அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்குத் தடையாக இருக்கிறது என்று ஒரு உருப்படியான வாதத்தை முன்வைக்க முடியாது என்று கூறியிருக்கும் இலங்கையின் முன்னணி அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சில விலகல்களுடன் என்றாலும் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இன்றுவரை 19 வது திருத்தத்தின் கீழ் தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி செயற்பட்ட வருகிறார் என்று சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தச்சட்டமூலவரைவு தொடர்பாக கிளம்பியிருக்கும் வாத, பிரதிவாதங்கள் குறித்து கருத்துத்தெரிவித்த பேராசிரியர் உயன்கொட, அந்தத் திருத்தச்சட்டம் இலங்கையில் ஜனநாயகத்திற்கு முடிவுகட்டும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கையின் ஜனநாயகம் தொடர்ச்சியான பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்டுவந்திருக்கிறது. ஆனால் இலங்கையின் ஜனநாயகம் குறைந்தபட்சம் பாராளுமன்ற ஜனநாயகமாக இருக்கவேண்டும் என்ற அடிப்படைப்போக்கை அண்மைய வருடங்களில் காணக்கூடியதாக இருந்தது. நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்திற்கோ அல்லது நீதித்துறைக்கோ மேலானதாக இருக்கக்கூடாது. நிறைவேற்று அதிகாரபீடம் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறுவதாக அல்லது பதில் கூறுவதாக இருக்கவேண்டும்.
பாராளுமன்றமே மக்களின் இணையாண்மையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற அடிப்படையில் ஆட்சிமுறையில் பிரதான நிர்வாகமாக பாராளுமன்றமே இருக்கவேண்டும். பாராளுமன்றம் மீதும் நிறைவேற்று அதிகாரபீடம் மீதும் தடுப்புக்களும் சமப்படுத்தல்களும் இருப்பது அவசியம். அரசியல் அதிகாரத்திற்கு ஒரு வரையறை இருக்கவேண்டும். 20 வது திருத்தச்சட்டமூலம் 1931 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் நாம் கொண்டிருந்த காலனித்துவ அரசியன் பாணியை பின்பற்றுவதாகத் தோன்றுகிறது.
20 வது திருத்தம் எதேச்சதிகார முறையொன்றுக்கு வழிவகுக்கக்கூடும் என்று குறிப்பிட்ட உயன்கொட, அதை ஒரு சர்வாதிகாரம் என்று அழைப்பதைத் தவிர்த்துக்கொண்டார். சர்வாதிகாரம் என்ற சொல்லை நான் பயன்படுத்தவில்லை. 20 வது திருத்தம் எதேச்சதிகார முறையொன்றைத் தோற்றுவிக்கும் என்று கூறினேன். எதேச்சதிகார அரசாங்கம் என்பது முற்றமுழுதான அதிகாரங்களைக் கொண்ட தனியொரு நபரால் அல்லது ஒரு சிறிய குழுவினரால் நடத்தப்படுகின்ற அரசாங்கமாகும். மக்கள் இதை எவ்வாறு விளங்கிக்கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. துரதிஷ்டவசமாக மக்கள் அத்தகைய அரசியல் மாற்றமொன்றின் விளைவுகளால் பாதிக்கப்படும்போது ஒருசில வருடங்களுக்குப் பிறகு விளங்கிக்கொள்வார்கள். இது பெரிய விலைகொடுத்துக் கற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகும்" என்று அவர் எச்சரிக்கை செய்தார்.
தேசிய பாதுகாப்பு அக்கறைகள் தான் 20 வது திருத்த்ததிற்கு வழிவகுத்ததா என்று பேராசிரியர் உயன்கொடவிடம் கேட்டபோது 'உள்ளக மற்றும் வெளியக பாதுகாப்பு ஒரு நாட்டிற்கு முக்கியமானவையே. அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தம் தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவில்லை. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது அரசாங்கத்திற்குத் தலைமைதாங்கியவர்களே தவறிழைத்தார்கள்" என்று பதிலளித்தார்.
2019 நவம்பர் தொடக்கம் இன்றுவரை ஜனாதிபதி கோத்தபாய சில விலகல்களுடன் 19 வது திருத்தத்தின் கீழேயே செயற்பட்டு வந்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டிய பேராசிரியர், சுமார் ஒருவருட காலமாக கோத்தபாய ராஜபக்ஷ 19 வது திருத்தத்திற்கு கீழேயே நாட்டை நிர்வகித்து வருகிறார். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்கு 19 வது திருத்தம் தடையாக இருக்கிறது என்று ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வாதத்தை முன்வைக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. 19 வது திருத்தத்தின் கட்டமைப்பிலிருந்து சில விலகல்களுடன் என்றாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே செயற்பட்டுக்கொண்டு வருகிறார்.
அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தை நிர்வகிக்கும் தனிநபர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை பலர் புரிந்துகொள்வதில்லை. 19 வது திருத்தத்தின் கீழ் தேசிய பாதுகாப்பிற்கு என்ன நடந்தது? அந்த நேரத்தில் தேசிய பாதுகாப்பிற்கும் பாதுகாப்பு இயந்திரத்திற்கும் பொறுப்பாக இருந்த பேர்வழிகளே தவறிழைத்தார்கள். அது அரசியலமைப்பின் தவறல்ல. தேசிய பாதுகாப்பைக் கையாண்ட தனிநபர்களின் தவறே அதுவாகும் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM