ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்தர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதியல்ல - சகல இன மக்களுக்கும் அவரே ஜனாதிபதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு - விவேகானந்த மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கலாநிதி வி.ஜனகன் மேலும் கூறுகையில், மதங்களை வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய அதிகார வர்க்கத்துக்கு எதிராக போராட வேண்டிய தேவைப்பாட்டில் தமிழ் பேசும் சமூகம் தற்போது தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டு மக்கள் அனைவரும் தமிழர்களாக, சிங்களவர்களாக, முஸ்லிம்களாக, கிறிஸ்தவர்களாக ஒன்று சேர வேண்டிய காலகட்டத்தில் இருப்பதாகவும், அதிகார வர்க்கத்தினருக்கு இம்முறை தேர்தலில் முறையான பாடத்தை கற்பிக்க வேண்டிய தேவை வாக்காளர்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிபீடம் ஏறிய பின்னர், தான் சிங்கள பௌத்த வாக்காளர்கள் மூலமே வெற்றிபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஒருவருக்கு சிங்களவர்களும், தமிழ் பேசும் மக்களும் வாக்களிக்க முடியும். அதில் எந்தவித தவறும் கிடையாது.
ஆனால், அவர் நாட்டின் அதிபராக பதவியேற்றதன் பின்னர் சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதியல்ல, நாட்டில் இருக்கும் அனைத்து இன, மத பிரிவுகளைச் சார்ந்த மக்களின் தலைவராகவே கருதப்படுவார்.
சிங்கள பௌத்தர்களுக்காக பல பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். ஆனால் நாட்டின் ஜனாதிபதி என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான அரச தலைவர் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுக் குழுவிலும் சிங்கள பௌத்த அதிகாரிகள்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தமிழ் அல்லது முஸ்லிம் உத்தியோகத்தர்களேனும் இதில் உள்வாங்கப்படவில்லை.
அதேவேளை தமிழர்களோ, முஸ்லிம்களோ தங்களுடன் இல்லை என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தற்போது உணர்ந்துவிட்டார்கள்.
இதனை உணர்ந்து அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்களானால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஆனால் அதற்கான எந்தவொரு வழிமுறைகளையும் அவர்கள் கையாளவில்லை என்பது வருந்தத்தக்கது.
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவசியம் என்று மஹிந்த தரப்பினர் உணர்ந்திருப்பார்களானால் தமிழ் பேசும் வேட்பாளர்களை நியமித்திருப்பார்கள்.
அதேவேளை, ஆட்சியமைத்த பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக அவர்கள் உதவிகளை வழங்கியிருக்கலாம்.
ஆனால், பிரதமர் மஹிந்த தரப்பினர் ஆட்சியமைத்த பின்னர் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கேனும் எந்தவித நன்மைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கது.
இதனிடையே, அஞ்சல் மூல வாக்களிப்புகள் நேற்று முன்தினம் ஆரம்பித்த நிலையிலும், கண்டியில் மருத்துவர்களும், தாதியர்களும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தார்கள்.
இது இந்த அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்றது.
எவ்வாறாயினும், கொவிட் 19 தொடர்பான பிரச்சினை மக்கள் மத்தியில் மிகவும் தீவிரமடைந்து செல்கின்றது. அந்த பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்காமல் பொது மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதன் ஊடாக அரசாங்கம் நாட்டு மக்களின் முழுமையான நம்பிக்கையை இழந்திருக்கின்றது.
கொவிட் 19 தொற்று நோய் தொடர்பில் ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் உட்பட அனைத்து மருத்துவ துறைசார் மத்திய நிலையங்களும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இணைந்து கொண்டார்கள்.
அந்தவகையில், கொவிட் 19 தொற்று தொடர்பில் வெளியான பரிசோதனை முடிவுகளில் நேர்மறை பிரதிபலன்கள் கிடைத்தால் தொற்று ஏற்படவில்லை என்று அர்த்தப்படும்.
ஆனால், நேர்மறை பிரதிபலன்களில் தவறு ஏற்படுவது என்பது கிடைக்கும் மாதிரிகளில் சில நேரங்களில் 5 சதவீதமாகக் கூட இருக்கலாம்.
அனைத்து பிரதிபலன்களும் நேர்மறை தவறாக அமையாது. இந்த சந்தர்ப்பத்தில் தங்களிடம் போதுமான பி.சி.ஆர் பரிசோதனைக் கூட வசதிகள் இருப்பதாகவும் பல்கலைக்கழகங்களில் இருந்து கிடைக்கும் பரிசோதனை முடிவுகள் அவசியம் இல்லை என்று அரசாங்கம் திடீரென்று அறிவித்துள்ளது.
ஆனால், ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூட உத்தியோகத்தர் ஒருவர் வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் தகவலின் படி, நேர்மறையாக கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை அரசாங்கம் நேர்மறை தவறுகளுடன் கூடிய முடிவுகளாக பதிவுசெய்யுமாறு பலவந்தப்படுத்தியமைக்கு அமைவாகவே மாற்றியமைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையிலேயே குறித்த பல்கலைக்கழக ஆய்வு மையம் பி.சி.ஆர் பரிசோதனைகளில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த சம்பவத்தில் உள்ள உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
அதேவேளை, அனைத்து பாடசாலைகளுக்கும் 5 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அமுல்படுத்தல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட வாய்ப்பிருக்கின்றது.
கொரோனா பிரச்சினையிலேயே இத்தனை பொய்களை கூறி, மக்களின் சுகாதார பிரச்சினையில் பெருமளவில் தில்லுமுல்லுகளை செய்கின்ற அரசாங்கம் எந்த அடிப்படையில் தாங்கள் உறுதியளிக்கின்ற விடயங்களில் முறையாக செயற்படுவார்கள் என்று நம்பிக்கை கொள்ள முடியும் என்றும் கலாநிதி வி.ஜனகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதவிர, மொட்டு அணி சார்பாக தேசியப் பட்டியலில் இரண்டு முஸ்லிம்களையும், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நியமிக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மக்கள் ஆணையுடன் நியமிக்கப்படாமல் தேசிய பட்டியல் ஊடாக நியமிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்பது கேலிக்கூத்தான விடயமாகும்.
மக்களின் பிரதிநிதிகள் யாரெனில் மக்களின் விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM