(நா.தனுஜா)
சுயாதீன ஆணைக்குழுக்கள் ஊடாக மாத்திரமே சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்த முடியும். அதனையே நாம் பாதுகாப்பதற்கு முற்படுகின்றோம் என்று சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இம்முறை மக்கள் அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்வதற்காக இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
சுயாதீன ஆணைக்குழுக்கள் இருந்தால் மாத்திரமே சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்த முடியும். அதனையே நாம் பாதுகாப்பதற்கு முற்படுகின்றோம். அதேபோன்று இப்போது வேட்பாளர்களை விடவும் கட்சிகள் இருக்கின்றன. ஆகவேதான் இந்த விருப்புவாக்கு முறைமைக்குப் பதிலாக தொகுதிவாரி பிரதிநிதித்துவமுறை மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை ஆகியவற்றின் கலப்பின் அடிப்படையிலான தேர்தல் முறைமையைப் பரிந்துரை செய்கின்றோம்.
எதிர்வரும் பாராளுமன்றத்தில் இதுகுறித்து ஒரு இறுதி இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் என்று நம்புவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எனவே விருப்புவாக்கு முறைமையின் அடிப்படையில் நடைபெறுகின்ற இறுதித்தேர்தல் இதுவா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், தேர்தலில் விருப்புவாக்கு முறைமை தொடர்ந்தும் காணப்படும். எனினும் நாம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைமையின் கலப்பு முறைமை ஒன்றையே கோருகின்றோம்.
ஏனெனில் அதனை நடத்துவதும் மிகவும் இலகுவானதாகும். மிகப்பாரியளவிலான தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நடத்தவேண்டிய அவசியமில்லை. இலத்திரனியல் மற்றும் அச்சூடகங்களின் ஊடாக பிரசார விளம்பரப்படுத்தல்களை மேற்கொள்ள முடியும். எனவே எதிர்காலத்தில் கலப்பு முறையில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றேன். கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் இதுபற்றி கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. முக்கிய இரு கட்சிகளும் கலப்பு முறைமைக்கு உடன்பட்ட போதிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறிய கட்சிகள் மறுப்பைத் தெரிவித்திருந்தன.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் தற்போது ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய சவாலான கொரோனா வைரஸ் பரவலுக்கு எமது நாடும் முகங்கொடுத்திருக்கிறது. அந்த நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான யோசனைகளையும் செயற்திட்டங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே முன்வைத்திருக்கிறது. ஆகவே இவற்றைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையை மக்கள் எமக்கு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். அரசாங்கம் அமைக்கத்தக்க அளவில் பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுத்தருமாறு தான் நாம் கோருகின்றோமே தவிர, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரவில்லை என்றார்.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM