார்கள்.
புதிய அரசியலமைப்பு வரும் வரை, ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்ற பெயரில் கொண்டு வர முனையும் 20 ஆவது திருத்தத்தை அவர்கள் ஏற்பத் தயாராக இல்லை.
ஏனென்றால், புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரும் முயற்சிகள் தடைப்பட்டாலோ, அது முடியாமல் போனாலோ, 20 ஆவது திருத்தம் நிரந்தரமானதாகி விடும்.
அவ்வாறு அது நிரந்தரமானதாகிப் போனால், ஜனாதிபதியிடம் இருக்கும் அதிகாரங்கள் நாட்டின் ஜனநாயகத்தை அழித்து விடும் என்று எல்லோரும் உணருகிறார்கள்.
இது அரசாங்கத்தைப் பொறுத்தவரை பாதகமானது. பௌத்த பிக்குகள், குறிப்பாக மகாசங்கங்களும், மகாநாயக்கர்களும், 20 ஐ எதிர்க்க தொடங்கியிருப்பது புதியதொரு திரும்பம் தான். அதேவேளை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முன்கொண்டு செல்ல வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இவ்வாறான நிலையில், பௌத்த பீடங்கள், கத்தோலிக்கத் திருச்சபை போன்றவற்றின் ஆலோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளப் போகிறதா அல்லது அதனை தூக்கியெறிந்து விட்டு அதிகாரப் பலப்படுத்தலில் இறங்கப் போகிறதா என்பதே இப்போதுள்ள வினா.
இந்த சூழலில், இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, மாகாண சபைகள் தேவையில்லை என்பதை வலியுறுத்துவதற்காக கூறிவரும் நியாயம், இதற்கும் கூடப் பொருந்தமானது தான்.
“இரண்டு ஆண்டுகளாக மாகாண சபைகள் இல்லாமல் தான், நிர்வாகம் நடந்திருக்கிறது. பிறகு எதற்கு மாகாண சபைகளை வைத்து செலவு செய்ய வேண்டும்?” என்று சரத் வீரகேசர கேள்வி எழுப்பியிருந்தார்.
அது சரியான வாதமாக இருந்தால், 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் தானே நாடு கடந்த 5 ஆண்டுகளாக ஆளப்படுகிறது, அதிலும், கோட்டாபய ராஜபக்ச முழு அதிகாரம் படைத்தவராகத் தானே இருக்கிறார். பிறகேன், 20 ஆவது திருத்தம்? என்பது கூட நியாயமான கேள்வியாகத் தான் இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM