(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஏப்ரல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு எனது பணம் கிடைக்கப்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஒரு வாரத்துக்குள் தெளிவுபடுத்த வேண்டும் இல்லாவிட்டால் அவருக்கு எதிராகவும் குறித்த இணையத்தளத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பேன். இதுதொடர்பாக மான நட்டஈடு கடிதம் அனுப்பி இருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னிமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஏப்ரல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் உட்பட பயங்கரவாதிகளுக்கு என்னால் சட்டவிராேதமாக சம்பாதிக்கப்பட்ட பணம் கிடைக்கப்பெற்றுள்ளமை உறுதியாக இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்ததாக குறிப்பிட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. பொலிஸ் ஊடக பேச்சாளர் அவ்வாறு தெரிவித்தாரா என்பது எனக்கு தெரியாது.
என்றாலும் இந்த குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிப்பதுடன் பொலிஸ் ஊடக பேச்சாளர் இதுதொடர்பாக நாட்டுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்றும் நான் கோரிக்கை விடுக்கின்றேன். ஒருவாரத்துக்குள் ஊடக பேச்சாளர் இதுதொடர்பாக தெளிவுபடுத்தாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, மான நட்டஈட்டு கடிதம் அனுப்பி இருக்கின்றேன். அதேபோன்று குறித்த இணையத்தள நிறுவனத்துக்கும் மான நட்டஈட்டு கடிதம் அனுப்பி இருக்கின்றேன்.
எனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு தேர்தல் அண்மித்திருக்கும் நிலையில் எனது தேர்தல் பிரசாரங்களை முற்றாக இல்லாமலாக்கவும் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொடுக்க மேற்கொள்ளப்படும் சதித்திட்டமாகவே நான் பார்க்கின்றேன். எனது பணம் ஒரு ரூபாகூட இந்த பயங்கரவாதத்துக்கு செலவிடவும் இல்லை. குறித்த பயங்கரவாதிகளில் இன்சாப் இப்ராஹீம் என்ற வியாபாரி ஒவரை மாத்திரமே எனக்கு தெரியும். அவரைத்தவிர வேறு யாரையும் எனக்கு தெரியாது.
மேலும் இந்த பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் எனது சகோதரர் கடந்த மூன்றரை மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். அவர் எந்தவொரு பயங்கரவாத சம்பவத்துடன் சம்பந்தமில்லாதவர். ஆனால் இன்சாப் இப்ராஹிம் என்பவர் எனது சகோதரருக்கு 6 தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார். அவருடன் மேலும் 7பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 600தொலை பேசி அழைப்புகளை மேற்கொண்டவர் ஒரு மாதகாலத்தில் விடுவிக்கப்பட்டார்.
அதேபோன்று 256 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டவரை விசாரணைக்கு அழைத்த தினத்திலே விடுதித்தார்கள். அவர் மொட்டு கட்சிக்கு ஆதரவானவர். அவர் குண்டுதாரிகளான இன்சாப், இல்ஹாம் மற்றும் அவர்களது தந்தை இப்ராஹிம் ஆகியாேர்களுடன் தொலைபேசியில் உரையாடி இருக்கின்றார்.
ஆனால் எனது அரசியல் கொள்கை வேறுபட்டிருப்பதால் எனது சகோதரர் தொடர்ந்து மூன்றரை மாதங்களாக 4ஆம் மாடியில் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். ஆனால் இதுவரை அவருக்கு எதிரான குற்றங்கள் எதுவும் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றத்துக்கு முன் ஆஜர்படுத்தப்படாமல் இருக்கின்றது. எனவே நாட்டில் நீதி நிலைநாட்டப்படுவதால் இருந்தால் புலனாய்வுத்துறை நீதியாக செயற்படுவதாக இருந்தால் அவருக்கு எதிராக குற்றங்கள் இல்லை என்றால் அவரை விடுதலை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் எனது அமைச்சுக்கு கீழ் இருந்த நிறுவனங்களில் கைத்தொழில் அபிவிருத்திசபையும் ஒன்று. இந்த நிறுவனத்தினால் 100மெட்ரிக்தொன் பித்தளை இன்சாப் இப்ராஹிமின் நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுத்ததான குற்றச்சாட்டே எனக்கு எதிராக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அந்த நிறுவனத்துக்கு ஆயிரம் கிலோ பித்தளை பொருட்களை வழங்குமாறு தெரிவித்து 2017ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கைத்தொழில் அபிவிருத்திசபை தலைவருக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றது.
அதேபோன்று குறித்த நிறுவனத்துக்கு 500 மெட்ரிக்தொன் வழங்குமாறு தெரிவித்து, அதேவருடம் ஜுன் மாதம், மொட்டு கட்சியில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பனர் சாந்த பண்டாரவின் கையெழுத்துடன் கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது.
அத்துடன் மேலும் ஆயிரம் மெட்ரிக்தொன் குறித்த நிறுவனத்துக்கு வழங்குமாறு தெரிவித்து ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிக்கு 2017இல் கடிதம் அனுப்பி இருக்கின்றது. ஆனால் இந்த கடிதத்தின் பிரதி ஒன்றுகூட எனக்கு அனுப்பி இருக்கவில்லை.
அதேபோன்று ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தினால் ஆயிரம் மெட்ரிக்தொன் பித்தளை மற்றும் இதர மூலபொருட்கள் குறித்த நிறுவனத்துக்கு மாத்திரம் வழங்கி இருக்கின்றது. இதுதொடர்பகவும் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என நாங்கள் தெரிவித்திருக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM