-பி.மாணிக்கவாசகம்
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை தொடர்ச்சியாக மறுத்து வந்த பேரின ஆட்சியாளர்களின் பிடிவாதப் போக்கே இலங்கையை அமைதியிழந்த நாடாக – அமைதியற்ற நாடாக்கி உள்ளது. அந்த அமைதியின்மையின் அடையாளங்களில் 1983 கறுப்பு ஜுலை வன்முறைகள் மிக முக்கிய வன்முறையாகப் பதிவாகி இருக்கின்றன.
இந்த நாட்டின் பாரம்பரிய வரலாற்று உரிமையைக் கொண்ட குடிமக்கள் என்ற ரீதியில் தமது உரிமைகளுக்காக தமிழ் மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றார்கள். அவர்களுடைய சாத்வீகப் போராட்டம் தோல்வி அடைந்ததனாலும், இணக்கப் பேச்சுக்களும், பேச்சுவார்த்தைகளும், பேச்சுக்களின் பின்னர் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் தோல்வி அடைந்ததன் விளைவாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க நேர்ந்திருந்தது.
தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான இனப்பிரச்சினையை அரசியல் வழிமுறையில் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் எவருமே முற்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது சில கண்துடைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவே தவிர அரச தரப்பில் எவரும் இதய சுத்தியுடனும், தேசப்பற்றுடனும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வரவில்லை.
மாறாக அரச பயங்கரவாதத்தையே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கானதோர் உத்தியாகக் கடைப்பிடித்திருந்தனர். இன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அடித்து நொறுக்கி தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி இரண்டாந்தரக் குடிமக்களாக்குவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சிங்களம் மட்டுமே என்ற இனவாதச் சட்டத்தைக் கொண்டு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் ஆட்சி தொடக்கம், எவரும் தனிநாடு கோர முடியாது என ஆறாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜயவர்தன வரையிலான ஆட்சியில் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் பகிரங்கமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.
முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவின் சிங்களம் மட்டும் என்ற மொழிவாத இனவாத சட்டத்தினால் உருவாகிய வன்முறையில் தமிழ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் எரித்தும், கொதிக்கும் தார் பீப்பாய்களில் தூக்கிப் போடப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். எண்ணற்றவர்கள் உடைமைகளையும் உறைவிடங்களையும் இழந்து அகதிகளாகினார்கள்.
ஆறாத சோகம் மாறாத துயரம்
முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜயவர்தனவின் ஆட்சியில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அரசியல் வழியில் தீர்க்கமான திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அரங்கேற்றப்பட்டது. இந்த வன்முறைகள் ஒரு வார காலம் நீடித்தன. இதில் தமிழ் மக்களின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டது. வீடுகள் தொழிற்சாலைகள், உற்பத்தி இடங்கள் என்பன முழுமையாகத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
நாலாயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பேர் சொந்த இருப்பிடங்களையும் வசிப்பிடங்களையும் இழந்து அகதிகளாயினர். தலைநகர் கொழும்பில் இருந்தும், அதன் சுற்றயல் பிரதேசங்களில் இருந்தும் நாட்டின் முக்கிய பிரதேச நகரங்களில் இருந்தும் தமிழ் மக்கள் அடித்து நொறுக்கி, வடமாகாணத்தை நோக்கியும் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நாடியும் ஓடுமாறு துரத்தப்பட்டார்கள்.
இந்த 1983 கறுப்பு ஜுலை வன்முறை தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான அரச பயங்கரவாதமாகவும், ஆட்சியாளர்களின் மிக மோசமான இன அழிப்பு நடவடிக்கையாகவும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக ஏதிலிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற யதார்த்தத்தை உலகுக்கு கறுப்பு ஜுலை வன்முறைகளே பறைசாற்றின. பேரினவாதிகளாகிய சிங்கள அரசியல்வாதிகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் அடியாட்களுமாகிய சிங்களவர்களும் எந்த அளவுக்குக் கொடுமையானவர்கள், கொடூரமானவர்கள் என்பதை இந்த வன்முறைகள் வெளிப்படுத்தின.
கறுப்பு ஜுலை வன்முறைகள் இடம்பெற்று மூன்றரை தசாப்தங்களுக்கும் மேலாகின்றன. ஆனால் அந்தக் கொடுமைகளின் மன வடுக்கள் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத புண்களாக இன்னும் படிந்திருக்கின்றன. முப்பத்தேழு வருடங்கள் கழிந்த பின்னரும் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி அந்தப் பாதிப்புகளுக்கு உள்ளாகிய குடும்ப உறுப்பினர்களின் மனங்களில் ஆறாத சோகமாக ஆற்ற முடியாத துயரமாகவே இன்னும் தொடர்கின்றன.
உயிருக்காகப் போராடிய அந்த வன்முறைத் தருணங்களின் காட்சிகள் இன்னும் பலருடைய மனங்களில் தத்ரூபமாக நிழலாடுகின்றன. அவற்றை எண்ணுந்தோறும் அவர்கள் ஆறாத துயரங்களுக்கு ஆளாகின்றார்கள்.
பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வன்மம்
யாழ்ப்பாணம் தின்னவேலி தபால் பெட்டிச் சந்தி - 1983 ஆம் ஆண்டு ஜுலை 22 ஆம் திகதி நள்ளிரவு நேரம். விடிந்தால் 23 ஆம் திகதி. பலாலியில் இருந்து யாழ் நகரை நோக்கி வந்த இராணுவ வாகனத் தொடரணி மீது விடுதலைப்புலிகள் நடத்திய கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவமே கறுப்பு ஜுலை வன்முறைகளுக்கு முக்கிய காரணம் என பொதுவாகக் கூறப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல. தனிநாட்டுக் கோரிக்கையை ஆணையாகக் கொண்டு 1977 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அடைந்த வெற்றியும், அதன் மூலம் தமிழ் மக்கள் அரசியல் போராட்ட ரீதியில் கொண்டிருந்த எழுச்சியை அடக்கி ஒடுக்குவதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் கங்கணம் கட்டியிருந்தார்கள்.
அது மட்டுமல்லாமல், தனிநாடு கோரி தேர்தலில் அமோக வெற்றியீட்டி நாட்டின் எதிர்க்கட்சியாகப் பரிணமித்திருந்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும் என்று அன்றைய ஆட்சியாளர்கள் மத்தியில் எழுந்திருந்த வன்மமும் கறுப்பு ஜுலை வன்முறைக்கான அடித்தளமாகும்.
தனிநாடு கோரி அரசியல் ரீதியாக பெற்றிருந்த எழுச்சிக்கு மத்தியிலும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட முக்கிய தமிழ்த்தலைவர்களைத் தம்வசப்படுத்திய அன்றைய ஜனாதிபதி ஜேஆர் ஜயவர்தன, அவர்களை மாவட்ட அபிவிருத்திச் சபை முறையிலான ஆட்சி முறைமைக்கு இணங்கச் செய்திருந்தார்.
இதனையடுத்து 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தையாவது கைப்பற்றி அரசியல் ரீதியாக அங்கு கால் ஊன்றிவிட வேண்டும் என்று ஜயவர்தன கடும்போக்கில் செயற்பட்டிருந்தார். அதன் விளைவாகவே அமைச்சர்களின் தலைமையிலான குண்டர்களினாலும் விசேட பொலிஸ் அணியினராலும் யாழ் நூலகம் எரியூட்டி அழிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் இல்லத்திற்கும், ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. யாழ் நகரத்தையும், புறநகர்ப்புறங்களையும் அந்தக் குண்டர்கள் எரித்து அழித்தார்கள். பலர் கொல்லப்பட்டனர்.
யாழ் வன்முறைகளைத் தொடர்ந்து கொழும்பிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் தமிழர்கள் மீது குறிப்பாக வர்த்தக சமூகத்தினர் மீதான பொருளாதாரம் மற்றும் இன அழிப்புக்கான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM