-ரி.ராமகிருஷ்ணன்
சுமார் 40வருடங்களுக்கு பிறகு புதியதொரு தலைநகரம் குறித்து தீவிரமான விவாதம் ஒன்று தமிழ்நாட்டில் மூண்டிருக்கிறது. மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கு இன்னும் 8மாதங்களே இருக்கும் நிலையில், ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் இருந்து இந்தக் கோரிக்கை வந்திருப்பது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாடு பூகோள ரீதியில் அதன் மத்தியப் பகுதியில் தலைநகரத்தை கொண்டிருக்க வேண்டுமா இல்லையா என்று மக்கள் உரத்து சிந்திக்க வேண்டும் என்று 1980 டிசம்பரில் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் மதுரையில் அரசாங்க நிகழ்வொன்றில் அழைப்பு விடுத்திருந்தார். அவர் மூன்று தெரிவுகளையும் - சென்னை, மதுரை அல்லது திருச்சி – குறிப்பிட்டார். ஆனால், பிராந்தியத்தில் நீர்வளம் ஒரு பொதுவான பிரச்சினையாக இருப்பதை காரணம் காட்டி திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் இடையில் ஒரு இடத்தை தலைநகராக்குவதற்கான தனது விருப்பத்தை சூசகமாக தெரிவித்தார்.
ஆனால், எம்.ஜி.ஆரின் அந்த யோசனைக்கு அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியிடமிருந்து உடனடி எதிர்ப்பு கிளம்பியது. உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு தந்திரோபாயம் என்று அதை அவர் வர்ணித்தார். காலப்போக்கில் அந்த யோசனை மறைந்துபோனது.
1995 நவம்பரில் அன்றைய மத்திய முதலமைச்சர் எம்.அருணாசலம் மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை தெரிவு செய்ய வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். அதற்கு பிறகு அந்த யோசனை இடைக்கிடை ஞாபகப்படுத்தப்பட்டு வருகிறது.
2002 மேயில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையிலிருந்து 40மைல் தொலைவிலும் கிழக்கு கரையோர நெடுஞ்சாலையிலும் திருவிடந்தை மற்றும் தையூர் கிராமங்கள் ஓரமாக இருக்கும் மாமல்லபுரத்துக்கு அண்மையான பகுதியில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்வாக தலைநகரை அமைப்பதற்கு தனது அரசாங்கத்திடம் திட்டம் இருப்பதாக அறிவித்தார்.
ஆந்திர பிரதேச அரசாங்கம் அமராபதி, குர்னூல், விசாகப்பட்டிணத்தை முறையே சட்டசபை, நீதித்துறை மற்றும் நிறைவேற்று அதிகார தலைநகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானித்ததற்கு பிறகு தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகர கோட்பாடு புத்துயிர் பெற்றது.
‘மதுரையை இரண்டாவது தலைநகராக்கு’ என்ற பிரசாரத்தின் பின்னால் இருக்கும் சக்திகளில் தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் ஒருவர். சென்னையில் சனநெரிசலை குறைக்க வேண்டியிருக்கிறது என்றும் பெருமளவுக்கு அதிகாரப் பகிர்வை செய்ய வேண்டியிருக்கிறது என்றும் ஏற்பட்ட விளக்கப்பாட்டின் விளைவாகவே மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பியதாகவும் அவர் கூறினார். சென்னையில் மக்கள் நெரிசலாக வாழுகின்ற பிரச்சினை கொவிட் - 19 தொற்று நோய் நெருக்கடியின் போது மீண்டும் முக்கிய கவனத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசரும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜனும் ஊக்கப்படுத்தினர். ஆனால், இந்த கருத்துகள் எல்லாம் அமைச்சர்களினால் தனிப்பட்ட முறையில் கூறப்படுகின்றவை என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி இந்த விவகாரத்திலிருந்து அரசாங்கத்தை தூரவிலக்க முயற்சிக்கின்றார்.
உத்தேச இரண்டாவது தலைநகரமோ அல்லது மாற்று தலைநகரமோ மதுரையை விருதுநகருடன் அல்லது திருச்சியுடன் அல்லது தேனியுடன் இணைக்கும் எந்தவொரு பிராந்தியத்திலும் அமைய முடியும் என்று உதயகுமார் கூறுகிறார். அந்த பிராந்தியத்தில் போதுமான அரசாங்க நிலங்கள் இருக்கின்றன என்றும் நீர்ப்பிரச்சினையை காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளை வளங்களாக பயன்படுத்தி இணைந்த நீர் விநியோகத் திட்டங்களினூடாக தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
10ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படலாம் என்று ஒரு அண்ணளவான மதிப்பீடாக உதயகுமார் கூறுகிறார்.
நிலத்தொடர்ச்சியான தலைநகருக்கு பதிலான துண்டுதுண்டான பகுதிகளாக பிரிந்த நிலத்தில் புதிய தலைநகரை கொண்டிருக்கலாம் என்றும் கூறியிருக்கும் உதயகுமார், தனது யோசனைக்கு பின்னால் எந்தவிதமான அரசியல் நோக்கமும் கிடையாது என்றும் நிராகரித்தார்.
சென்னையில் அதீத சனநெரிசல்
சென்னையில் அதீத சனநெரிசல் பற்றிய பிரச்சினையை முழுமையாக ஒத்துக்கொள்ளும் ஓய்வுபெற்ற சிவில்சேவை அதிகாரியான எம்.ஜி.தேவசகாயம் தற்போது சென்னை மீதிருக்கும் கவர்ச்சிக்கு மாற்றான ஒரு கவர்ச்சியாக மதுரை அல்லது திருச்சி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். 1970களில் சண்டிகார் தலைநகர திட்டத்தின் நிர்வாகியாக பணியாற்றியவர் தேவசகாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைநகரம் ஒன்று பற்றிய விவகாரத்தை மட்டுப்படுத்தப்பட்ட வகையில் அல்லாமல் பன்முக பரிமாணங்களுடன் நோக்க வேண்டும். இந்த இரண்டு நகரங்களில் ஏதாவது ஒன்றை புதிய நிதித்துறை அல்லது கைத்தொழில்துறை தலைநகராக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற வேறுபட்ட தெரிவுகளும் இருக்கின்றன.
திருச்சியும் மதுரையும் அவற்றின் சொந்த சாதகமான அம்சங்களை கொண்டிருக்கின்றன என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் பாடசாலை திட்டமிடலில் வருகை பேராசிரியராக இருக்கும் கே.பி. சுப்பிரமணியன் கூறுகிறார். ‘இந்த விவகாரத்திலுள்ள முழு அம்சங்களையும் திறந்த மனதுடன் நாம் அணுகி பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு முன்னதாக அறிவியல் ரீதியாக ஆய்வை செய்ய வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.
ஆனால், தென் தமிழகத்தை சேர்ந்த திராவிடக் கழகத்தின் முக்கிய தலைவர்கள் இது விடயத்தில் பெரிதாக அக்கறை கொண்டவர்களாக இல்லை. முன்னாள் அமைச்சரும் தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் சட்டசபை உறுப்பினருமான பூங்கோதை ஆலடி அருணா தனிப்பட்டமுறையில் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறுகையில், அரசாங்கம் தற்போது நடைமுறையில் இருக்கும் அபிவிருத்தித் திட்டங்களையோ அல்லது தகவல் தொழில்நுட்ப பூங்காக்களையோ பூர்த்தி செய்யவோ அல்லது பயன்படுத்திக்கொள்ளவோ இல்லை என்று குறை கூறினார்.
தற்போது இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை நாம் மேம்படுத்த வேண்டும். முதலில் அரசாங்கம் சகல மாவட்ட தலைமையகங்களையும் தரமுயர்த்தி தொழில் வாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தட்டும் என்றும் பூங்கோதை வலியுறுத்தினார்.
அவரது சகாவும் முன்னாள் அமைச்சருமான விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கம் தென்னரசு, புதிய தலைநகர் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கும் தருணம் குறித்து சந்தேகம் கிளப்புகிறார். சுமார் 10வருடங்களாக அமைச்சராக இருந்துவரும் உதயகுமார், சென்னையில் சனநெரிசலை குறைக்க வேண்டும் என்றும் புதிய தலைநகராக மதுரையை மாற்றுவது குறித்தும் இப்போது பேசுவது மிகவும் விசித்திரமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
‘கல்விமான்களினாலும் தொழிலதிபர்களினாலும் முன்வைக்கப்படுகின்ற இந்த கோரிக்கையை உதயகுமாரின் கோரிக்கையுடன் போட்டு குழப்பக்கூடாது. ஏனென்றால், அவர்கள் அந்தப் பகுதி மக்களின் அபிலாசைகளை மாத்திரமே முக்கியப்படுத்துகிறார்கள் என்று கூறிய தென்னரசு, தமிழகத்தின் தென்பிராந்தியத்தை கைத்தொழில் மயமாக்குவது குறித்து எந்தவொரு உருப்படியான காரியத்தையும் ஏன் அரசாங்கம் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார்.
(த இந்து)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM