(எம்.மனோசித்ரா)
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமையின் விளைவாக நாடளாவிய ரீதியில் 16 மாவட்டங்களில் 2800 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையில் குறைந்தது ஒரு வாரத்திற்கேனும் தேர்தல் பிரசார கூட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை அவர்கள் உதாசீனப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.
எனவே சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் துரிதமாக வர்த்தமானிப்படுத்தப்பட்டால் மாத்திரமே இவற்றுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார்.
மேற்கூறிய விடயங்களை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் புதன்கிழமை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு கூறிய மகேந்திர பாலசூரிய மேலும் தெரிவிக்கையில் ,
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட வைரஸ் பரவலுடன் தொடர்புபட்ட சுமார் 2800 நபர்கள் 16 மாவட்டங்களில் பொது சுகாதார பரிசோதகர்களினால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களிலும் இராணுவம் மற்றும் புலனாய்வுப்பிரிவினரிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய பொது சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நாம் கோரியிருந்தோம். எனினும் எந்த கட்சிகளும் அதனை செய்யவில்லை. குறைந்தது ஒரு வாரத்திற்காவது மக்களை ஒன்று திரட்டுவதைத் தவிர்க்குமாறு கோரினோம். அதனையும் அரசியல் கட்சிகள் உதாசீனப்படுத்தியுள்ளன.
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் வர்த்தமானிப்படுத்தப்பட்டால் சட்டதை மீறும் செயல்களின் அடிப்படையில் எம்மால் ஏதேனுமொரு நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும். பிரசார கூட்டங்களை முற்றாக நிறுத்துமாறு நாம் கோரவில்லை. மாறாக பிரசார கூட்டங்களின் போது சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றுமாறு மாத்திரமே கோருகின்றோம்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று மிக முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டது. இதன் போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை சுகாதார பாதுகாப்புடன் நடத்துவது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டதோடு பொதுசுகாதார பரிசோதகர்கள் முகங்கொடுத்துள்ள தொழில் ரீதியான சில இடர்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பொதுத் தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. அவற்றை மிகத் துரிதமாக தேர்தலுக்கு ஏற்ற வகையில் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. பொது சுகாதார பரிசோதகர்கள் தேர்தலின் போது தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு குறித்த வர்த்தமானி அத்தியாவசியமானதாகும். குறித்த வழிமுறைகள் வர்த்தமானிப்படுத்தப்படாமையின் காரணமாக அவை மீறப்படுகின்றன. அதனால் கொரோனா வைரஸ் பரவலில் இரண்டாவது அலை ஏற்படுவதைத் தடுப்பதில் பாரிய சவால் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டினோம்.
மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பொது சுகாதார பரிசோதர்களின் கண்காணிப்பு உள்ளிட்ட ஏனைய பணிகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இதன் போது கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொது சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய ஒத்துழைப்பையும் பொதுத் தேர்தலிலும் வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வர்த்தமானி தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் கலந்துரையாடலின் போதே உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அத்தோடு மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு ஆணையாளர் இனக்கம் தெரிவித்தார்.
எனவே பொதுத் தேர்தலில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுமார் 2800 சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளனர். எனவே தான் தேர்தலின் போது சாதாரண கடமைகளில் மாத்திரமின்றி கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் எம்மை ஈடுபடுத்துமாறு கோரியுள்ளோம். எவ்வாறிருப்பினும் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் துரிதமாக வர்த்தமானிப்படுத்தப்பட்டால் எம்மால் எமது கடமைகளை முறையாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மாறாக வர்த்தமானியை வெளியிடுவது தாமதப்படுத்தப்படும் போது எமக்கு நடவடிக்கைககளை எடுப்பத்தில் சிக்கல் ஏற்படும். இதுவரையில் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தேர்தல்கள் ஆணைக்குழுவும் இவ்விடயம் தொடர்பில் சுயாதீனமான ஸ்திரமான நிலைப்பாட்டிலேயே உள்ளது. ஓரிரு தினங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM