அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடும் ஜோ பைடன், துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்த கமலா ஹாரிஸ் அம்மையாருக்கு பல சிறப்புக்கள். பிரதான கட்சியொன்றின் வேட்பாளராகக் களமிறங்கும் முதலாவது கறுப்பினப் பெண்மணி. துணை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், அந்தப் பதவிக்கு முதன்முதலாகத் தெரிவு செய்யப்படும் பெண்ணாக இருப்பார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராகவும் இருப்பார். தமிழ் என்ற அடையாளமும் உண்டு. கமலா அம்மையார் துணை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் அமெரிக்காவில் வந்தேறு குடிகள் பற்றிய கருத்தாடல் தலைதூக்கியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வேர்களைக் கொண்ட குடும்பத்தின் வரலாறு பற்றி கூடுதலாக ஆராயப்படுகிறது.
இந்தப் பெண்ணின் தந்தை டொனல்ட் ஹாரிஸ். இவர் ஜமெய்க்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறை பேராசிரியராக வேலை செய்தவர். தாய் ஷியாமளா கோபாலன். சென்னையின் பெசன்ட் நகரை பூர்வீகமாகக் கொண்டவர். தமது இளம் வயதில் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்று, புற்றுநோய் ஆராய்ச்சியாளராக கடமையாற்றியவர். சிவில் செயற்பாட்டாளர். கமலா ஹாரிஸ், கலிபோர்ணியா மாநிலத்தின் ஓக்லன்ட் நகரில் பிறந்தவர். பெர்க்லி என்ற இடத்தில் வளர்ந்தவர். உயர் கல்விக்காக கனடாவில். பின்னர், வொஷிங்டனின் ஹொவார்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, குற்றவியல் நீதித்துறையில் தொழிலை ஆரம்பித்தார்.
கமலாவிற்கு சகோதரியொருவர் உண்டு. பெயர் மாயா. கருத்து வேறுபாடு காரணமாக தாயும், தந்தையும் விவகாரத்துப் பெற்றதை அடுத்து, ஏழு வயது கமலாவும், மாயாவும் தாயின் அரவணைப்பில் வளர்ந்தனர். தமது தாய் மீது கமலாவிற்கு அளவு கடந்த பாசம். இன்று தாம் அடைந்துள்ள உயரங்களுக்கு தாயே காரணம் என்பார், அவர். தாயை சுப்பர் ஹீரோவாக வர்ணிப்பார். பிறந்தது, இந்தியாவில். புலம்பெயர்ந்தது, அமெரிக்காவில். இல்லற பந்தத்தில் இணைந்தது, ஜமெய்க்காவைச் சேர்ந்த ஒருவருடன். வாழ்;ந்தது, கறுப்பின உரிமைப் போராட்டங்கள் தீவிரம் பெற்றிருந்த பின்புலத்தில். அந்தத் தாய்க்கு அடையாள நெருக்கடிகள் இருந்தன. அனைத்தையும் சமாளித்து வளர்த்தார். பிள்ளை வளர்ப்பில் தந்தையின் மரபுரிமைகளை கைவிடவில்லை. கறுப்பின கலாசாரத்தை மறக்கவில்லை. இந்திய பின்புலத்தையும் புறக்கணிக்கவில்லை.
இன்று கமலா ஹாரிஸ் பற்றி பேசும் அமெரிக்க ஊடகங்கள், அவரை கறுப்பின அமெரிக்கர், ஆசிய-அமெரிக்கர், தெற்காசிய-அமெரிக்கர், இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண் என்று பலவிதமாக குறிப்பிடுகின்றன. தமிழ்ப்பெண் என்ற அடையாளம் பற்றி அதிகம் பேசப்படுவதாகத் தெரியவில்லை. சகல அடையாளங்களுடனும் பொருந்திப் போகக்கூடியவராக கமலா ஹாரிஸ் திகழ்வது அவரது சிறப்பம்சம். கமலா ஹாரிஸின் தமிழ் அடையாளம் பற்றிப் பேசுகையில், இட்லியின் பால் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை அமெரிக்க ஊடகங்கள் சிலாகின்றன.
இந்த அடையாளத்தைத் தாண்டிய பிணைப்பு பற்றி பேசுவதில் இந்திய ஊடகங்களுக்கு பெருமை அதிகம். நாம் இந்தியர்களாக இருப்பதற்காக பெருமைப்பட வேண்டும் என்ற உணர்வை சென்னையில் வாழும் தாய்வழி உறவினர்கள் தமக்குள் ஊட்டி ஊட்டி வளர்த்ததாக கமலா ஹாரிஸ் அம்மையார் கூறுவார். குறைந்தபட்சம் இரு வருடங்களுக்கு ஒரு தடவையாவது சென்னை சென்று உறவினர்களுடன் உறவாடி மகிழ்வது தமது வழக்கமென அவர் பெருமைப்படுவார் தமது ‘தாய்மொழி’ பற்றிய கமலாவின் உணர்வலைகள், அவர் எழுதிய குறிப்பேடுகளில் வெளிப்படுகின்றன. உணர்வுபூர்வமான சந்தர்ப்பங்களில், அன்போ, வெறுப்போ தொனிக்க தாய் பேசினால், அந்த வார்த்தைகள் தமிழாகவே இருக்கும் என்று எழுதுகிறார், கமலா அம்மையார்.
தாயின் உணர்வுகள் தூய்மையானவை. அந்த உணர்வுகளையே பெரும்பாலும் தாயுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதாகக் கூறி, தமிழுக்கும் தமக்கும் உள்ள பந்தத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அவ்வளவு தான். கமலாவின் தமிழ் அடையாளம் இந்தியர்களையும், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் புளங்காகிதம் அடையச் செய்யலாம்.ஆனால், அது அமெரிக்க வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கும் அளவிற்கு அமெரிக்க மண்ணில் ஈர்ப்பைத் தருமா என்பது சந்தேகமே.
அடையாளங்களைத் தாண்டிய திறமையும் திடசங்கற்பமும், கமலா அம்மையாருக்கு அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது என்பதே உண்மை. 2012 இல் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கமலா அம்மையார் பேசியபோது, அவரது ஆற்றல் வெளிப்பட்டது. ஒபாமாவே பாராட்டினார்.இந்தப் பெண் அதீத திறமைசாலியாக இருக்கிறாள், உரமானமானவளாக இருக்கிறாள் என்றார். ஒரு வருடம் கழித்து, கமலா ஹாரிஸின் தோற்றப்பொலிவு பற்றி பேசாமல் விட்டேனே என்று ஆதங்கப்பட்டார், ஒபாமா.
நான்கு வருடங்கள் கழித்து, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஹிலரி கிளின்டன் தோல்வி கண்டதைத் தொடர்ந்து, கமலா அம்மையார் செனட் சபைக்குத் தெரிவானார். அதிலும் சாதனைகள். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை அங்கத்தவராக, அவர் சாதித்தவை ஏராளம். பொது உரிமைகளுக்காக வலுவாகப் போராடினார். சகலருக்கும் திருமண உரிமைகள், கருச்சிதைவு உரிமைகள் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
அமெரிக்க பொலிஸ் துறையை மறுசீரமைத்து, சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கோஷத்துடன் செனட் சபையில் வாதிட்டார். வீதிகளில் இறங்கிப் போராடினார். டொனல்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்காரர்களை விட்டு வைக்கவில்லை. ட்ரம்ப்பின் கொள்கைகளை மிகத் துணிச்சலாக விமர்சித்த அரசியல்வாதிகளில் கமலா ஹாரிஸ் அம்மையார் முதன்மையானவர். தமது தந்தையின் மரபணுக்கள் மூலம் தமக்குக் கிடைத்த கறுப்பின அடையாளம், இவ்வாண்டு கமலா ஹாரிஸ் அம்மையாருக்கு வலுவாகத் துணை புரிந்தது.
கடந்த மே மாதம் பொலிஸாரின் அடாவடித்தனத்தால், ஜோர்ஜ் ப்ளொயிட் என்ற கறுப்பின மனிதர் கொல்லப்பட்ட விவகாரம். அமெரிக்காவின் இன ஒதுக்கல் வரலாற்றில் தீர்க்கமான திருப்புமுனையாகத் திகழ்ந்து, இனம் பற்றிய கருத்தாடல்களைத் தீவிரப்படுத்தியிருந்தது. படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் வொஷிங்டனில் அலையாகத் திரண்டபோது, அவர்களுடன் கமலா ஹாரிஸ் அம்மையார் இணைந்து கொண்டார். அரசியல் அரங்கில் தீவிரமாக இறங்கி, பொலிஸ் துஷ்பிரயோகங்களுக்கு முடிவுகட்ட ஜனநாயகக் கட்சி முன்னெடுத்த முயற்சிகளை வழிநடத்தினார்.
பொலிஸ் துறையை மறுசீரமைப்பதற்காக ட்ரம்பின் குடியரசு கட்சி சமர்ப்பித்த யோசனைகளுக்கு அவர் மாற்று யோசனையை முன்வைத்தார்.
இவரது முயற்சியை ஜோர்ஜ் ப்ளொயிட்டின் குடும்பமும் பாராட்டியது. இந்தக் குடும்பத்தின் சார்பாக வாதிட்ட சட்டத்தரணி, கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாவதை விரும்புவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டார். அமெரிக்காவின் அரசியல் அரங்கில் கமலா ஹாரிஸ் என்ற பெயர் அங்கீகாரம் பெற்றமைக்கு இதுவும் ஒரு காரணம்.
ஜோர்ஜ் ப்ளொயிட் விவகாரம், அமெரிக்காவில் தீர்க்கமானதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குடியரசுக் கட்சியின் பிரசாரப் பாதையை தீர்மானிக்கும் தொடக்கப்புள்ளியாகவும் மாறியுள்ளது. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் கறுப்பின மக்கள் மீது கவனம் செலுத்தக்கூடிய எவரேனும் தேவை என ஜோ பைடன் மீது அழுத்தம் தொடுக்கப்பட்டதாகவும், அதனால் அவர் கமலா ஹாரிஸை தெரிவு செய்ததாகவும் பரவலாகக் கூறப்படுகிறது.
இங்கு முக்கியமானதொரு விடயம் உள்ளது. இந்தத் தேர்தலில் ஜோ பைடனும், கமலா ஹாரிஸ_ம் வெற்றி பெறுவதாக வைத்துக் கொள்வோம். ஜோ பைடன் அடுத்த தடவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவருக்கு 77 வயதாகிறது. எனவே, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிடப் போவது கமலா ஹாரிஸ் தான்.
அமெரிக்கர்கள் இம்முறை ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கும் வாக்குஅடுத்த தடவை கமலா ஹாரிஸ் ஜனாதிபதி பதவியை நோக்கி பயணிக்க கதவுகளைத் திறக்கும். அந்தப் பயணத்தில் அவருக்கு கறுப்பினத்தவர் என்ற அடையாளம் ஒரு வரமாக இருக்கும். வெற்றி பெற கறுப்பின அடையாளம் தடையில்லை என்பதை பராக் ஒபாமா நிரூபித்துள்ளார்.
இந்திய அடையாளம் கமலா ஹாரிஸிற்கு எந்தளவு உதவப் போகிறது என்பது சந்தேகமே. அவர் இந்திய அமெரிக்கராக அல்லது தமிழராக இருப்பாரா என்பதையும் அறுதியாகக் கூற முடியாது.
ஒரு தடவை கிரண்ஜீத் என்ற பெண் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டார். தம்மை அமெரிக்கராக அடையாளப்படுத்திக் கொண்டார். நீங்கள் அமெரிக்கராக இருந்தால், உங்கள் மகளுக்கு எப்படி இந்;தியப் பெயர் வரலாம் என்று வாக்காளர்கள் கேட்டார்கள். கிரண் ஜீத் தோற்றார்.
அடுத்தமுறை இந்திய அடையாளத்துடன் களமிறங்கினார். இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் துயரங்கள் பற்றிப் பேசினார். மீண்டும் தோற்றார். கிரண் ஜீத்திடம் கூடுதலாக வெளிநாட்டு வாசனை வெளிப்படுகிறது என்பதால், அவரை வாக்காளர்கள் நிராகரித்ததாக அரசியல் அவதானிகள் கூறினார்கள்.
அடுத்ததாக, லூசியானா மாநில ஆளுனர் பொபி ஜிந்தால். இந்த மாநிலம் பழமைவாதக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதாகும். இதில்; பாபி ஜிந்தால் அரசியல்வாதியாக வெற்றி பெற கடந்த காலத்தைத் துறக்க வேண்டியிருந்தது. தாம் இநதிய-அமெரிக்கர் அல்ல, அமெரிக்கர் என்று வலியுறுத்தவும் வேண்டியிருந்தது. பியுஷ் என்ற பெயரை பாபி என்று மாற்றிக் கொண்டார். கிறிஸ்தவத்தைத் தழுவினார். சமூக வலைதளங்களில் கேலி செய்தார்கள். ட்விற்றரில் ‘இதோ பார்றா, பாபி அதீத வெள்ளையராக மாறி விட்டார் ()‘ என்று பதிவிட்டார்கள்.
அமெரிக்கா வந்தேறு குடிகளின் தேசம். அங்கு பூர்வீக பழங்குடிகளாக வாழும் மக்களுக்கு இல்லாத அமெரிக்கத்தனம், ஐரோப்பாவில் இருந்து குடிபெயர்ந்த வெள்ளையர்களுக்கு உண்டு. அவர்களைப் பொறுத்தவரையில், தாமே அமெரிக்கர்கள். ஆபிரிக்க நாடுகளில் இருந்தோ, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்தோ, ஆசிய நாடுகளில் இருந்தோ அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களுக்கு அமெரிக்க அடையாளத்தை வழங்குவதில், ஐரோப்பிய அமெரிக்கர்களுக்குத் தயக்கம் உண்டு.
கமலா அம்மையாரையே எடுத்துக் கொள்வோம். அவர் சேலை அணிந்து பொட்டு வைத்தால் தமிழராக பார்க்கப்படுவார். அந்தக் கண்ணோட்டம் காரணமாக, அவருக்கு அமெரிக்கர் என்ற அடையாளம் மறுக்கப்படும் சாத்தியம் இருப்பதை நிராகரிக்க முடியாது.
இங்கு இனத்துவ அடையாளமும், அரசியல் சார்புநிலையும் கண்காணிக்கப்படும். குமலா ஹாரிஸ் அம்மையார், தாம் கறுப்பினத்தவர், இந்திய வம்சாவளித் தமிழர் என்ற அடையாளங்களைத் தாண்டி, ஜனநாயகக் கட்சியின் பெறுமானங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டும். கட்சி தான் முக்கியம்.
ஜனநாயகக் கட்சியின் பெறுமானங்கள் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கின்றன. சகலருக்கும் சம உரிமையைக் கோரி நிற்கின்றன. மறுபுறத்தில், ட்ரம்பின் குடியரசு கட்சி பழமைவாத கோட்பாடுகளுடன் வந்தேறு குடிகளை நிராகரிக்கிறது.
ஐரோப்பா அல்லாத நாடொன்றில் இருந்து அமெரிக்காவில் குடியேறி அரசியல் செய்ய விரும்பும் ஒருவரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவர் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிட்டால், தமது வேர்களை மறைத்து மிகவும் கவனமான முறையில் அமெரிக்கத் தனத்தை வெளிப்படுத்த வேண்டும். ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பட்சத்திலும் அதே கவனத்துடன், தமது உரிமைப் போராட்டங்கள் பற்றி எடுத்துக் கூற வேண்டும்.
இந்தியராயின்,தமது மூதாதையரின் சுதந்திரப் போராட்ட வீரப்பிரதாபங்களைக் கூறலாம். அதுவும் எல்லை மீறக்கூடாது. மூதாதையரிடம் இருந்து தமக்குக் கிடைத்த உரிமைப் போராட்ட உணர்வை அமெரிக்க அரசியலுடன் கவனமாகப் பொருத்திக் கொண்டு, அதனை அமெரிக்க நலனுக்காக பயன்படுத்தப் போகிறேன் என்று கூற வேண்டும்.
இந்தக் கட்டமைப்பிற்குள் சிங்கப்பூர், கயனா, மொரிஷீயஸ், பிஜி போன்ற நாடுகளில் உயர்மட்ட அதிகார பீடங்களில் அமர்ந்திருந்த தமிழர்கள் போன்று கமலா ஹாரிஸ் அம்மையார் செயற்பட முடியாது. அவர் நிதானமான போக்கை அனுசரிக்க வேண்டும்.
எனவே, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹாரிஸ் அம்மையார் வகுக்கும் வியூகத்திற்குள் அவரது தமிழ் அடையாளத்தை எதிர்பார்க்க முடியாது எனலாம்.
அவர் வெற்றி பெற்றால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தில் தமிழர் ஒருவர் ஆட்சிபீடத்தில் அமரக்கூடிய வழி பிறந்து விட்டது என்று சந்தோஷப்படலாம்.
ஒருவருக்குத் திறமை இருந்தால், தகுதியானவராகத் திகழ்ந்தால், அவரது சிறுபான்மை அடையாளம் பற்றி கவலைப்படால், அவரை உச்சத்தில் அமர்த்தக்கூடிய ஜனநாயக ஆட்சி நிர்வாக முறையையும், பன்முகக் கலாசாரத்தை மதிக்கும் சமூகங்களைக் கொண்ட நாடுகளும் உள்ளன என்பதை தமிழர்கள் கொண்டாடவும் முடியும். இந்திய, இலங்கை தமிழர்களாயின் சற்று காழ்ப்புணர்ச்சியும் இருக்கும் தான். அதைத் தவிர்க்க முடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM