-ஆர்.ராம்-
இந்திய, இலங்கை ஒப்பந்தம், அதன் வழியில் அரசியல் சாசனத்தில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தம், அதன் பால் ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபை முறைமை தொடர்பாக கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போதுமான அளவில் ஆராயப்பட்டுவிட்டதாயிற்று. அப்படியிருக்க சமகாலத்தில் தென்னிலங்கையில் 13 ஆவது திருத்த எதிர்ப்பு வாதம் மேலெழுந்திருக்கின்றது. அதனை முழுமையாக அகற்ற வேண்டும் என்ற கோசம் வலுப்பெற்றிருக்கின்றது.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் எதிர்பார்ப்பான சமத்துவம் நீதி,சமாதானம், கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான நல்லிணக்கச் செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும். பாரதப்பிரதமர் நரேந்திர மோடி (மெய்நிகர் மாநாடு 26-09-2020)
இந்நிலையில் தமிழின விடுதலை வேண்டி ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்த திலீபன் உயிர்தியாகம் செய்த தினமான கடந்த 26ஆம் திகதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவை பரிவாரங்களுக்கும் இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டாலும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்ற வழமையான சம்பிரதாய பூர்வமான கருத்துப்பகிர்வுக்;கும் அப்பால், சென்று ‘13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்’ என்று பிரதமர் மோடி நேரடியாகவே பிரதமர் மஹிந்தவிடத்தில் வலியுறுத்தியிருந்தார்.
13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. அதில் காணப்படுகின்ற சில அதிகாரங்களை பகிர முடியாது. குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு மாற்றீடு தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே 13ஆவது திருத்தம் தொடர்பில் மீளாய்வு அவசியமாகின்றது - ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ (விசேட நேர்காணல் த இந்து 30-11-2019)
வெறுமனே வாய்வார்த்தையுடன் பிரதமர் மோடியின் வலியுறுத்தல் நிற்காது இம்முறை, சந்திப்பின் முடிவில் இந்திய, இலங்கை கூட்டு அறிக்கையிலும் அவ்விடயம் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை கோடிட்டு காட்டப்பட வேண்டிய விடயமாகின்றது. ஏனென்றால் கூட்டு அறிக்கையில் 13ஆவது திருத்தம் பற்றி கருத்து உள்வாங்கப்பட்டிருப்பது, பிரதமர் மஹிந்தவும், பிரதமர் மோடியின் கருத்துக்களுக்கு ‘ஏகோபித்துள்ளார்’ என்பதே இராஜதந்திர பொருள் கோடலாகும்.
முழுப்பூசனியை சோற்றில் மறைப்பது போன்றே கூட்டு அறிக்கை விடயத்தினை கையாண்ட பிரதமர் மஹிந்த, சிங்கள மொழியில் ‘சுயதணிக்கை’ ஊடக வெளியீட்டினை பகிரங்கப்படுத்தி ‘சிங்கள,பௌத்த’ ஆதரவுத்தளத்தில் சலசலப்பு ஏற்படாது பாத்திரமாக பார்த்திருந்தார்.
13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதோடு அதற்கும் அப்பால் சென்று 13பிளஸ் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு அரசியல் தீர்வு வழங்குவதற்கு தயாராகவே உள்ளேன் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ (2006-2015) 13ஆவது திருத்தம் சம்பந்தமாக இந்தியப் பிரதமர் தன்னுடய நிலைப்பாட்டினை தெரிவித்திருக்கின்றார். தற்போதைய அரசியலமைப்பிற்கு அமைவாக எமது செயற்பாடுகள் இடம்பெறும். மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைத்ததன் மூலம் மாகாண சபை முறைமையை கடந்த அரசாங்கமே இல்லாது செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்~ (ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பு 29-11-2020)
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன கொழுப்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் உடனான சந்திப்பின் ‘விளைபொருளாகவே’ பிரதமர் மோடியின் ‘13’ பற்றிய கருத்தினை வரவேற்று சந்தைப்படுத்தினர். அதில் உண்மைகள் இல்லாமலும் இல்லை.
80களில் ஆரம்பித்த இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தங்களே, 1987 ஜுலை 29இல் ஜே.ஆரை இந்திய, இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைத்தது. இருப்பினும், 13ஆவது திருத்தம் என்ற பெயரில் ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தினுள் ‘மாகாண சபை’ முறைமையை அதிகாரப் பகிர்வுக்கான ‘பகட்டுப் பொருளாகவே’ காண்பித்தார் ஜே.ஆர்.
13ஆவது திருத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் மாகாண சபை முறைமையில் குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே அம்முறமையை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்- ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ
ஒரு கையால் வழங்கும் அதிகாரங்களை மறுகையால் பெறும் வகையில் ஏற்பாடுகளைச் செய்த ஜே.ஆர் ஒற்றையாட்சி அரச தலைமைத்துவ ‘அதிகார மையத்தின்’ அடிப்படையை மாற்றாது தன் மீதான அழுத்தங்களை பிரயோகித்த இந்தியாவை மிக சூட்சுமமாக ஏமாற்றியிருந்தார் என்பதே நிதர்சனமான உண்மை.
அப்படியிருக்க, தற்போது மாறியுள்ள பூகோளச் சூழலில் இலங்கை விடயத்தில் இந்தியாவின் ‘அழுத்தத்திற்கும்’ வரையறை ஏற்பட்டாகிவிட்டது. ஆகவே வரையறைக்குள் நின்று காய்நகர்த்தல்களைச் செய்ய விளையும் இந்தியாவுக்கு ஜே.ஆர். பாணியில் அதிகாரக்குவிப்பினை நோக்கி நகரும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவை கையாள்வது சிரமானதே.
நாட்டில் மாகாண சபை முறை தோல்வியடைந்துவிட்டது. கடந்த சில வருடங்களாக நாட்டில் மாகாண சபைகள் இல்லாவிடினும் மக்களுக்கான சேவைகளில் எவ்விதமான குறைபாடும் இருக்கவில்லை. எனவே மாகாண சபை முறையானது நாட்டுக்கு பயனற்றதாகும்- வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன
பிரதமர் மோடி ‘13’ ஐ நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்திய கையோடு, இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திரமான வலயமாக அமைய வேண்டுமென்று கூறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவுக்கு ‘செக்’ வைக்கும் தமது தந்திர சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார்.
மறுபக்கத்தில், அரசுக்குள்ளிருந்து மேலெழுந்துள்ள 13 இற்கு எதிர்ப்பு வாதம், இலங்கையின் இறைமையில் தலையிட முடியாத நிலை, தற்போதைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான மக்கள் ஆணை போன்ற விடயங்களும் இந்தியாவுக்கு நிச்சயம் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும்.
13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். இந்தியாவால் திணிக்கப்பட்டதாகவும் பயனற்றதாகவும் மாகாண சபை முறைமை காணப்படுகின்றது. இதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அத்துடன் இந்தியா அழுத்தங்களை அளிப்பதற்கும் இது காரணமாகின்றது - உள்ளுராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகர
எனினும், மாகாண சபைகளின் அதிகாரங்களை ருசித்தவர்கள் பாராளுமன்றில் இருப்பதும், அவர்கள் தமது இரத்த உறவுகளை அடுத்த பரம்பரை அரசியல் பிரவேசத்திற்காக தயார்படுத்துவதற்கான தளமாக மாகாண சபைகளை மையப்பத்தியிருப்பதும், பெரும்பான்மை தரப்பின் இரண்டாம் நிலை அரசியல் பிரதிநிதிகள் உருவாகும் தளமாக மாகாண சபைகளே காணப்படுவதும் 13ஆவது திருத்தம் ஏதோவொரு வடிவில் ‘உயிர்ப்புடன் இருக்கும்’ என்று இந்தியா தரப்பு கணக்கிடக் காரணமாகின்றது.
எனினும் தமிழ் தரப்பினை அடியொன்றி உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தம் தொடர்பில் தற்போது வரையில் தமிழ்த் தரப்புக்கள் இரண்டும் கட்டா நிலையிலேயே உள்ளமை கவலைக்குரியது. அதிகாரப் பகிர்வினை உறுதிப்படுத்தும் ஒரேயொரு ஏற்பாடாக காணப்படுவது 13ஆவது திருத்தச்சட்டமே. அது ஒற்றையாட்சிக்குட்பட்டிருந்தாலும் குறைகள் நிறைந்திருந்தாலும் ‘அதிகாரப் பகிர்வுக்கான முதற்படி’ என்று கருதுவதில் தவறில்லை.
தற்போதைய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு நோக்கி முன்னேறுவது நடைமுறைச் சாத்தியமானதாகும். அரசாங்கம் அதனை இரத்துச் செய்வதற்கு ஒருபோதும் தீர்மானிக்கவில்லை ஈ.பி.டி.பி.செயலாளர் நாயமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
இது, தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதும் புதிய கண்டுபிடிப்பல்ல. ஆனால் அரசியலமைப்பில் இருக்கின்ற ஏற்பாடொன்றையே முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ‘உந்துதல்களை’ திராணியில்லாத தமிழத் தரப்புக்களால் எவ்வாறு அதற்கும் அப்பால் சம~;டி நோக்கி பயணிக்க முடியும் என்பதே இங்குள்ள கேள்வி.
தமிழின விடுதலைக்காக வெவ்வேறு திசைகளில் பணிக்கும் தரப்புக்கள் 13ஆவது திருத்தச்சட்;ட விடயத்தில் இந்தியாவின் தர்மீக கடமையென்று கூறி இந்தியாவிடம் பந்தை கைமாற்றிவிடுவதோ அல்லது 13 இருந்தாலும் ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று என்ற போக்கிலிருப்பதோ அல்லது இந்திய எதிர்ப்புவாத மனநிலையில் 13ஐ முழுமையாக எதிர்ப்பதோ தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு சாதகமான பிரதிபலிப்புக்களை ஒருபோதும் தராது.
அதிகாரங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வாகவே இந்தியாவினால் முன்மொழியப்பட்டு 13ஆவது திருத்தம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை இலகுவில் நீக்கவிட முடியாது - அமைச்சர் வாசுதேவநாணயக்கார மற்றும் பேராசிரியர் திஸ்ஸவிதாரண
விரும்பியோ, விரும்பாமலோ, அதிகாரங்களை பகிர்வதற்கான நிலைப்பாட்டில் இருக்கும் அத்தனை தரப்புக்களும் ‘13’ போதுமானதா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்களை தவிர்த்து பொதுதளமொன்றிற்கு வரவேண்டிய ‘தருணம்’ ஏற்பட்டுள்ளது.
அதிகாரங்களை கோரும் தரப்பின் பொதுநிலைப்பாடு என்னவென்று பகிரங்கமாகது இராஜதந்திர வரையறைகளைக் கொண்டிருக்கும் இந்தியா வலிந்து வந்து நிற்கும் என்றுரைப்பது அதீத எதிர்பார்ப்பு மட்டுமே.
ஆகவே, இத்தருணம் உணர்ந்து செயற்படத் தவறின் பின் எத்தருணத்திலும் ‘மீட்சி’ என்பதே இல்லை என்பதை உணராத அறிவிலர் சிறுபான்மை அரசியல் அரங்கில் நிச்சயம் இல்லை.
- 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும். அதில் இந்தியாவின் அனுமதி இன்றி மாற்றங்களை ஏற்படுத்த முடியாது - சு.க.பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர
- மாகாண சபை முறைமை தொடர வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக தமிழ் மக்களின் நிலைப்பாடே முக்கியமானது. அந்த மக்களுடன் நேரடியாக பேச்சுக்களை நடத்தியே இறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இணைவு, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுதல் என்பனவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. அனைத்து மாகாணங்களுக்கும் சமத்துவமான அதிகாரங்களை ஏற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க
- 13ஆவது திருத்தச்சட்டம் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடையது. அதனை இலகுவாக நீக்க முடியாது. ஆனால் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அவற்றின் செயற்பாடுகள் சம்பந்தமாக விமர்சனங்கள் காணப்படுகின்றன. ஆகவே குறைபாடுகளை நீக்கி வினைத்திறனான செயற்பாடுகளுக்குரிய மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியமாகின்றது- ஐக்கிய தேசியக் கட்சி பிரதிதலைவர் ருவன் விஜேவர்த்தன
- 13ஆவது திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வாகாது விட்டாலும் அதிகாரப்பகிர்வின் ஆரம்பமாக இருக்கின்றது. ஆகவே இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்த வாக்குறுதிப்படி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது ராஜபக~வினரின் பொறுப்பாகும். இந்த விடயத்தில் தலையீடுகளைச் செய்து இலங்கை அரசங்கத்தை செயற்பட வைக்கவேண்டியது இந்தியாவின் தார்மீக கடமையாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- 13 ஆவது திருத்த சட்டம் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு அது ஒருபோதும் தீர்வாகாது. ஒற்றையாட்சியின்; கைப்பொம்மையாக மாறியிருக்கும் 13ஆம் திருத்தச் சட்டம், தமிழர்களின் அபிலாi~களை பூர்த்தி செய்வதற்கான தற்காலிக தீர்வாகவே 13ஐ கருத முடியும். அதனை கடந்து சம~;டி அடிப்படையிலான நிலையான தீர்வைப் பெற்றுத்தர இந்தியா முயற்சிக்க வேண்டும் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
- இலங்கை-இந்திய ஒப்பந்தம் உயிர்ப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்த ஒப்பந்தத்தினை திசைதிருப்பி ஒற்றை ஆட்சிக்குள் கட்டுப்படும் வகையிலேயே சிங்களத்தலைவமைகள் மாகாண சபை முறைமையை அமைத்துள்ளன. மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு எவ்விதமான அதிகாரங்களுமின்றி மத்திக்கு கட்டுப்பட வேண்டிய நிலைமையே இருக்கின்றது. அவ்விதமான ஒரு ஏற்பாட்டினால் தமிழர்களுக்கு எவ்விதமான பயனுமில்லை -தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்
- 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட முடியாது. மாகாண சபை முறைமையைப் பலப்படுத்த வேண்டுமே தவிர அதனைப் பலவீனப்படுத்தக்கூடாது. இந்தியாவும் அதற்கு இடமளிக்க கூடாது. பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ள சமிக்ஞை வரவேற்கத்தக்கது - தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் வீ.இராதாகிருஷ்ணன்
- இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் வழி வந்த 13ஆவது திருத்தம், மாகாணசபை முறைமை முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் எழுச்சிக்கு வித்திட்டது. இரண்டு சமூகங்களுக்காக கொண்டுவரப்பட்ட அச்சட்டம் ஊடாக பிறிதொரு தரப்பினரே நன்மை அடைகின்றார்கள். சிறுபான்மை சமூகத்தினர் முழுமையான நன்மைகளை பெறுவதை உறுதி செய்யும் வகையில் அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் பரந்து பட்ட கலந்துரையாடல் அவசியமாகின்றது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
- 13ஆவது திருத்தச்சட்டம் முஸ்லிம்களின் விருப்போடு நிறைவேற்றப்பட்டது அல்ல. இருப்பினும் அதிகாரப்பகிர்வுக்கான ஆரம்பமாக இருக்கின்றது. ஆகவே முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரை பாதிக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. 13ஆவது திருத்தச் சட்டத்தினை மேலும் கட்டியெழுப்பி பலமானதாக மாற்ற வேண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரி~hத் பதியுதீன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM