(எம்.மனோசித்ரா)
நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலாங்கொடை அனர்த்தம்
அதற்கமைய பலாங்கொடை - பின்னவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளவ தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த 3 பெண் தொழிலாளர்கள் மீது மரமொன்று முறிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து விழுந்தமையால் படுகாயமடைந்த குறித்த 3 பெண் தொழிலாளர்களும் பலங்கொடை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர்களில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதன் போது உயிரிழந்த பெண்கள் 42 மற்றும் 43 வயதுடைய வளவ தோட்டம் , பின்னவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏனைய பாதிப்புக்கள்
இதே வேளை இன்று புதன்கிழமை ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததால் வீடொன்று சேதமடைந்துள்ளதோடு இரு விற்பனை நிலையங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
கடந்த 8 ஆம் திகதி முதல் பெய்யும் கடும் மழை மற்றும் பலத்த காற்று என்பவற்றினால் பதுளை, கண்டி, நுவரெலியா, அம்பாந்தோட்டை, காலி, மட்டக்களப்பு, திருகோணமலை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் புத்தளம் ஆகிய 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இம்மாவட்டங்களில் கடந்த ஒருவாரத்திற்குள் 102 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளை ஒரு வீடு முழுமையாகவும் 70 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பலத்த காற்று குறித்த எச்சரிக்கை
நிலப்பரப்புக்களில் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும் , திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு 16 மாவட்டங்களுக்கு இது குறித்து நாளை வியாழக்கிழமை பகல் 1.30 மணி வரை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, புத்தளம், குருணாகல், மாத்தளை, பொலன்னறுவை, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 50 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மிகக் குழைந்தளவான மழை வீழ்ச்சியே காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM