புலம்பெயர்ந்த ஈழவாதிகள் மீண்டும் நாட்டில் பயங்கரவாதத்தை தலைத்தூக்கி விட முயற்சி - பாதுகாப்புச் செயலாளர்

16 Aug, 2020 | 05:57 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் இவ்வாறான அச்சுறுத்தல் நிலைமை ஏற்படாது என்று மக்கள் எண்ணக்கூடும். ஆனால் தமிழ் டயஸ்போராக்களில் ஈழவாதத்திற்கு ஆதரவளிக்கும் குழுவினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை உபயோகித்து மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே எமது புலனாய்வுப்பிரிவு சிறப்பாக செயற்படாவிட்டால் எம்மால் வெற்றி பெற முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

'இலங்கையில் கொவிட்-19 தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அபிவிருத்திகள்' என்ற தொனிப்பொருளில் ஹரிமக என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பாதுகாப்பு செயலாளராக மீண்டும் நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளமையானது நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு கிடைக்கப் பெற்ற சிறந்ததொரு வாய்ப்பாகவே கருதுகின்றேன். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 'சுபீட்சத்தின் நோக்கு' என்ற அவருடைய தேர்தல் கொள்கை பிரடனத்தில் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்திற்கே முதலிடம் அளித்திருந்தார்.

தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்படும் வரை உலகத்தில் காணப்படும் எந்தவொரு நாட்டுக்கும் வளர்ச்சி என்ற ஒன்றை பற்றி நினைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் காணப்படும் பிரதான சவாலாக அமைவது பிரிவினைவாதமாகும்.

2009 மே மாதம் 19 ஆம் திகதி பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் இது போன்றதொரு அச்சுறுத்தல் ஏற்படாது என்று எண்ணக்கூடும். ஆனால் கொலைகாரர்கள் அனைவரும் இல்லாதொழிக்கப்பட்டாலும் அந்த அமைப்பில் காணப்பட்ட 12 242 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் யுவதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் சமூகத்துடன் இணைந்து வாழுமாறு சுதந்திரமாக அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்மைப் போன்று சமூகத்தில் சாதாரணமாக வாழ வேண்டும் என்பதே அவர்களின் பெரும்பாலானோரது தேவையாகக் காணப்பட்டது.

ஆனால் தமிழ் டயஸ்போராக்களில் ஈழவாதத்திற்கு ஆதரவளிக்கும் குழுவினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட குறித்த இளைஞர் யுவதிகளை உபயோகித்து மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எமது புலனாய்வுப்பிரிவு சிறப்பாக செயற்படாவிட்டால் எம்மால் வெற்றி பெற முடியாது என்பது இதன் மூலம் நாம் இனங்கண்டு கொண்டுள்ளோம்.

இராணுவப்புலனாய்வுப்பிரினர் பலர் கடந்த காலங்களில் சிறையிலடைக்கப்பட்டார்கள். அதன் விளைவே கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் சுமார் 290 பேர் கொல்லப்பட்டதும் 500 பேர் வரையில் படுகாமடைந்த சம்பவமுமாகும். இவற்றின் மூலம் எதிர்காலத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன.

கடந்த வாரம் மன்னாரில் சுமார் 1.5 கிலோ கிராம் வெடி பொருட்களும் , டெட்டனேட்டர்களும் , சில ரிமோட் கன்ட்ரோல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டன. இவை மனித படுகொலைகளுக்காகவே கொண்டு வரப்படுகின்றன. திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் என்பன இன்று நாட்டில் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான நிலையில் பாதுகாப்பு செயலாளராக சரியான நபரை உரிய இடத்திற்கு நியமிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு காணப்பட்டது.

போதைப்பொருள் வியாபாரம் அதிகளவாக எவ்வாறு இடம்பெறுகிறது ? குற்றங்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன ? பாதாள உலக குழுக்கள் எவ்வாறு செயற்படுகின்றன ? என்பது பற்றி நாம் ஆராய்ந்தோம். இவை அனைத்துக்குமான வழிநடத்தல்கள் சிறைச்சாலைக்குள் தான் இடம்பெறுகின்றன என்பதை அறிந்து கொண்டோம். அதன் பின்னர் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறைச்சாலைகளில் ஏற்படுத்தப்பட்டன.

இராணுவத்தினரைப் பயன்படுத்தி சிறைச்சாலையில் கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. அதன் பின்னர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலும் இதே போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. போதைப்பொருள் பாவனையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளாக உயர்வடைவதைத் தடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கொழும்பில் தற்போது காணப்படும் மிகப்பாரதூரமான அச்சுறுத்தல் இடங்கள் சூரையாடப்படுவதாகும். பலவந்தமாகவும் மோசடி செய்யும் இடங்கள் சூரையாடப்படுகின்றமை தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினைக் கொண்ட விஷேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் பல முறைப்பாடு;கள் கிடைத்த வண்ணமுள்ளன. அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இது மாத்திரமின்றி மரங்கள் வெட்டப்படுதல் , சட்ட விரோத மணல் அகழ்வு என்பவற்கு எதிராகவும் பெருமளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04