(ஆர்.யசி)
ராஜபக் ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயங்க முடியாது. அவர்கள் எதிர்க்கட்சி அரசியலை மாத்திரமே விரும்புகின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றங்களை முன்னெடுப்போம் எனவும அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள், மற்றும் அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கடந்த தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த நபர்கள் என்ற வகையில் நாட்டிற்கு பல நல்ல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நாம் முயற்சித்தோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனால் அப்போதைய பிரதமரும் அவரது அணியுமே அரசாங்கத்தை குழப்பம் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குறிப்பாக மத்திய வங்கி ஊழல் விவகாரத்தில், அப்போதைய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நீக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முயற்சித்த போதிலும் ரணில் விக்கிரமசிங்கவும், ரவி கருணாநாயகவும் அதற்கு தடையாக செயற்பட்டனர். ஆளுனரை நீக்க வேண்டும் என பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அதனை ஐக்கிய தேசிய கட்சி கவனத்தில் கொள்ளவில்லை. பல நெருக்கடிகளை கொடுத்த வேளையில் பிரதமர் ராணில் விக்கிரமசிங்கவும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் வெளிநாடு சென்றுவிட்டனர். பின்னர் நானே அர்ஜுன மகேந்திரனை நீக்கும் கடிதத்தை தயாரித்து அதனை உரிய தரப்பிடம் கொண்டு சேர்த்து நடவடிக்கை எடுத்தேன்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பல நல்ல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வாய்ப்புகள் அமைந்தது. ஆனால் அதனை முன்னெடுக்க முடியாது தடைப்பட அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் மோசமாக செயற்பட்டதே காரணமாகும். நல்லாட்சி அரசாங்கம் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படவும் அதுவே காரணமாக அமைந்துவிட்டது. எவ்வாறு இருப்பினும் இன்று மீண்டும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் தனி அரசாங்கம் ஒன்றினை உருவாக்க முடிந்துள்ளது. இந்த தேர்தலில் எம்மால் வெற்றிபெற முடியும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாம் வெற்றிபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மக்கள் பிரதான எதிர்க்கட்சியை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். எனவே சகல தரப்பினரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட வேண்டாம், நாம் எந்த தரப்பையும் நிராகரிக்கவில்லை. இந்த நாட்டை நேசிக்கும் சகல தரப்பினருடம் நாம் இணைந்து செயற்பட விரும்புகின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் இனவாதம் மதவாதம் பேசும் சிலர் உள்ளனர், ஆனால் அவர்களின் கருத்துக்களை ஜனாதிபதியோ, பிரதமரோ கேற்கப்போவதில்லை. அவர்கள் இந்த நாட்டினை நேசிக்கும் நபர்களை விரும்புகின்றனர். அதேபோல் நாடாக நாம் முன்னேற வேண்டும் என்பதை விரும்புகின்றனர். ராஜபக் ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் கூட்டணி அமைக்க முடியாது. அவர்களின் கொள்கைக்கு அமைய அவர்கள் எதிர்கட்சியாக இருக்கவே விரும்புகின்றனர். அதற்கு பல காரணிகள் உள்ளன. எவ்வாறு இருப்பினும் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றவுடன் நாட்டில் பல மாற்றங்கள் நிகழும், அது மூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழலில் உருவாகிக்கொடுக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM