ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழான நல்லாட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலும் இலங்கை மீதான சர்வதேசத்தின விசுவாசம் வலுவடைந்துள்ளதென தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர, இறுதி யுத்தத்தின் போது கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளஸ்டர் குண்டுகள் பாவித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் பாவித்திருந்தால் அது பாரதூரமான குற்றமாகும் என்றார்.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடரில் இலங்கை சார்பாக பங்குபற்றிய அமைச்சர் மங்கள் சமரவீர, கடந்த வெள்ளிக்கிழமை நாடு திரும்பினார்.
இந்நிலையில் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பில் விளக்கமளிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த அவர்,
ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கையின் கடந்தகால தற்போதைய மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மனிதஉரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் அரசாங்கம் சார்பில் எமது நிலைபாடுகளை நான் தெரிவித்தேன்.
சிவில் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
ஜெனிவாவில் இடம்பெற்ற உபகுழுக் கூட்டங்களின் போது சமூக பிரதிதிகள், சமூக ஆர்வலர்களை சந்தித்து கலந்துரையாடினேன். இவர்கள் எமக்கு பல ஆலோசனைகளை வழங்கியதோடு இலங்கை செயற்பாடுகளுக்கு வரவேற்பளித்தனர்.
நன்றி தெரிவித்த கடும்போக்குவாதிகள்
இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் செயற்பட்டு வரும் கடும்போக்குவாதிகள் சிலரை சந்தித்தேன். கடந்த காலங்களில் இவர்களின் கருத்துக்களை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் யாரும் கேட்க தயாராக இருக்கவில்லை. ஆனால் இம்முறை இவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். முதல் தடவையாக எமது நிலைப்பாடுகளை கேட்டமைக்காக அவர்கள் நன்றி தெரிவித்தனர். இதன் மூலமே நல்லிணக்க செயற்பாடுகள் வளர்வதாகவும் குறிப்பிட்டனர்.
விமர்சகர்களுக்கு அழைப்பு விடுத்தேன்
சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக விமர்சனங்கள் செய்பவர்களை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். கடந்த ஒன்றரை வருடத்தில் நாம் மேற்கொண்ட ஜனநாயக செயற்பாடுகளை இலங்கைக்கு விஜயம் செய்து அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களுடன் கலந்துரையாடி பின்னர் உங்கள் விமர்சனங்களை முன்வைக்கலாம்.
இலங்கை மீதான நம்பிக்கை அதிகரிப்பு
சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை மீது இருந்த நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது. கடந்த காலங்களில் இலங்கைக்கு கிடைக்கத் தவறிய முக்கியதுவம் தற்போது கிடைக்க செய்துள்ளளோம். ஜெனீவா கூட்டத்தொடரின் போது பல உலகநாடுகள் எமது ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்றதோடு வாழ்த்தும் தெரிவித்தன. இதன் மூலம் நாங்கள் சர்வதேசத்தை வெற்றி கண்டுள்ளோம்.
வெடி வைக்கும் காலம் முடிவடைந்துள்ளது
அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது ஆட்சியாளர்களுக்கு எதிராக விமர்சனங்களையோ அல்லது குற்றங்களை முன்வைப்பவர்கள் மீது வெடி வைக்கும் காலம் முடிவடைந்துள்ளது. எம் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அது உண்மையானதா அல்லது பொய்யானதா என ஆராய்ந்து பார்ப்போம். அதன் பின்னரே எமது நிலைப்பாடு தொடர்பில் அறிவிப்போம்.
சர்வதேசத்துக்கு பயப்படவில்லை
சர்வதேசத்துக்குப் பயந்து நாங்கள் ஜெனிவா கூட்டத்தொடருக்கு தயாராகவில்லை. நாட்டின் சுயாதீனம் மற்றும் நீதியை நிலைநாட்டவும் எமது ஜனநாயகம், நல்லிணக்கம், மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்து சர்வதேசத்தின் நன்மதிப்பை பெறவே நாம் செயற்பட்டோம்.
நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் சர்வதேசத்துடன் தொடர்புகளை வைத்துக்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழ் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பிலான ஒருங்கிணைப்பு செயலகம் அமைச்சரவை அந்தஸ்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு விளக்க முடியும்.
ரணில் - மைத்திரி நெருங்கிய நண்பர்கள்
ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். உண்மையில் அவ்வாறு எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
நல்லிணக்கம் இல்லாமல் நாடு அபிவித்தியடையாது
நாடு அபிவிருத்தியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் பல இனங்களைக் கொண்டு வாழும் நாட்டில் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். நல்லிணக்கம் இல்லையென்றால் நாடு அபிவிருத்தியடையாது.
குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை
நாட்டின் நாமத்துக்கு எதிராக யார் குற்றம் புரிந்திருந்தாலும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். இராணுவத்தினரோ, அரசியல்வாதிகளோ அல்லது வேறு நபர்களோ நாட்டுக்கு எதிராக குற்றம் புரிந்திருந்தால் நாட்டின் பாதுகாப்புக் கருதி கட்டாயம் தண்டனை பெற்று கொடுக்கப்படும்.
எமது இராணுவம் சிறப்பானது
வரலாற்று அடிப்படையில் எமது இராணுவம் மனிதாபிமானம் கொண்ட சிறப்பானதொன்றாகும். எமது இராணுவத்தினர் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அது அதிகாரம் உள்ளவர்களின் தேவைகளுக்காகவே அவ்வாறு செயற்பட்டிருப்பர்.
குறிப்பாக குற்றத்தில் ஈடுபடுவோரை விட குற்றம் செய்ய தூண்டுபவர்களே பெரிய குற்றவாளிகள். அவர்களையே முதலில் தண்டிக்க வேண்டும்.
40 ஆயிரம் பேர் இறந்தார்கள்
இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் இறந்தார்கள் என குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் உண்மை நிலையை ஆராய வேண்டும். இதன்பின்னரே இதன் உண்மைத் தன்மை பற்றி விளக்க முடியும்.
கிளஸ்டர் பாவித்திருந்தால் பாரதூரமான குற்றம்
இறுதி யுத்தத்தின் போது கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளஸ்டர் குண்டுகள் பாவித்திருக்க வாய்ப்பு இல்லை. எனினும் பாவித்திருந்தால் அது பாரதூரமான குற்றமாகும். இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
பரணகமவின் கருத்துக்கு கடும் கண்டனம்
கொத்தனி ஆயுத சாசனத்தின் பிரகாரம் இந்த ஆயுதப் பயன்பாடு இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது உலகில் தடைசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக 2010 ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியே இந்த தடை உலகில் செயற்பாட்டுக்கு வந்தது. எனவே யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினர் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால் இராணுவத் தேவையின் படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதல்ல ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்த கருத்துக்கு கண்டனம் அமைச்சர் மங்கள கண்டனம் தெரிவித்ததோடு இதுதொடர்பில் முறையான விசாரணை அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM