வடக்கே தலைமன்னாருக்கும் தமிழகத்துக்கும் இடையேயான தூரம் என்பது கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான தூரத்தை விடவும் பன்மடங்கு குறைந்தது.
இதன் காரணமாகவே யுத்த காலத்தில் புலிகள் அடிக்கடி தென்னிந்தியா சென்று வந்தனர் .அதேபோன்று வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு தாக்குப்பிடிக்க முடியாத அப்பாவி மக்கள் படகுகளில் ஏறி தப்பிச் சென்று தென்னிந்தியாவின் மண்டபம் முகாமில் தஞ்சம் அடைந்தனர். படகு ஓட்டிகளுக்கும் தனுஷ்கோடி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, கச்சதீவு என்பன அத்துப்படி.
இந்த நிலைமையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கூட வடக்கு மற்றும் தென்னிந்திய கடல் பயணங்கள் குறைந்தபாடில்லை. யுத்தத்துக்கு முந்திய ஒரு காலகட்டத்தில் உணவுப்பொருட்கள் ஜவுளிகள் என்பனவும் அங்கிருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு வட பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
அதேபோன்று கடத்தல்காரர்களும் விட்டுவைக்கவில்லை. தங்கம் முதல் இன்று கேரளா கஞ்சா வரை சர்வ சாதாரணமாக கடத்தப்பட்டு வருகிறது .மன்னாரில் இருந்து புறப்படும் இந்த அதிவேக படகுகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் தனுஷ்கோடியை வந்தடைந்து விடும்.
என்னதான் கடல் கண்காணிப்பு அதிகரித்திருந்தாலும் கடத்தல்காரர்கள் படையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு மறைந்து விடுவார்கள். இவ்வாறான சட்டவிரோத கடத்தல், யுத்த காலத்திலே அடங்கியிருந்தன.
புலிகளின் ஒரு பிரிவான கடற் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அடிக்கடி கடல்புலிகளுக்கும் படையினருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெறும். இதனால் இலங்கை, இந்திய மீனவர்கள், கடத்தல்காரர்கள் வட பகுதி கடற்பரப்பை தவிர்த்து வந்தனர் .
யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு தற்போது மீண்டும் சட்டவிரோத படகு பயணங்களும் கடத்தல்களும் தலைதூக்கியுள்ளன.
நிலைமை இவ்வாறிருக்க வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அகதிகள் சிலர் கொரோனா வைரஸுக்கு மத்தியில் படகுகள் மூலம் இலங்கைக்கு தப்பி வருவதாகவும் இதனை தடுக்கும் வகையிலேயே கடல் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அங்குள்ள கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக சில அகதிகள் இந்தியாவை விட்டு வெளியேற முயற்சிக்கிறார்கள். அவர்கள் மீன்பிடி படகுகளை எதிர்பார்த்து இலங்கைக்கு சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றார்கள் என்றும் வடக்கு ஆளுநர் திருமதி பீ எஸ் எம்.சார்ள்ஸ் எச்சரித்துள்ளார் .
இந்நிலையில் அகதிகள் எவரும் சட்டவிரோதமாக தென்னிந்தியாவில் இருந்து வெளியேற முயற்சிக்கவில்லை என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இதில் உண்மை என்ன என்பதை கண்டறிய வேண்டும் . உண்மையிலேயே அகதிகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவார்களானால் அது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் .
வடக்கில் இருக்கும் நிம்மதியும் இல்லாது போய் அச்சுறுத்தல் தலைதூக்கிவிடும். இன்றைய காலகட்டத்தில் அவரவர்கள் தங்கள் தங்கள் இடங்களில் இருப்பதே இந்த கொடிய நோயில் இருந்தும் தப்புவதற்கு ஒரே மார்க்கம் ஆகும்.
அதை விடுத்து பாதுகாப்புத் தேடி அங்குமிங்கும் ஓடித் திரிவதில் எந்தவித அர்த்தமும் இருக்காது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM