(எம்.எப்.எம்.பஸீர்)
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 விஷேட மனுக்கள், அம்மனுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்று 2 ஆவது நாளாக நடைபெற்றது.
அரசியலமைப்பின் 121 ஆவது உறுப்புரை பிரகாரம் தாக்கல் செய்யபப்ட்டுள்ள குறித்த 39 விசேட மனுக்கள் மற்றும் 7 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றில் நேற்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, இரு நாட்களிலும் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்களில் 32 மனுதாரர்கள் சார்பிலான வாதங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
எஞ்சிய மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் மற்றும் சட்ட மா அதிபரின் வாதங்கள் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளன.
நேற்றைய தினம், விஷேடமாக ட்ரன்ஸ்பெரன்ஸி இன்டர் நெஷனல் சார்பில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன, இளம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் சட்டத்தரணி நுவன் போப்பகே, இலங்கை பத்திரிகை ஸ்தபனம் சார்பில் சட்டத்தரணி லக்ஷ்மனன் ஜயகுமார், கீர்த்தி தென்னகோன் சார்பில் சட்டத்தரணி ஷிரால் லக்திலக, ஐ.தே.க. செயலாளர் அகில விராஜ் காரியவசம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர்.
இதன்போது வாதங்களை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி ஷிரால் லக்திலக,
' இந்த 20 ஆவது திருத்தம் ஊடாக அதிகமான அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் அடிப்படை கொள்கைகளை மீறியே அவர்கள் அவ்வாறான ஒரு ஜனாதிபதியை உருவாக்க முயல்கின்றனர். அது எப்படியும் செய்யப்பட முடியாதது.
எனவே 20 ஆம் திருத்த சட்ட மூலத்தின் அத்தியாயம் அத்தியாயமாக பார்க்காது, முற்று முழுதாக அதனை நிராகரிக்க வேண்டும். அப்படியாயின் இவ்வாறு அரசியலமைப்பின் கட்டமைப்பினை சிதைக்கும், அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு முரணான உத்தேச சட்ட மூலம் ஒன்றினை இரண்டில் மூன்று பெரும்பான்மை மட்டுமன்றி, பொது ஜன வாக்கெடுப்பு ஊடாகவும் நிறைவேற்ற முடியாது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்களின் அனுமதி ஆரயப்பட வேண்டியதில்லை.
இவ்வாறான நிலைமைகள் வரலற்றில் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளன.
1933 ஆம் ஆண்டு ஜேர்மன் பாராளுமன்றம், வைமார் அரசியலமைப்பை மீறி ஹிட்லருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் வண்ணம் சட்டம் ஒன்றினை இயற்றியது.
அதேபோல், 1904 ஆம் ஆண்டு பிரான்ஸ் மக்கள், பொது மக்கள் வாக்கெடுப்பு ஊடாக நெப்போலியனை ஆயுட்காலம் முழுவதும் ஏகாதிபதியாக நியமித்துக்கொண்டனர். இலங்கையிலும் தற்போது இதனை ஒத்த சம்பவங்களே நடந்துகொண்டிருக்கின்றன.
நாம் அழிவின் பாதைக்குள் செல்வதா அல்லது அபிவிருத்தியின் பாதையில் பயணிப்பதா என 20 ஆம் திருத்தைலேயே தங்கியுள்ளது. அதனால் இந் நாட்டு மக்களின் எதிர்க்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு இந்த உயர் நீதிமன்றிலேயே தங்கியுள்ளதுஎன வாதிட்டார்.
இந் நிலையில் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்னெஷனல் சார்பில் ஆஜரான சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன, உத்தேச 20 ஆம் திருத்தம் ஊடாக பொது மக்களின் சிந்தனை சுதந்திரம் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும், அது தகவல் அறியும் உரிமையை பாதிக்கும் எனவும் வாதிட்டார். இது மக்களின் இறைமையை மீறுவதால் பொது மக்கள் வாக்கெடுப்பின்றி அச்சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது என அவர் குறிப்பிட்டார்.
இந் நிலையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷ்மனன் ஜெயகுமாரும் உத்தேச திருத்தச் சட்டத்தில், சிந்திக்கும் உரிமைக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதன் அத்தியாயங்களை ஆராயும்போது தெளிவாவதாகவும் அதனால் அதனை நிறைவேற்ற கண்டிப்பாக பொது ஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் வாதிட்டார்.
இந் நிலையில் இலங்கை இளம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவன் போப்பகே வாதிடுகையில், 19 ஆவது திருத்தம் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட அரசியமைப்பு பேரவை, ஆணைக் குழுக்களுக்கு உத்தேச 20 ஆம் திருத்தச் சட்டம் ஊடாக கொண்டுவரப்பட்டுள்ள நிராகரிப்புக்கள், மக்களின் இறையாண்மையை நேரடியாக மீறுவதாகவும் அதனால் அதனை நிறைவேற்ற பொதுஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் வாதிட்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், தனது மனு தொடர்பில் தானே வாதிடுவதாக மன்றில் பதிவு செய்து, உத்தேச 20 ஆம் திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்ற கண்டிப்பாக பொது ஜன வாக்கெடுப்பு வேண்டும் என தெரிவித்தார்.
குறிப்பாக அவசர சட்ட மூலங்கள் கொண்டுவரப்படுவதற்கான சந்தர்ப்பத்தை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அது மிகவும் ஆபத்தானது எனவும் மக்களின் இறையாண்மையை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனு மீது ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதங்களை பதிவு செய்தார்.
ஏற்கனவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியமித்த 20 ஆம் திருத்த சட்ட மூலத்தை ஆராய்ந்த குழுவின் அறிக்கையையும் மனுவுடன் இணைத்துள்ளதாக கூறிய அவர், சட்டவாக்கம், நீதித் துறை மற்றும் அடிப்படை உரிமைகள் 20 ஆம் திருத்த சட்ட மூலம் ஊடாக பாரிய அளவில் பாதிப்புக்களுக்கு உள்ளாகும் என குறிப்பிட்டதுடன், அச்சட்ட மூலத்தை நிறைவேற்ற பொத ஜன வாக்கெடுப்பு அவசியம் என்றார்.
இந் நிலையிலேயே, இந்த விஷேட மனுக்கள் மீதான பரிசீலனைகள் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM