செய்திகள், தகவல்களை வெளியிடுவது தொடர்பில் ஊடகங்கள் தவறு விடுகின்றனவா? அல்லது அரசியல்வாதிகள் தங்கள் தவறுகளை மறைக்க ஊடகங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனரா? என மக்கள் வெகுவாகக் குழம்பிப்போய் உள்ளனர்.
இவை இரண்டுமே நடக்க சாத்தியம் உள்ளது என்றாலும், மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுவதில் நமது அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள் என்பதையும் மறந்து போகக்கூடாது.
இனி விடயத்துக்கு வருவோம், 13 ஆவது திருத்த விவகாரமும் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் அண்மையில் இந்திய பிரதமர் மோடிக்கும் இலங்கை பிரதமரான மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான இணையவழி சந்திப்பை அடுத்து, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் குறிப்பாக எதனையும் கூறவில்லை எனவும், ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக சில செய்திகளை வெளியிடுள்ளன என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 13 ஆவது திருத்தத்தின் படி, மாகாண சபைகள் முறைமையை முழுமையாக அமுல்படுத்துவது தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என, பிரதமர் மோடி குறிப்பிட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இரு தலைவர்களின் சந்திப்பின் போதும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதிலும் சில விடயங்கள் தொடர்பில் வெளியான செய்திகளில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதால் அது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில், ஊடகவியலாளர் மாநாடு ஒன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
அதில் குறித்த இரு அமைச்சர்களும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கியுள்ளனர்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியப் பிரதமர் வலியுறுத்தவில்லை என, அமைச்சர் கெஹெலியவும் மாகாணசபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதே இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினர்.
13ஆவது திருத்தம் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் புதிதாக கூற என்ன உள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கூறியுள்ளார்.
இதில் நதி மூலம் ரிஷிமூலத்தை தேடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதே வெளிப்படையான உண்மை.
இலங்கை அரசைப் பொறுத்தமட்டில் யார் ஆட்சி செய்த போதிலும் சிறுபான்மை தமிழர் விடயத்தில் ஒரேவிதமான போக்கையே கடைபிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் .
வெறுமனே வார்த்தை ஜாலங்களை தமிழ் மக்கள் இதுவரை கேட்டு சலித்துப் போய் உள்ளனர்.
பிரதமர் மோடி விவகாரத்தில் அரசு, அமைச்சர்கள் என அனைவரும் இருவேறு நிலைப்பாடுகளில் இருப்பதும் புதிய விடயமல்ல.
இதனிடையே 13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே இந்தியா 50 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்குகின்றது என்று வெறுமனே கதைகள் புனையப் பட்டுள்ளதாகவும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும், பிரச்சினைகள் இடம்பெறுவதற்கான பிரதான காரணமே தமிழ் மக்களுக்கு ஒரு விதமாகவும் சிங்கள மக்களுக்கு வேறு ஒரு விதமாகவும் செய்திகள் கூறப்படுவதும் இருவேறு சமூகங்களையும் இருவேறு விதமாக ஆட்சியாளர்கள் நடத்துவதுமே ஆகும்.
இதன் காரணமாகவே நாட்டில் பெரும் போர் மூண்டது.
இனிமேலும், இவ்வாறு ஆட்சியாளர்கள் நடந்து கொள்வார்களேயானால் இந்த நாட்டை எந்த சக்தியாலும் முன்னேற்ற முடியாது என்பதையும் உலகின் பல நாடுகளும் முன்னேற அந்த நாட்டின் அனைத்து இன மக்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் நடத்துவதே காரணம் என்றும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM