மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பேன் இதற்கென பிரதான கடமைகளையும் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் நம்பிக்கையுடனும் என் இதய சுத்தியுடனும் செய்து காட்டுவேன் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டார்.
மேலும் இந்நாட்டின் அனைத்து விதமான நிறுவனங்களுக்கு இடையேயும் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றவகையில் மத்திய வங்கி கோப் குழு தொடர்பான அனைத்துவிதமான விசாரணைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அழுத்தங்களைக் கடந்து இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் எனவும் உறுதியளித்தார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கியின் புதிய ஆளுநரான இந்திரஜித் குமாரசுவாமியின் கன்னி ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எனது நியமனம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு வழங்கப்பட்டது என்பதை நான் உணர்வேன். இந்நிலையில் குறித்த சந்தர்ப்பத்தை இலங்கையிலுள்ள மக்களின் மனதை வென்றெடுப்பதற்கான ஒரு தருணமாகவே நான் நினைக்கின்றேன். மத்திய வங்கி என்பது மிகவும் நம்பிக்கை வாய்ந்ததும் நிதி தொடர்பில் பூரண பொறுப்பு மிக்கதுமான ஒரு நிறுவனமாகும். அந்தவகையில் எனது கடமை பொறுப்புகளை நிறைவேற்றும்போது மக்களுக்காக செயற்பட வேண்டியவனாக உள்ளேன்.
இலங்கையின் எதிர்கால நோக்கு தொடர்பிலும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை விருத்தி செய்வதற்கும் பல முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்தவகையில் பொருளாதார கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை செயற்படுத்துவதற்கு மத்திய வங்கியே பிரதான நிறுவனமாக செயற்படும் என்பதில் ஐயமில்லை.
தற்போது அரசாங்கம் பல பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் இலங்கையின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அது நிலையான அல்லது நீண்டகால பயணத்தை நோக்கிச் செல்கின்றதா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. எனவே, நாம் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தியை நோக்கி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வரலாற்றை நோக்கும்போது நாம் அபிவிருத்தியில் எந்நேரத்திலும் பின்தங்கியிருக்கவில்லை. குறிப்பாக 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் எமது அபிவிருத்தியில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆயினும் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பொருளாதாரம் சரிபாதியில் சென்றபோதும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஓர் அரசியல் சாதகத் தன்மை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது நாம் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி இலகுவாகப் பயணிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் அடுத்தகட்டம் என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்க வேண்டும். எமக்கு சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளும் அபிவிருத்தி செய்வதில் பல ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன.
எனவே என்னால் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என நம்புகின்றேன். அதுவே மத்திய வங்கியின் குறிக்கோளாகவும் உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை தான் சவாலாக ஏற்றுக்கொள்கின்றேன். பொருளாதார அடிப்படைகளை அறிமுகப்படுத்தி பொருளாதார ஸ்திரத்தன்மையை விருத்திசெய்ய முடியும் என நினைக்கின்றேன்.
கேள்வி: மிகப்பெரியளவில் மோசடி செய்த குற்றச்சாட்டில் தற்போது அமெரிக்காவில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ராஜ் ராஜரத்தினத்துக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறமுடியுமா?
பதில்: அவர் என்னுடைய நண்பர். என்னுடன் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தவர். அதேவேளை 10 மாதங்களாக அவரது நிறுவனத்தின் பொருளாதார சிக்கல்கள் தொடர்பில் நான் ஆய்வறிக்கைகளை தயாரித்துள்ளேன். அவர் பல தன்னார்வப் பணிகளுக்கு உதவியுள்ளார்.
2011 ஆம் ஆண்டிலிருந்து அவர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். ஒரு நண்பன் என்ற வகையிலும் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து சாதித்த வியாபாரியாகவும் நான் அவரை அறிவேன். சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கற்கைநெறிக்காக நான் பட்டதாரியாக இருந்தபோது அவரும் அங்கு கல்வி பயின்றார். அதனடிப்படையில் எனக்கும் பல்வேறு உதவிகளை அவர் செய்துள்ளார்.
அவர் இலங்கையில் கைதுசெய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே எனக்கு தெரியும். எனது தனிப்பட்ட வகையில் அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். சுனாமி காலத்தின்போதும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு நன்கொடை உதவிகளை அவர் வழங்கியிருந்தார்.
கேள்வி: தற்போது உங்களுக்கு வழங்கப்பட்ட நியமனம் அரசியல் சார்பானது. அந்தவகையில் உங்களால் அரசியல் சார்பற்றவராக செயற்பட முடியும் என நினைக்கிறீர்களா?
பதில்: எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பதவியை அதிர்ஷ்டவசமாக கிடைத்ததென நான் நினைக்கவில்லை. முறையான அடைவுமட்டத்தின் அடிப்படையில் குறித்த பதவிக்குத் தகுதியானவனாகவே நான் உள்ளேன் என நினைக்கிறேன். அத்தோடு மத்திய வங்கியை பொறுப்புணர்வுமிக்க வகையில் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடமை என்னிடம் உள்ளது.
தொழில்நுட்பம், ஏற்றுமதி தொடர்பில் தற்போது உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அத்தோடு சந்தைப் பொருளாதாரத்தில் அடைய வேண்டிய பல அபிவிருத்தி திட்டங்களை நாம் வரையறுத்து செயற்பட வேண்டும். எனக்கு குறித்த பணியை நிறைவேற்றுவதற்கு தற்போது சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஆயினும் இந்தப் பதவி சவால் மிக்கது என்பதையும் நான் உணர்கின்றேன்.
கேள்வி: கோப் குழுவின் விசாரணை தொடர்பில் மத்திய வங்கி இனிவரும் காலங்களில் எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்?
பதில்: நான் ஏற்கனவே கூறியது போல அனைத்து அரச நிறுவனங்களினதும் உண்மையான மற்றும் பொறுப்புணர்வு மிக்க செயற்பாடுகள் அவசியமான தேவைப்பாடாக உள்ளது. அவ்வகையில் மத்திய வங்கியும் அபிவிருத்திக்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கும் தற்போது கோப் குழுவின் விசாரணை எம்மட்டத்தில் இருப்பினும் அல்லது குறித்த விசாரணைகளுக்கு மத்திய வங்கியினால் எவ்வகையான ஒத்துழைப்புகளை வழங்க முடியுமோ அதற்கான பூரண ஒத்துழைப்பை எந்நேரத்திலும் வழங்கத் தயாராக இருக்கும்.
கேள்வி: தற்போது உங்களுக்குள்ள பிரதான சவாலாக எதனைக் கருதுகிறீர்கள்?
பதில்: அபிவிருத்திக்கான பாதைகள் தற்போது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் குறித்த அபிவிருத்தி நிலைத்திருக்கக் கூடியவகையில் அல்லது தக்கவைத்துக் கொள்ளக்கூடிய செயற்பாடுகளை மத்திய வங்கி மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது. நாம் பல அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். ஆனால், அவை நிலையானதாக உள்ளதா என்பதை அறிய வேண்டும். இதற்கு நிதியமைச்சும் பல்வேறு வகையில் எமக்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றது.
கேள்வி: தற்போது எவ்வாறான துணை செயற்றிட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: இறுதியாக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களுக்கு பின்னரான காலப்பகுதியில் அல்லது கடந்த ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட பல்வேறு பொருளாதாரக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. புதிதாக நாம் சந்தைப் பொருளாதாரத்தை தேடுவதற்கு அவசியங்கள் இல்லை. ஏனெனில் தெற்காசியாவில் எந்நாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இலங்கைக்கு உள்ளது. மத்திய கேந்திர நிலையமாக அனைத்து நாடுகளுக்கும் இலகு வர்த்தகத்தை மேற்கொள்ள எமக்கு தகுந்த சூழ்நிலை உள்ளது.
கேள்வி: ஆறு வருட காலப்பகுதிக்குள் தொடர்ந்தும் உங்களால் பணியாற்ற முடியும் என நினைக்கிறீர்களா?
பதில்: ஆறு வருட காலங்களும் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை என்பதை விட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பில் என்னால் பங்கெடுக்க முடியுமானால் அதற்கு நான் பெருமைப்படுகின்றேன். ஆறு வருடங்கள் என்பதனை விட நான் ஆளுநராக இருக்கும் காலப்பகுதியில் சிறந்த பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள முடியும் எனக் கருதுகிறேன். அத்தோடு மத்திய வங்கியின் ஊழியர்கள் அனைத்து அரச நிறுவனங்களிலிருந்தும் வேறுபட்டவர்கள், திறமையானவர்கள், அனுபவமுள்ளவர்கள். ஆகவே என் னால் இவர்களைக்கொண்டு திறம்பட செயற்பட முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM