(ஆர்.யசி)
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும், அரசியல் அமைப்பு மூலமாக நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்ற கதைகளை கூறிக்கூறி தமிழர்களை எழுபது ஆண்டுகளாக ஏமாற்றிபிட்டனர். இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர் அழிவுகளை சந்திக்க ஒரு சூழல் உருவாக்கியதற்கு ஆட்சியாளர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக கூறுகின்றார். நாட்டில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் அனைத்தின் பின்னணியிலும் ஆட்சியாளர்களின் பங்களிப்பே இருந்தது எனவும் அவர் குற்றம் சுமத்துகின்றார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் நகர்வுகள், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தமது அரசியல் வேலைத்திட்டங்களை கொண்டுசெல்ல எடுக்கும் முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த குரல் எழும்பும் வேளைகளில் எல்லாமே ஆளும் தரப்பு அதற்கு இனவாத காரணிகளை கூறி மூடி மறைக்கவே சகல காலங்களிலும் முயற்சித்துள்ளனர். அதனை இந்த எழுபது ஆண்டுகளில் தோற்கடிக்க முடியாது போனமை குறித்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
இந்த நாட்டில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என அனைவரும் அளவுக்கு அதிகமாக நிம்மதியை, உடமைகளை, உயிர்களை இழந்துவிட்டனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வரும் வரையில் இந்த நாட்டில் அனைத்து மக்களும் இழந்தவையே அதிகமாகும். அவ்வாறு இருந்தும் யுத்தம் முடிவுக்கு வந்து குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது இந்த நாடு அமைதியாக சென்றுள்ளதா, ஆட்சியாளர்கள் அமைதியாக இந்த நாட்டினை கொண்டு சென்றார்களா என்ற கேள்வி உள்ளது.
யுத்தத்தின் பின்னர் 2013,2014 ஆம் ஆண்டு காலத்தில் இந்த நாட்டில் மீண்டும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனக்கலவரம் உருவாக்கப்பட்டது. பின்னர் கருக்கலைப்பு முயற்சிகள் என கூறிக்கொண்டு மீண்டும் இனக்கலவரம் உருவாக்கப்பட்டது. அண்மையில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது. இந்த குழப்பங்கள் அனைத்தின் பின்னணியிலும் ஆட்சியாளர்களே உள்ளனர் என்பதை பொறுப்புடன் நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
வேறு எவரும் இதில் பொறுப்புக்கூற முடியாது. இந்த நாட்டில் இனவாதம், மதவாதம் இல்லாத அரசியலை ஆட்சியாளர்களால் முன்னெடுக்க முடியாதுள்ளது. ஹாஜியார் கடை பிரியாணியை வாரத்திற்கு மூன்று தடவை உண்பதாக அரசியல் மேடைகளில் ராஜபக் ஷ கூறுகின்றார்.
ஆனால் அவரது அணி தெற்கில் சென்று முஸ்லிம் கடையில் உணவு உண்ண வேண்டாம் என்ற அரசியல் பிரசாரத்தை செய்கின்றனர். தமது ஆட்சிக் காலத்தில் 200 பள்ளிவாசல்களை புனரமைத்துக்கொண்டுத்ததாக ராஜபக் ஷ கூறுகின்றார். ஆனால் அவரது அணி தெற்கில் சென்று சிங்கள மக்களிடம் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களை அமைத்து மத்ததை பரப்புகின்றனர் என்ற பிரசாரத்தை செய்கின்றனர்.
இந்த நாட்டில் அரசியல் தீர்வு கிடைக்கும், அரசியல் தீர்வு வழங்கப்படும், அரசியல் அமைப்பின் மூலமாக தீர்வுகள் சாத்தியம் என மிக நீண்ட காலமாக கதைகளைக் கூரிக்கொறி தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டனர். இனியும் அதே ஏமாற்றுக் கதையை எத்தனை ஆண்டுகளுக்கு தமிழர்கள் நம்பத் தயாராக உள்ளனர் என்பது மட்டுமே எமது கேள்வியாக தமிழர்கள் மத்தியில் முன்வைக்கின்றோம்.
இந்த நாட்டில் பிளவுக்கோ, பிரிவினைக்கோ இடமில்லை என்பதை சகல மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனால் ஆட்சியாளர்கள் இன்னமும் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றமையே அனைத்து சிக்கல்களுக்கும் காராணமாகும். அரசியல் தீர்வு என்பது புத்தகத்தில் எழுதி அச்சுப்பதித்து கைகளில் கொடுப்பதால் நிரந்தரமான தீர்வு எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை.
தமிழர்களை அவர்களில் கலாசார, சமய, மத, நம்பிக்கைகளுக்கு அமையவும் அரசியல் அபிலாசைகளுக்கு அமையவும் சுயமாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும். அது வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் தேசிய கொள்கைக்குள் அவர்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய சூழலை அவர்களே ஏற்படுத்திக்கொள்வார்கள்.
ஆட்சியாளர்களுக்கும் இனவாத அரசியல் வாதிகளுக்கும் நாம் கூறிக்கொள்வது ஒன்றுதான். தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீக மக்கள். சிங்களவர்களுக்கும் ஏனைய மதத்தவருக்கும் இருக்கும் அதே உரிமை தமிழர்களுக்கு இந்த மண்ணில் உள்ளது என்பது நினைவில் வைத்து ஆட்சி செய்ய வேண்டும். அதேபோல் தமிழர் அரசியல்வாதிகளும் இந்த நாட்டில் சிங்கள முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழும் அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்.
இது இரண்டுமே நடக்காதவிடத்து பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் ஆட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் இனவாதத்தை உருவாக்கும் அரசியல் நோக்கத்திற்காக அல்ல. மாறாக இனவாதம் இல்லாத சகலரும் சமமாக மனிதர்களாக நடத்தக்கூடிய சூழல் ஒன்றினை உருவாக்கிக்கொடுக்கவே எனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM