தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஆயுதப் போராட்டம் அகிம்சை போராட்டம் என அனைத்துப் போராட்டங்களும் பொய்த்துப்போனமைக்கும் பெரும்பான்மை அரசுகள் அவற்றை இல்லாதொழித்தமைக்கும் பிரதான காரணம் காட்டிக்கொடுப்புகளும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கறுப்பு ஆடுகளுமேயாகும்.
அந்த வகையில் தமிழ் சமூகம் இன்று நாதியற்று நலிவுற்று சொந்தமே சோகங்களாக வாழ்ந்து வருகின்றது. இருந்தும்கூட காட்டிக்கொடுப்புகளுக்கு குறைவே இல்லை. இது ஒரு வகையில் தமிழ் மக்களின் சாபக்கேடாகவே தொடர்கிறது. எனினும் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை அதனை முறியடிக்க முடியவில்லை.
இனியாவது அதனை உணர்ந்து தமிழ் சமூகம் நடக்குமானால் எஞ்சியிருக்கும் தமிழர்களாவது தப்பிப் பிழைக்க வழி பிறக்கும்.
இதேவேளை நல்ல செய்தி ஒன்றும் தமிழ் மக்களுக்கு கிட்டியுள்ளது. தமிழ் மக்கள் மீதான அரசின் கெடுபிடிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது, திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் தடையை நீக்குமாறு அரசிடம் கோருவது எனவும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இளம் கலைஞர் மன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் செயற்பாடுகளை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் இங்கு கூடி ஆராயப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே சிவஞானம், சத்தியலிங்கம் , புளட் சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், டெலோ சார்பில் சுரேன் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அருந்தவபாலன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் .சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சி சார்பில் ஸ்ரீகாந்தா ,எம் கே சிவாஜிலிங்கம், ஈழமக்கள் சுயாட்சிக் கழகம் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோரும் தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
எனினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கவில்லை என்பது தமிழ் மக்களுக்கு பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது. இதற்கான அழைப்பு தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவ்வாறான நிலையில் தாம் எவ்வாறு கூட்டத்தில் கலந்து கொள்வது என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார்.
எவ்வாறெனினும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும். வெறுமனே உதட்டளவில் இல்லாது உள்ளத்தளவில் தொடர்ந்தால் மாத்திரமே தமிழ் மக்களின் துயர் தீர வழி பிறக்கும் .
மேலும் இதுவரை தமிழ் மக்களை பலிக்கடாவாக்கி அவர்கள் மீது சவாரி செய்த தமிழ் தலைமைத்துவங்கள் தங்கள் கரங்களை சுத்தம் செய்வதற்கு கிட்டியுள்ள இந்த சந்தர்ப்பத்தையும் இழந்து விடக்கூடாது என்பதை மாத்திரம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM