நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தியுள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கும் வகையில், தமக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த பொதுத் தேர்தலில் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தே தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டார்.
இந்நிலையில் ஜனாதிபதியாக தெரிவாகும் ஒருவரின் ஐந்து வருடகால பதவிக்காலம் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு தடவைகள் மாத்திரமே போட்டி இடுவது போன்ற விடயங்களை நீக்கும் யோசனையுடன் 19 ஆவது திருத்தச் சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருந்தது.
இந்நிலையில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசு அமைத்த கையோடு 19 ஐ நீக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்தவகையில் 19 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கும் ஜனாதிபதி முறைமையை பலப்படுத்தும் வகையில் 20 ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும் அடுத்த மாதம் பாராளுமன்றத்திற்கு 20 ஆம் திருத்தச்சட்ட யோசனை கொண்டு வரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலம், ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் எத்தனை தடவை போட்டியிடலாம் மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரம், பாராளுமன்ற பதவிக் காலம், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம், அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பில் 20 ஆவது திருத்தத்தில் அதிகம் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இவ்விவகாரங்களே கடந்த காலங்களில் பெரும் பேசுபொருளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் ஐந்து வருட பதவிக்காலம் மற்றும் இரண்டு தடவைகள் மாத்திரம் போட்டியிடுவது ஆகிய இரண்டு பிரிவுகளை நீக்காமல் இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை காலை நடைபெற்ற போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மேலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஓரிரு வருடங்களுக்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கான ஆரம்பமே 20 ஆவது திருத்தத்தின் உருவாக்கம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகின்றது. இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், "உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு மக்களிடையே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது. புதிய அரசுக்கு அவ்வாறான நோக்கங்கள் எதுவும் கிடையாது" என்று கூறியுள்ளார். 19 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு புதிய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
எவ்வாறெனினும் "நாட்டுக்கு எதிரான வடிவங்களை கொண்டுள்ள அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நீக்கப்படும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படமாட்டாது" என புதிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் அட்மிரல் வீரசேகர கூறியுள்ளார்.
புதிய அரசுக்கு கிடைத்துள்ள பலம் காரணமாக அதனால் எதனையும் தீர்மானிக்க முடியும் என்பதே யதார்த்தமாகும். அந்த வகையில் காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன ஒரு தடவை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தொடர்பில் கூறுகையில் "இதன் மூலம் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாத்திரமே மாற்ற முடியாது" என்று கூறியிருந்தமை தான் நினைவுக்கு வருகிறது.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM