தமிழ் பேசும் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று மொட்டு அணியினர் தேசியப் பட்டியலின் ஊடாக நியமிக்கும் ஒருவரை ஏற்றுக் கொள்ள தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "மொட்டு அணியினர் , உண்மையாகவே தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றால் கொழும்பு மாவட்டத்தில் அவர்களை தேர்தலில் களமிறக்கியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதை விடுத்து தேசியப் பட்டியலில் வரக்கூடிய உறுப்பினர்களை தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் என்றும் அவர்கள் மக்களின் பிரச்சினைகளை தேடியறிந்து தீர்த்து வைப்பாளர்கள் என்றும் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல.
'தேசியப்பட்டியலில் தமிழ் பேசும் மக்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்போம், எனவே, எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மொட்டு அணியினர் கூறுவது கேலிக் கூத்தான விடயம்.
மொட்டு அணியினர் யாசகம் இடுவது போன்று வழங்கும் விடயங்களை காவிச் செல்லும் அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் தாழ்ந்து போய் விடவில்லை.
தமிழர்களுக்கென்று உரிமை மற்றும் சுய கௌரவம் இருக்கின்றது. அதேபோன்று தமிழ் மக்களுக்கான விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன.
மக்களின் உணர்வுகளையும், விருப்பு வெறுப்புகளையும் உணர்ந்துதான் இங்கிருக்கின்ற அனைத்து அரசாங்கங்களும் செயற்பட வேண்டும்.
அதைவிடுத்து ஆட்சி செய்பவர்களுக்கு தேவையென்றால் தமிழர்களை பயன்படுத்துவதற்கும் பின்னர் தூக்கியெறிவதற்கும் அவர்கள் அந்நிய இனத்தவர்கள் அல்ல. தமிழ் பேசும் மக்களும் இலங்கையர்கள் என்ற ரீதியில் எங்களுக்கான உரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தை ஆட்சியாளர்கள் உரியமுறையில் வழங்க வேண்டும்.
இன்று எங்களுடைய பிரதிநிதிகளையே எமக்கு தெரிவு செய்ய முடியாத அளவிற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள் என்றால் இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் தமிழ் பேசும் சமூகத்திற்கு ஏதேனும் அனுகூலங்களை ஒருபோதும் வழங்கப்போவதில்லை. இதன்மூலம்
தமிழர்கள் தொடர்ச்சியாக தங்களின் இருப்பில் இருந்து தாழ்ந்து கொண்டு செல்வதை உணர முடிகிறது.
இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களும் சுய கௌரவத்துடனும், சமவுரிமைகளுடனும் ஒரு குடையின் கீழ் வாழ்வதற்கே விரும்புகின்றார்கள்.
அந்த அடிப்படையில் 13 வது திருத்தச் சட்டத்திற்கு உடன்படமாட்டோம் என்று பேசுகின்ற அளவிற்கு ஓர் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது.
தற்போது அதனைவிட ஒருபடி மேல் சென்று 'தமிழர்கள் தமக்கான பிரதிநிதிகளையே தெரிவு செய்ய வேண்டாம் நாங்கள் உங்களுக்கான பிரதிநிதிகளை வழங்குகிறோம்' என்று கூறுகின்ற அளவிற்கு தமிழ் மக்களின் நிலையை மாற்றிவிட்டார்கள். இதனை தமிழ்பேசும் மக்கள் சரியாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
மொட்டு அணியினர் சார்பில் தேசியப்பட்டியலில் நியமிக்கப்படும் பிரதிநிதியே தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு தமிழர்கள் தங்களின் மீசைகளை இழந்துவிடவில்லை.
தமிழன் இன்னமும் மீசை வைத்த தமிழனாகவே இருக்கிறான்.
தமிழர்களை தொடர்ந்தும் முட்டாள்களாக்கும் முயற்சிக்கு நாங்கள் ஒருபோது இடமளிக்கமாட்டோம்.
அதேவேளை, தமிழர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும். இம்முறைத் தேர்தலில் பிரிவினைவாத அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடத்தை தமிழ் பேசும் மக்கள் புகட்ட வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.
அதேவேளை பிரிவினைவாத அரசியல் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய எச்சரிக்கையாகவே இதனை நாம் கருத வேண்டும்.
இந்த எச்சரிக்கையை வெறுமனே பணத்திற்காகவும், வேறு சலுகைகளுக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.
ஆகவே எங்களுக்கான உரிமை மற்றும் சுயகௌரவத்தை இழந்துவிட்டு தலைக்கு முக்காடு போட்டுகொண்டு மறைத்து செல்லும் அளவிற்கு நாம் ஒன்றும் பின்தள்ளப்படவில்லை என்றும் கலாநிதி வி.ஜனகன் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM