தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தில் மீண்டும் நேற்று மீண்டும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் விக்னேஸ்வரனை உடனடியாக சபையை விட்டு வெளியேற்றுங்கள் என சபையில் போர்க்கொடி தூக்கினர்.
தமிழினம் இந்த பூமியில் உரித்துடையவர்களா ? என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் சபையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேசத்துரோகக் கருத்துக்களை முன்வைத்து சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் சபையில் கோரிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் அமைதியாகவே இருந்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதும் தமிழ் பேசும் மக்கள் பெருவாரியாகச் சென்று வாக்களித்தது ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆகும். இல்லையேல் இரு தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி படுதோல்வியை சந்தித்திருக்கும்.
இதன் காரணமாகவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பெரும்பான்மை மக்களே தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்ததாக பகிரங்கமாக கூறியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனை வெளியேற்ற வேண்டும் என்று கோசம் எழுப்பப்பட்டுள்ளது.
ஒரு சிறு விடயத்திற்காக போர்க்கொடி தூக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினரா தமிழ் பேசும் மக்களின் உரிமைகள், தேவைகளுக்காக குரல் எழுப்பப்போகின்றார்கள் என்று தமிழ் பேசும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக வடக்கு, கிழக்கு என மேடை மேடையாக ஏறி பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அமைதியாகவே இருந்துள்ளார்.
தமிழர்களை சுயாட்சி கேட்கும் நிலைக்கு தூண்டிவிட்டால் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டிவருமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர சபையில் எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன் யுத்தத்தின் பின்னர் மீண்டும் நாட்டில் சமாதானம் உருவாகியுள்ளது. ஆனால் இன்று தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் விரோதங்களை வளர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இளைஞர்களை தூண்டி விடுகின்றனர். இதனால் நாட்டில் ஏனைய அபிவிருத்திக்கு வழங்கும் நிதியை விடவும் தேசிய பாதுகாப்புக்கு அதிக நிதி வழங்கப்பட வேண்டி வரும் என்றும் கூறினார்.
இதனையடுத்தே ஐக்கிய மக்கள் சக்தியினர் தமது பிரதிபலிப்பைக் காட்டியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனோ, எவரோ கூறுவதானால் இளைஞர்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று ஒருபோதும் கருதக் கூடாது. இன்றைய இளைஞர்களை அவ்வாறு கூறுவதனால் உசுப்பேற்றிவிட முடியாது.
தமிழ் இளைஞர்கள் ஜனாதிபதியின் மீதும் அரசாங்கத்தின் மீதும் அதிக விசுவாசம் கொண்டுள்ளனர். அவர்களது வெளிப்படையான நடவடிக்கைகள் தமிழ் பேசும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஏனவே வெறும் வார்த்தைகளுக்காக மக்களையும் நாட்டையும் குழப்பாதிருக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும். இன்றைய சூழலில் அனைத்து இன மக்களுமே தெளிவாகவுள்ளனர். எனவே அதில் எவரும் குளிர் காய முயலக்கூடாது என்பதை நினைவு படுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM