(நா.தனுஜா)
நாட்டின் பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்களைத் தயாரிக்குமாறும், அதனை முன்கூட்டியே திட்டமிடுவதன் ஊடாக மாத்திரமே எம்மால் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல முடியும் என்றும் கடந்த 5 வருடகாலப்பகுதியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ எமக்கு அறிவுறுத்தியிருந்தார்.
ஆகவே பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் இந்தப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் ஏற்கனவே சரியாக வகுக்கப்பட்டிருப்பதுடன், அவற்றைச் செயற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை நிச்சயமாக மேம்படுத்துவோம் என்று நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உறுதியளித்தார்.
புதிய அரசாங்கத்தில் நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி சீர்திருத்த இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்வத வழிபாடுகளைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்ற அவர், அதனைத் தொடர்ந்து அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டின் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் நான் இந்தப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்கின்றேன். பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச்செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். அதற்காக முதலில் அவர்கள் இருவருக்கும் நன்றி கூறுவதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் நிழல் போன்று அதன் பின்னாலிருந்து வழிநடத்தியவருமான பசில் ராஜபக்ஷவிற்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
அடுத்ததாக மிகமுக்கியமான நாட்டுமக்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு முதலில் உறுதியான அரசாங்கமொன்று அவசியமாகும். அந்தவகையில் தமது வாக்குரிமையின் ஊடாக மக்களே இந்தப் புதிய அரசாங்கத்தைத் தெரிவுசெய்திருக்கின்றார்கள். அதனூடாகப் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
நாட்டின் பொருளாதாரம் கடந்த 5 வருடகாலத்தில் மிகப்பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்தது. கொவிட் - 19 வைரஸ் பரவலைத்தொடர்ந்து பொருளாதாரம் மேலும் பல சவால்களைச் சந்திக்கும் நிலையேற்பட்டிருக்கிறது. கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடுகளின் காரணமாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளத்தக்க செயற்திட்டங்களும் ஸ்தம்பிதமடைந்து போயிருந்தன.
இத்தகையதொரு நிலையிலேயே நாம் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்களை வகுத்திருக்கின்றோம். அவற்றை விரைவாக செயற்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. அதேபோன்று உலகநாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் தம்மோடு ஒன்றிணைந்து செயலாற்றுமாறு அழைப்புவிடுக்கின்றன. அவற்றோடு இணைந்து பணியாற்றும் அதேவேளை நாட்டின் தேசியத்துவத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்கான அடிப்படையைத்தான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவரது சுபீட்சமான எதிர்காலத்திற்கான கொள்கையின் ஊடாக முன்வைத்திருக்கின்றார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM