நாட்டில் மீண்டும் கொரோனா அச்சம் தலைதூக்கியுள்ளது. பொலனறுவை கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இதுவரை 342 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் நேற்று மாத்திரம் 300 கொரோனா தொற்றாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் மீண்டும் அனைத்து செயற்பாடுகளும் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பொதுவாகவே மக்கள் மத்தியில் அச்ச உணர்வை மேலோங்கச் செய்துள்ளது.
இந்நிலையில் தேர்தலும் நெருங்கிக் கொண்டு வருவதை காணலாம். அரசியல்வாதிகள் தங்கள் வீரதீரச் செயல்களை தேர்தல் மேடைக்கு மேடை பேசிவருகின்றனர். இவை அனைத்துக்கும் மத்தியில் மக்கள் அச்சம் இல்லாது வாக்களிப்பு நிலையத்துக்கு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதிலேயே அனைத்து வெற்றியும் தங்கியுள்ளது.
ஜனநாயக நாடொன்றில் வாக்குரிமையும் வாக்களிப்பும் முக்கியமானதாகும்.எனவே தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டுமானால் அச்சமற்ற நிலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி தேர்தலில் வாக்களிப்பது அவசியமாகின்றது. தேர்தல் திணைக்களமும் வாக்காளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து அக்கறையின்மையே காணப்படுகின்றது என்றும், தேர்தலில் வாக்களிப்பின் அவசியம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப அதிக விலை செலுத்த வேண்டியுள்ளது என்றும் தனது ஆதங்கத்தை பிரஸ்தாபித்துள்ளார்.
வாக்களிப்பின் போது கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை . இதன் பொருட்டு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கியுள்ளார். தேசிய ஊடகங்களின் ஆசிரியர்களை நேற்று முன்தினம் சந்தித்து உரையாடிய போதே இத்தகவலை அவர் வெளியிட்டார்.
உண்மையில் வடக்கு, கிழக்கு மக்கள் தேர்தல் தொடர்பில் அக்கறை இல்லாது இருப்பதற்கான காரணம் என்ன ? என்பது தொடர்பில் ஆராய வேண்டும். கொரோனா அச்சமா ? வேட்பாளர்கள் மீதான வெறுப்பா ? தேர்தல் தொடர்பில் நம்பிக்கையீனமா ? எதைச் செய்தும் எந்த பயனும் இல்லை என்ற விரக்தியா ? என்பது தொடர்பில் முதலில் ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.
குறிப்பாக அரசியல்வாதிகளின் சொல்லும் செயலும் மக்களை விரக்தியடையச் செய்துள்ளது என்பதே பொதுவான அபிப்பிராயமாகும் . எவ்வாறெனினும் அதற்காக வாக்களிக்காது விடுவது என்பது நிலைமையை மேலும் மோசமடைய செய்வதற்கு வழிவகுப்பதாக அமையும்.
வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல நாட்டின் இதர பகுதிகளிலும் மக்கள் மத்தியில் இதே வகையான மன உணர்வே காணப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே அந்த மனநிலையை மாற்றி அனைவரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளச் செய்வது அனைத்து தரப்பினரதும் கடப்பாடாகும்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM