நாடளாவிய ரீதியில் இன்றையதினம் அனைத்து அரச பாடசாலைகளும் திறக்கப்படவுள்ள நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணிக்குழுவினர் இன்று முதல் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
கொவிட் 19 வைரஸ் பரவுவதால் கடந்த மார்ச் 13 ஆம் திகதி தொடக்கம் மூடப்பட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று (29) மீண்டும் திறக்கப்படுகிறது.
கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகபெருமாவின் வழிகாட்டுதலின் கீழ், மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து முழு கவனம் செலுத்தி இரண்டாவது தவணையை நான்கு கட்டங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் கட்டத்தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வரவழைக்கப்படுவதில்லை என்பதோடு அனைத்து அரச பாடசாலைகளிலும் அதிபர்கள், துணை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள்.
இன்று (29) முதல் ஜூலை 5 வரை தொடங்கும் இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, பாடசாலையில் துப்புரவு செய்தல், கிருமி நீக்கம், கை கழுவுதல் வசதி மற்றும் பிணியாளர் அறை வசதிகள் உள்ளிட்ட சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படுவதோடு, மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்ட பின் கற்பித்தல் செயற்பாடு நடைபெறும் விதம் குறித்த முன்கூட்டிய திட்டமிடல் செயற்பாடு அதிபர்கள், கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு முறைகள் மற்றும் அறிவுரைகள் தற்போது அனைத்து மாகாண அதிகாரிகள் ஊடாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலைகளுக்கு முழு ஆதரவையும் வழங்க மாகாண சுகாதார அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூலை 6 ஆம் திகதி தொடங்கும் போது 13, 11 மற்றும் 5 ஆம் தரங்களில் உள்ள மாணவர்கள் மட்டுமே இந்த கட்டத்தில் அழைக்கப்படுவார்கள்.
பாடசாலையின் மூன்றாம் கட்டம் ஜூலை 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 12 மற்றும் 10 ஆம் தர மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள். நான்காவது கட்டத்தில், 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்காக பாடசாலைகள் ஜூலை 27 ஆம் திகதி தொடங்கும். 1 மற்றும் 2 ஆம் தரங்களில் உள்ள மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.
கல்வி அமைச்சின் செயலாளர் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதோடு, அதில் கூறப்பட்டவாறு அனைத்து பாடசாலைத் தலைவர்களும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி பிள்ளைகளின் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி அமைச்சு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 105 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பாடசாலைகள் இன்று முதல் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM