(செ.தேன்மொழி)
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பை உத்தியோகபூர்வமாக மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள வடிவேல் சுரேஸ் , மலையக மக்களை அடகுவைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு தான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
ராஜகிரியிவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் உத்தியோகப்பூர்வ பொதுச் செயலாளர் என்ற வகையிலே , இரு மாத தேர்தல் செயற்பாடுகளுக்கு பின்னர் மீண்டும் நான் சங்கத்தின் தலைமை காரியாலயத்திற்கு வருகைத்தந்தேன். தோட்ட தொழிலாளர்களின் சந்தா பணத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைமைகாரியாலயம் அமைந்துள்ள இடம் மற்றும் கட்டடம் கைமாறிவிடுமோ என்ற சந்தேகம் எமக்கு எழுந்திருந்தது.
கடந்த காலத்தில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கம் பல கசப்பான அனுபவங்களை பெற்றுக் கொண்டிருந்தது. அதற்கமைய காலி பகுதியில் அமைந்திருந்த காரியாலயம் 16 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு , 9 கோடி ரூபாவாகவே கணக்கு காண்பிக்கப்பட்டது. இது போன்று பலங்கொடை , பதுளையில் காணி , புஸல்லாவ பகுதியில் இருந்த காணி மோசடி செய்யப்பட்டுள்ளது. இவை தொடர்பான அனைத்து விடயங்களும் கணக்காய்வு அறிக்கையில் உறுதிச்செய்யப்பட்டுள்ளன.
தோட்ட தொழிலாளர்களின் சந்தா பணத்தை சங்கத்தின் முன்னைய அதிகாரிகள் மோசடி செய்துள்ளமை தற்போது தெளிவாகியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு என்னால் மீண்டும் சந்தரப்பத்தை பெற்றுக் கொடுக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி வங்கரோத்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியை , பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு மோசடியில் ஈடுபட்டு வந்தது.
இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைமை பொறுப்பிலிருந்து ஹரின் பெர்ணான்டோவையும் , பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து என்னையும் நீங்குவதாக ஐ.தே.க. தீர்மானம் எடுத்து , எமக்கு தடை உத்தரவை நியமிக்குமாறு குறிப்பிட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முறைப்பாடும் அளித்திருந்தது.
ஆனால் நீதி மன்றம் எங்களது செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் என்று உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய தலைமை காரியாலயத்திற்கு வருகைத்தந்தேன். இங்கு வந்து பார்த்தால் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. அதாவது, தலைமை காரியாலயத்தின் முன்னால் உள்ள ஒரு பகுதியை அருகில் காணப்படும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வாடகைக்கு கொடுத்து , இந்த பணத்தை கொண்டு சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் அவர்களது சகாக்களுக்கு விருந்துபசாரங்களை செய்துக் கொண்டு,சங்க உறுப்பினர்களின் சேமலாப நிதியையும் பெற்றுக் கொடுக்கமால் அதன் தலைவர்கள் செயற்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் செயற்குழுவின் அனுமதி எதுவும் இன்றி தனியான வங்கி கணக்கை திறந்து காசுகளை செலவு செய்துள்ளனர். வெறுமனே 3000 அங்கத்தவர்களையே இந்த சங்கம் கொண்டிருந்தது. எனது வருகையின் பின்னரே 27 ஆயிரம் அங்கத்தவர்கள் இணைந்துக் கொண்டனர். இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நவீன் திஷாநாயக்கவோ, ஆர். யோகராஜாவோ கிடையாது. அதன் நிர்வாக குழு உறுப்பினர்களும், அடிமட்டத்திலிருந்து சங்கத்தை உருவாக்கியவர்களுமே.
இவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பிலேயே நான் தற்போது இருக்கின்றேன். இங்கு இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் ராஜகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளேன். இந்நிலையில் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நான் கூறவிரும்புவது மலையக மக்களை எவரிடமும் அடகுவைப்பதற்கு நான் இடமளிக்க மாட்டேன். இது மலைய மக்களின் சொத்து.
கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் தமிழர் எவரும் உள்வாங்கப்படாமைக்கான காரணம் என்ன?
பதில்: ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பில் கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசவிடம் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எமது கட்சி இனம் , மத பேதம் என்ற பிரிவினையை கொண்டில்லாத கட்சி . அரசாங்கத்தை பொறுத்த மட்டில் தமிழ் உறுப்பினர்கள் குறைவாகவே தெரிவாகியுள்ளனர். அதனால் அவர்கள் தேசிய பட்டியல் ஊடாக வேட்பாளர்களை உள்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதேவேளை அவர்களிடம் 17 உறுப்பினர்களை தெரிவுச் செய்துக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்திருந்தது. ஆனால் எமக்கு 7 உறுப்பினர்களை மாத்திரமே தெரிவுச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. எமது கட்சியில் தமிழ் , முஸ்லீம் வேட்பாளர்கள் அதிகளவில் தெரிவாகியிருந்தமையினால், கட்சியில் தேசியப்பட்டியலில் ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த முக்கிய நபர்களை இணைத்துக் கொள்ள தலைவர் தீர்மானம் எடுத்துள்ளார்.
கேள்வி : மலையக மக்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் ஏதாவது கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றீர்களா?
பதில்: அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்த 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். தோட்டபுறவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதுடன் , அவர்களுக்கான நாங்கள் கொண்டுவந்த தனிவீட்டு திட்டத்தையும் செயற்படுத்த வேண்டும்.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM