(நா.தனுஜா)
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை அடிப்படையாகக்கொண்டே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படுவோரின் உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து, நாம் அரசாங்கத்துடன் டீல் ஒன்றைச் செய்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் குறிப்பிடுவது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாகவே இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதுகுறித்து இன்று புதன்கிழமை அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கின்ற போதிலும் 2020 பொதுத்தேர்தலில் கட்சியின் வெற்றியை முன்நிறுத்தி செயற்படாதவர்கள் மற்றும் வேறு கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டவர்கள், வேறு கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியவர்களின் உறுப்புரிமையை இரத்துச்செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று முன்தினம் தீரமானித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை அடிப்படையாகக்கொண்டே ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, இருசந்தர்ப்பங்களிலும் நீதிமன்றத்தினால் புறக்கணிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்கள் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருக்கமுடியாது என்பது தெளிவாகியிருக்கிறது. அதுமாத்திரமன்றி ஐக்கிய மக்கள் சக்தி என்பது வேறொரு தனிக்கட்சி என்பதும், அது இம்முறை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகப் போட்டியிடுகின்றது என்பதும் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக வெளிப்பட்டிருக்கிறது.
அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியையும், கட்சியின் கொள்கைகளையும் பாதுகாப்பதனை முன்நிறுத்தி ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படுபவர்கள் மற்றும் கட்சியின் வெற்றிக்காக உழைக்காதவர்களை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு மத்திய செயற்குழு தீர்மானித்தது. எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் டீல் ஒன்றைச் செய்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் குறிப்பிடுவது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாகவே இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திர நீதிமன்றம் உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாமல் செய்வதையே தற்போது அரசாங்கம் பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுவரும் நிலையில், அரசாங்கத்தின் அந்த நோக்கத்திற்கு உதவும் விதமாகவே ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுவதுபோல் தோன்றுகிறது. எதுஎவ்வாறெனினும் இவையனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கையில் ஐக்கிய மக்கள் சக்தி சட்டத்திற்கு முரணானதொரு கட்சி என்பதால், அது தனது உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அரசாங்கத்தின் தாளத்திற்கு ஏற்றவாறு ஆடுகின்றது என்பதே புலப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM