ஐக்கிய நாடுகள் சாசன மற்றும் சர்வதேச சமவாயச் சட்டங்களுக்கு அமைவாக உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்கு உரித்துடைய எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தியாக தீபம் திலீபனின் வருடாந்த நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்குமாறு தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளன.
தியாக தீபம் திலீபனின் 33ஆவது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் ஊடாக தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிகழ்வினை முன்னெடுப்பதற்கான உரித்தினை பெற்றுக்கொள்ளவதற்காக தமிழ்த் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் அண்மைய நாட்களில் இடம்பெற்றன.
அதற்கமைய, நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று முன்தினம் கூடியிருந்த கட்சிகள், நினைவேந்தலுக்கான அனுமதியைப் பெறுவதற்காக முதலில் ஜனாதிபதி பிரதமரிடத்தில் எழுத்துமூலமாக கோரிக்கைவிடுவதென்ற இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தன.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி, பிரதமருக்கான கடிதத்தினை இறுதிசெய்வதற்காக முற்பகல் 11 மணியளவில் வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்று கூடியிருந்தனர்.
இப்பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் அடிப்படையில் பிற்பகல் 3மணியளவில் கடிதம் இறுதி செய்யப்பட்டு கட்சிகளின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் ஜனாதிபதி, பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் வருடாந்த நினைவேந்தலைச் செய்வதற்கான முறையீட்டினைச் செய்தல் எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட அக்கடிதத்தில், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகளான நாம், எமது மக்களின் அரசியல் மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடைய விடயம் தொடர்பாக தங்களின் கவனத்திற்கு உடனடியான கொண்டுவருகின்றோம்.
சில கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தினை நடத்திய திலீபன் 1987ஆம் ஆண்டு செப்படம் 26ஆம் திகதி உயிர் நீத்தார். இவருடைய வருடாந்த நினைவேந்தல் ஆண்டு தோறும் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
இவ்வாறான நிலையில், அண்மைய தினங்களில் வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் விண்ணப்பங்களைச் செய்து அவற்றின் ஊடாக திலீபனின் வருடாந்த நினைவேந்தலை அனுஷ்டிப்பதை தடுப்பதற்கான உத்தரவுகளை பெற்றுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுக்க கூடாது என்று சில பாராளுமன்ற உறுப்பினர்களை குறிப்பிட்டும் நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. அவை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடுகள் அல்ல.
ஐக்கிய நாடுகள் அத்தியாத்தின் பிரகாரமும், சர்வதேச சமவாயங்களில் பிரகாரமும் தனியாகவோ அல்லது குழுவாகவோ உயிர்நீத்த உறவுகளை நினைவு கூருவதற்கு உரித்துடையவர்களாக எமது மக்கள் உள்ளனர், நினைவேந்தலானது எமது மக்களின் வலிகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு விடயமாகவே நீண்டகாலமாக இருந்து வந்திருக்கின்றது.
அதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த விடயத்தில் உடனடியாகத் தலையீடுகளைச்செய்து இந்த வருடமும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைச் முன்னெடுப்பதற்கு அனுமதி இடமளிக்க வேண்டும்.
இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் நிரகாரிக்கப்படும் பட்சத்தில் அல்லது உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் மாற்று வழியாக அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றுள்ளது.
மேலும் இக்கடித்தில், மாவை.சோ.சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செல்வராஜா கஜேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, ஜி.சுரேந்திரன், அனந்தி சசிதரன், சி.வி.கே.சிவஞானம், பி.கஜதீபன், எம்.கே.சிவாஜலிங்கம், ரி.சிற்பரன், பி.ஐங்கரநேசன், பி.சிவநாதன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM